மஸ்கெலியா சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை
By T Yuwaraj
22 Aug, 2022 | 06:24 PM
image
(க.கிஷாந்தன்)
வீட்டுவேலைக்கு சென்ற இடத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்தாகக் கூறப்படும் மலையக சிறுமியின் உடலம், மஸ்கெலியா, மொக்கா தோட்டத்திலுள்ள பொது மயானத்தில் இன்று (22.08.2022) அடக்கம் செய்யப்பட்டது.
மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள 16 வயதான ரமணி என்ற சிறுமி ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
பிரபல அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஒருவரின், கம்பஹாவில் உள்ள வீட்டிலேயே பணி புரிந்துள்ளார்.
சுமார் 6 மாதங்கள் வரை அங்கு வேலைசெய்து வந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நீச்சல் தடாகத்தில் விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டதாலேயே மரணித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், இன்று (22.08.2022) இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.
உயிரிழந்த சிறுமியின் தந்தை அவரை சிறுவயதிலேயே விட்டு சென்றுள்ளார். தாயும் மறுமணம் முடித்துள்ளார். இதனால் மாமாவின் அரவணைப்பிலேயே இவர் வளர்ந்து வந்தார் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மையை கண்டறியப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிறுமிகளை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும், மலையக பகுதிகளில் உள்ள சிறார்கள், தரகர்களால் திட்டமிட்ட அடிப்படையில் இலக்கு வைக்கப்படுகின்றனர்.