மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச பகுதியில் தற்போது பெய்யும் பலத்த மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதி, பாலையடிவட்டை – வெல்லாவெளி பிரதான வீதி, ஆகியவற்றை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து செல்வதனால் அவ்வீதியுடனான தரைவழிப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 128 குடும்பங்களுக்கு உலர்உணவு பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பலத்த மழை காரணமாக அப்பகுதியில் செய்கை பண்ணப்பட்டிருந்த பல நூற்றுக் கணக்கான நெற்செய்கைகளும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியிலுள்ள வேத்துச்சேனை கிராம மக்கள் தொலைபேசி மூலமாக கிராம சேவகருக்கும், பிரதேச செயலாளருக்கும் அறிவித்ததற்கு அமைவாக பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் கிராம சேவை உத்தியோகஸ்த்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், அனத்த முகாமைத்துவ உத்தியோகத்தர், என பலரும், நேரடியாக வள்ளத்தின் மூலம் அக்கிராமத்திற்குச் சென்று நிலமையைப் பார்வையிட்டனர்.

இதன்போது அங்குள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அவர்களுக்குத் தேவையான உலர்உணவு பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

128 குடும்பங்களைச் சேர்ந்த 538 பேர் கொண்டுள்ள அக்கிராமத்திற்கு அங்குள்ள உயர்ந்த நிலப்பகுதியில் பத்து மலசலகூடமும் பொது கட்டடமும் அமைப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என இதன்போது அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version