நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லைஎன வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தெரிவித்தார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. குறைந்தது 8ல் இருந்து 10 நிமிடம் வரை அந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம்.
அவர் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். சீமான் விருப்பம் தெரிவித்து அங்கு வருகிறார். சித்தப்பாவும் யார் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாலும் புகைப்படம் எடுத்துக்கொள்வார். ஆனால் அதனை வருபவர்களின் கேமராக்களில் எடுக்க அனுமதி கிடையாது.
குடும்ப உறவினர்களே ஆனாலும் பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும்.
அதன் பிறகு அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவேளை அப்படியான கட்டுப்பாட்டில் சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமலும் இருந்திருக்கலாம்.
அதனால் அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்துவருகிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.