அமெரிக்காவிலிருந்து சீனா நோக்கி வார இறுதியில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் பயணித்தது. குறித்த விமானத்தின் விமானி கடவுசீட்டை எடுத்துச் செல்ல மறந்துள்ளார். இதனால் உடனே மீண்டும் விமானம் அமெரிக்காவுக்கு திரும்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை (22) பிற்பகல் 2 மணிக்கு லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 257 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் UA198 விமானம் சீனாவின் ஷங்காய் நகரத்தை நோக்கி 13½ மணி நேர பயணத்தை ஆரம்பித்தது.

புறப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் கடவுசீட்டு தன்னிடம் இல்லை என விமானி அறிந்துள்ளார். உடனே விமானம் திரும்பி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் (SFO) தரையிறங்கியுள்ளது.

விமானம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து பறந்து சென்று பின்னர் கலிபோர்னியாவுக்குத் திரும்பி சென்றது என விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பயணி ஒருவர் X தளத்தில், “விமானி தனது கடவுசீட்டை மறந்துவிட்டதால் UA198 சர்வதேச விமான நிலையத்துக்கு திரும்பிச் சென்றது. தற்போது, 6+ மணிநேரம் காலதாமதம். இதனை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த மொத்த தவறுக்கும் நீங்கள் என்ன இழப்பீடு வழங்குகிறீர்கள்?” என பதிவிட்டுள்ளார்.

“எதிர்பாராத பயண இடையூறுக்கு” மன்னிப்பு கோரிய விமான நிறுவனம், ஒரு முகவர் மூலம் பயணிகளுக்கு உதவி வழங்கியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி அன்று மாலை பாதிக்கப்பட்ட பயணிகளை அழைத்துச் செல்ல புதிய குழுவினரை விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது. பயணிகளுக்கு உணவு மற்றும் இழப்பீடும் வழங்கப்பட்டது என யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான சேவை ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விமானம் புதிய குழுவினருடன் இரவு 9 மணிக்கு புறப்பட்டு ஷங்காயில் சுமார் ஆறு மணி நேரம் தாமதமாக தரையிறங்கியதாக CNN தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version