ilakkiyainfo

ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங் என இரு துறைகளிலும் இந்திய அணியின் பலவீனங்கள் வெளிப்பட்டன.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்தது. விராட் கோலி 60 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டத்தில் எந்தக் கட்டத்தில் உறுதியான ரன்குவிப்பு இல்லை.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 1 பந்து மீதம் இருக்கையில் 182 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லீக் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு இதன் மூலம் பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெறக்கூடும் என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.

 

4 பந்துகளில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஒரு பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. அடுத்த பந்தில் விக்கெட் விழுந்தது. எனினும் அடுத்த பந்தில் இரண்டு ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

முகமது நவாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியின் முடிவில் பேசிய ரோஹித் ஷர்மா பாகிஸ்தான் போட்டியில் பாடம் கற்றுக் கொண்டதாகக் கூறினார். கோலி அற்புதமாக ஆடியதாகவும் அவர் பேசினார்.

இந்தியாவின் ஆட்டம் எப்படி இருந்தது?

முதலில் பேட் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மாவாவும் கே.எல். ராகுலும் சீராக ரன்களைக் குவித்தனர்.

முதல் ஓவரிலேயே மிட்விக்கெட் திசையில் சிக்சரை அடித்து ரோஹித் ஷர்மா ரன் குவிப்பை வேகப்படுத்தினார்.

பதிலுக்கு மூன்றாவது ஓவரில் ராகுல் இரண்டு சிக்சர்களை அடித்தார். ரோஹித் ஷர்மா 28 ரன்களை எடுத்திருந்தபோது ஹேரிஸ் ராஃப் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு வந்த விராட் கோலி மிக மெதுவாகவே ரன்களை எடுக்கத் தொடங்கினார்.

ஆறாவது ஓவரில் ஷதாப் கான் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் வெளியேறியதால் இந்தியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து சற்று தடுமாறியது. அடுத்து வந்த சூர்ய குமார் யாதவும் 13 ரன்களுக்கு வெளியேறினார்.

இந்தியா பாகிஸ்தான்

கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்திருந்தது. கோலியும் ரிஷப் பண்ட்டும் ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ரன் குவிப்பு வேகம் குறைந்திருந்தது. 14-ஆவது ஓவரில் ஷதாப் கானின் பந்துவீச்சில் ரிஷ்ப் பண்ட் ஆட்டமிழந்தார்.

தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட அவர் வெறும் 14 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இதற்கு முன் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றிக்கு உதவிய ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அது ஆட்டத்தின் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது.

தீபக் ஹோடாவும் விராட் கோலியும் 16 மற்றும் 17-ஆவது ஓவர்களில் மிக மெதுவாகவே ரன்களை எடுத்தார்கள். 18-ஆவது ஓவரில் சிக்சர் அடித்து தனது அரைச்சதத்தை கடந்தார் விராட் கோலி. அதைத் தவிர கடைசி 5 ஓவர்களில் சிக்சர் எதுவும் அடிக்கப்படவில்லை.
இந்தியா பாகிஸ்தான்

கடைசி ஓவரில் கோலி சந்தித்த முதல் மூன்று பந்துகளில் ஒரு வைட் தவிர வேறு ரன்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. நான்காவது பந்தில் இரண்டாவது ரன்னுக்கு முயன்ற கோலி ரன் அவுட் ஆனார். 44 பந்துகளில் ஒரு சிக்சர் 4 பவுன்டரிகள் உள்பட 60 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

அடுத்த இரு பந்துகளையும் ரவி பிஷ்னோய் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் இந்திய அணி 181 ரன்களை எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் இந்தியாவின் ராகுல், பண்ட் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் ஆட்டம் எப்படி இருந்தது?

இரண்டாவதாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் இந்திய அணியைவிட நிதானமாக ஆடியது. இரண்டாவது ஓவரில் அந்த அணி வெறும் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. நான்காவது ஓவரில் கேப்டன் பாபர் ஆஸம் பிஷ்னோய் பந்துவீச்சில் வெளியேறியதால் அந்த அணி தடுமாறியது.

ஆனால் அடுத்த ஓவரிலேயே ரிஷ்வானும் ஃபக்கர் ஷமானும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். 9-ஆவது ஓவரில் ஃபக்கர் ஷமான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு பாகிஸ்தானின் ரன்குவிப்பு வேகம் கணிசமாக அதிகரித்தது. நவாஸும் ரிஸ்வானும் சேர்ந்து பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பை துரிதப்படுத்தினர்.

16-ஆவது ஓவரில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் முகமது நவாஸ் ஆட்டமிழந்தார். 20 பந்துகளில் 2 சிக்சர்கள் 6 பவுண்டர்கள் உள்பட 42 ரன்களை அவர் குவித்தார்.

பாகிஸ்தானின் ரன் குவிப்பில் அவரது பங்களிப்பு முக்கிய இடம் பிடித்தது. அவர் ஆட்டமிழக்கும் நேரத்தில் 27 பந்துகளில் 46 ரன்களை எடுத்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.

இறுதியில் 5 விக்கெட் இழப்பு பாகிஸ்தான் அணி இலக்கை எட்டியது.
ஏமாற்றிய ஹர்திக் பாண்ட்யா

பாகிஸ்தானுடனான கடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் அடிப்படையாக அமைந்தது. பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டார்.

ஆனால் இந்தப் போட்டியில் அவரால் இரண்டு துறைகளிலுமே சற்றும் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

பந்து வீச்சில் 4 ஓவர்களை வீசி 44 ரன்களை வழங்கினார். இவற்றில் ஆறு பவுடன்டரிகள் அடங்கும். எனினும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்தியது மட்டுமே அவருக்கு ஆறுதலாக அமைந்திருக்கும்.

கைநழுவிய 19-ஆவது ஓவர்

பாகிஸ்தான் அணி போட்டியின் முக்கியமான தருணங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய அணிக்கு கணிசமான வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் 19-ஆவது ஓவரை புவனேஸ்வர் குமார் 19 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதில் இரண்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் ஒரு வைட் ஆகியவை அடங்கும். அதனால் கடைசி ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிமையா இலக்கில் பாகிஸ்தான் ஆடும் வாய்ப்பு பாகிஸ்தான் வீரர்களுக்குக் கிடைத்தது.

சரிந்த மிடில் ஆர்டர்

இந்தியாவின் இன்னிங்ஸில் விராட் கோலியை தவிர வேறு யாரும் நிலையாக நின்று ஆடவில்லை. விராட் கோலியும் கடைசி ஓவரில் ரன்களை எடுக்கத் தடுமாறினார். ரிஷப் பண்ட், சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பலவீனமாக அமைந்தது. போட்டியின் முடிவில் பேட்டியளித்த ரோஹித் ஷர்மா இதைக் குறிப்பிட்டார்.

Exit mobile version