ilakkiyainfo

ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

விசாகப்பட்டினத்தில், ரயிலுக்கும் ரயில் நிலைய மேடைக்கும் இடையில் சிக்கி, மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா (20).

இவர், விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர், தினமும் தனது ஊரில் இருந்து ரயில் மூலம் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று (டிச.7ம் திகதி), வழக்கம்போல் இவர் குண்டூர் – ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்லூரிக்கு பயணம் செய்தார். அப்போது, துவ்வாடா ரயில் நிலையம் வந்தபோது, ரயில் நின்றது. அப்போது சசிகலா ரயிலில் இருந்து இறங்கினார்.

அந்த நேரத்தில் இவர் கால் தவறி ரயிலுக்கும், ரயில் நிலைய மேடைக்கும் இடையில் விழுந்தார்.

இதில், அவருடைய இடுப்புப் பகுதி ரயில் நிலைய மேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கியது. இதையடுத்து, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், ரயில் நிலைய மேடை இடிக்கப்பட்டு சசிகலா பத்திரமாக மீட்கப்பட்டார். அதன் பின்னர், அவர் விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவி சசிகலா இன்று (டிச.8ம் திகதி) உயிரிழந்தார்.

மாணவியின் மரணம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘மாணவியின் சிறுநீர் பைகள் கடுமையாக சேதமடைந்து ரத்தம் கசிந்தது. இதனால், உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார்’ என்று தெரிவித்தனர்.

Exit mobile version