சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாகவும் துல்லியமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த அசாதாரண திறமையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியில் சிறுமியின் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.

காலநிலை, விலங்குகள், மின்னணு சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட சொற்களை தமிழில் கேட்கும் போது, அவற்றுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கும் திறனை இச்சிறுமி வெளிப்படுத்தியுள்ளார்.

சிறுமியின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டுநராகவும், தாய் குடும்பப் பெண்ணாகவும் உள்ள சாதாரண பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர், இதுவரை பாடசாலை கல்வித் தொடங்காத நிலையில் இத்தகைய அதிசய ஞாபக சக்தியை பெற்றிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் இன்று (01) யாழ்ப்பாண ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது, சிறுமியின் அசாதாரண திறமையை வெளிப்படுத்துவதுடன், அதனை உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியை முன்னெடுத்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

சிறுமியின் இந்த திறமை, அவரது வயதுக்கு மீறிய புரிதல் மற்றும் நினைவாற்றலை வெளிப்படுத்துவதாக உள்ளதுடன், இதற்கான ஆதாரங்களை சேகரித்து கின்னஸ் சாதனை அமைப்புக்கு அனுப்புவதற்கான பணிகளை பெற்றோர் தொடங்கியுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version