Site icon ilakkiyainfo

பணப் பரிசைக் கழிவறையில் கிழித்து வீசிய மூதாட்டி

ஜேர்மனியைச் சேர்ந்த 63 வயதான மூதாட்டி ஒருவர், அதிஷ்ட இலாபச் சீட்டில் தான் வெற்றிபெற்ற மொத்தப் பணத் தொகையையும் கழிவறையில் கிழித்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் எஸ்ஸன் நகரைச் சேர்ந்த ஏஞ்செலா மேயர் எனப்படும் குறித்த மூதாட்டிக்கு அதிஷ்ட இலாபச் சீட்டின் மூலம் 330,000 யூரோக்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்துத் தனக்குப் பரிசு விழுந்ததைக் கொண்டாட நினைத்த அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.

இந்நிலையில் போதையில் வீட்டுக்கு திரும்பிய நேரத்தில் அவருக்கு, இறந்துபோன அவருடைய கணவரைக் கவனித்துக்கொண்ட முதியோர் இல்லத்தில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது.
குறித்த கடிதத்தில் ”உங்கள் கணவரைப் பராமரித்ததற்கான கட்டணம் நிலுவையில் உள்ளது எனவும், அதனை உடனடியாகச் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்துள்ளது.

‘ தனக்கு லொட்டரியில் பணம் கிடைத்ததை அறிந்துகொண்டுதான் முதியோர் இல்லம் இப்படியான முடிவில் இறங்கியுள்ளது ‘ என நினைத்த அவர் ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த மொத்தப் பணத்தையும் கிழித்து வீட்டில் இருந்த கழிவறையில் வீசியுள்ளார்.

இச்சம்பவமானது நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், மது போதையில் பணத்தினை அழித்ததால் அதனை குற்றமாக கருத முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும் இவ் வழக்கில் இழப்பீடாக 4,000 யூரோக்களை செலுத்தவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version