பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் நினைவு இல்லம் வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டது.

பங்களாதேஷில், கடந்த ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதியன்று எழுந்த மாணவர்கள் போராட்டத்தில், மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இதனைத் தொடர்ந்து பங்களாதேஷில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, இராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ நடைபெறலாம் என்ற சூழல் உள்ளது. பங்களாதேஷில் நடைபெற இருக்கும் பொதுத் தோ்தலில் போட்டியிட, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்பட மாட்டாது என்று இடைக்கால அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

இந்நிலையில், அவாமி லீக்கின் தற்போது கலைக்கப்பட்ட மாணவர் பிரிவான சத்ரா லீக், ஷேக் ஹசீனா இணையவழி வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நேற்று (5) இரவு ஷேக் ஹசீனா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சிக்கு எதிராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் பரவியது.

முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா நேரலையாக இணையத்தில் உரையாற்ற இருப்பதாக தகவல் பரவிய நிலையில், போராட்டக்காரர்கள் குழுவினர், டாக்காவில் உள்ள முஜிபுர் ரகுமான் நினைவு இல்லத்தை சேதப்படுத்தி தீ வைத்தனர். பல போராட்டக்காரர்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் ஏறி, கடப்பாரைகள் மற்றும் மரக் கட்டைகளைப் பயன்படுத்தி ஷேக் முஜிபுர் ரகுமானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

Share.
Leave A Reply

Exit mobile version