யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது
யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழில் நேற்று 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 ஆயிரத்து 944 பேர் மாவட்டத்தில் இன்று வரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இறப்புக்களை பொறுத்தவரை 274 ஆக அதிகரித்துள்ளது அதேநேரம் 5641 குடும்பங்கள் யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இரண்டாம் கட்ட தடுப்பூசி நேற்று வரை 2 இலட்சத்து 15 ஆயிரத்து 552 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 30 வயதிற்குட்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் சுகாதாரப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய விவரங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பியிருக்கிறோம்.
அதற்குரிய அறிவுறுத்தல் கிடைத்த பின் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் மேலும் தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று நிலைமையானது அபாய நிலையிலேயே காணப்படுகின்றது.
பொதுமக்கள் பொது முடக்கத்தினை துஸ்பிரயோகம் பண்ணாது தங்களையும் பாதுகாத்து சமூகத்தையும் பாதுகாக்க செயற்பட சகலவிதமான விழிப்புணர்வு செயற்பாடுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.(15)