நாம் இலங்கையில் தான் இருக்கின்றோமா அல்லது அரபு நாடொன்றில் இருக்கின்றோம் என்ற சந்தேகம் நேற்றிரவு பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
இதுவரை காலம் எரிபொருள் இல்லை. மின்சாரம் இல்லை. எரிவாயு இல்லையென்று வீதிவீதியாக கண்ணீர் வடித்த மக்களைத் தான் பலரும் பார்த்தது உண்டு.
ஆனால் திடீரென நேற்று இரவு சுமார் 7.30 மணிக்குப் பின்னர் நுகேகொடை மிரிஹான பகுதியில் ஒன்று கூடிய சிறுதொகை மக்கள் அரசுக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும் விலையேற்றத்தை கண்டித்து கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

இந்நிலையில், மழைத்துளி வெள்ளம் போல் திரண்டது போன்று சற்று நேரத்தில் மக்கள் அலை மோதத் தொடங்கியதுடன் நிலைமை கட்டுமீற ஆரம்பித்தது.
சுமார் 10 மணி அளவில் போராட்டம் ஆக்ரோஷம் அடையவே, படையினர், பொலிஸார் எனப் பலரும் தங்கள் படைப்பிரயோகங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இரு தரப்பு மோதல்கள் மற்றும் இழுபறிகள் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடி ஒலி, ஒளி ஒளிபரப்பானதும் நிலைமை கட்டுமீறி சென்றது.
நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர், பொலிசார் பெரும் கஷ்டங்களுக்குள்ளாக நேர்ந்தது.
அவர்களிலும் 6 பேர் காயமடைய நேரிட்டது. இதனை அடுத்து கொழும்பு மாவட்டத்தில் உடனடியாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.
அதுபோக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் தொடரத்தொடர மக்கள் அனல் பூத்த நெருப்பாக உள்ளனர்.
எதுவாக இருப்பினும் இது ஆரம்பமா ? இல்லை முடிவா ? என்பதை காலம் தான் கூற வேண்டும்.