ஹிக்கடுவ பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் 38 வயதான ரஷ்ய நாட்டவர் என்பதுடன் அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு தேனிலவுக்காக இலங்கைக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தொழில் ரீதியாக ஒரு பொறியியலாளர் என்று கூறப்படுகிறது.

இறந்தவர் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உயிர்காப்பாளர்கள் அவரைக் காப்பாற்ற முயன்ற போதும், அது தோல்வியில் முடிந்துள்ளது.

பின்னர், அந்தக் குழு கடலுக்கு அடியில் நீந்திக் கொண்டிருந்தபோது, ​​ஒரு பாறையில் சிக்கியிருந்த நிலையில், மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த ரஷ்ய நாட்டவரின் சடலம் நேற்று இரவு பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று(22) பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version