மட்டக்களப்பில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஒலிவாங்கியை இடைநிறுத்தியதை அடுத்து சபையில் இன்று (04) அமைதியின்மை ஏற்பட்டது.

கடந்த 20 ஆம் திகதி, மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது, ​​மர்மக் குழு ஒன்று வாள்களால் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

அதேபோல், நேற்று (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நடந்த வாள் வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, ​​இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கருத்து தெரிவிக்க முயன்ற போது, ​​சபாநாயகர் குறுக்கிட்டு, “இது ஒழுங்குப் பிரச்சினை அல்ல, எனவே சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை கொண்டு வரலாம்” என்றார்.

அதேபோல், இது ஒரு தேசிய பிரச்சினை அல்ல என்று சபாநாயகர் கூறியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் திருகோணமலை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் நோயாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்ப முற்பட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி மறுத்திருந்தார்.

இதனையடுத்து, சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் தலையிட்டு நிலையியற் கட்டளைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன மற்றும் அர்ச்சுனாவுக்கு ஒவ்வொரு நிமிடங்களை பெற்றுக் கொடுக்குமாறு கோரிய நிலையில் அவர்களுக்கான ஒரு நிமிடம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version