கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வெர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் இன்று வழக்கு விசாரணைக்கு அழைத்த போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தனி விசாரணையை ஆரம்பித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, கிரிஷ் நிதி மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் வழக்கை ஜூன் 4ஆம் திகதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version