1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் வெளிநாடு ஒன்றிலிருந்து தாயகத்திற்கு வந்து உடல்களை நீதிமன்ற அனுமதிபெற்று மீள தோண்டி எடுக்கப்பட்டு மார்ச் 23ம் திகதி சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டுவளவிலேயே அடக்கம் செய்துள்ளார்.
அதோடு அவர்களை புதைத்த இடத்தில் கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு குறித்த தந்தையும் உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர்.
அவர்களின் கோரிக்கைக்கு நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடாத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டுள்ளன.