இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளுக்கமை மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு இதுவரையில் 930,794 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சராசரி தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 5,000 ஆகக் காணப்படுகிறது. இருப்பினும், மே 2025 முதல் வாரத்திற்கான சுற்றுலாப்பயணிகளின் வருகைகள் முந்தைய ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளன. 2023 இல் 18,761 மற்றும் 2024 இல் 28,526 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இவை இவ்வாண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கின்றன.
இதற்கிடையில், 2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 1,379 மில்லியன் டொலர்களாக இருந்ததாகவும், இது 2024 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 1,251.6 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும்போது 10.2 சதவீத அதிகரிப்பை பிரதிபலிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.