நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இறுதிப்படுத்திய பட்டியலையே மாற்றி தம் இஷ்டத்துக்கு பட்டியலை தயார்ப்படுத்தும் தைரியம் உள்ள மோசடி அதிகாரிகள் நாட்டில் இருக்கின்றார்கள் என்பது சற்று அதிர்ச்சியான விடயமே.

ஜனாதிபதியையே அலட்சியப்படுத்தும் அதிகாரிகள் சாதாரண மக்களை எப்படியெல்லாம் அலைகழித்து தமது அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்துவர் என்பதைப் பற்றி கூறவும் வேண்டுமா?

கடந்த வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் அதிகாரத்தின் படி பல கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அதில் ஜனாதிபதி செயலகத்தினால் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியின் கையொப்பம் இடப்பட்ட ஆவணத்தில் பெயர் இல்லாத சில கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளமை ஜனாதிபதி செயலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து சுதந்திர தினம் மற்றும் வெசாக் தினங்களில் நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தெரிவு செய்யப்பட்டு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழமை.

நீண்ட நாட்கள் சிறையில் தண்டனை அனுபவிக்கும் ஆயுள் கைதிகள், நன்னடத்தை மூலம் தெரிவு செய்யப்படுபவர்கள் குடும்பங்களின் கருணை மனு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் குறித்த சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை வழங்கப்படும்.

ஆனால் இந்த பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி சில சிறைச்சாலை அதிகாரிகள் தமக்கு வேண்டியவர்களை விடுவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் அநுதாரபுரம் மேல் நீதிமன்றத்தால் 2025.05.02 ஆம் திகதியன்று சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதி பத்து நாட்களில் அதாவது 2025.05.12 ஆம் திகதியன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகியுள்ளார்.

இது சமூக ஊடகங்களில் பலரால் விமர்சிக்கப்பட்டதுடன் ஜனாதிபதி மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

இதையடுத்து உடனடியாக செயற்பட்ட ஜனாதிபதி செயலகமானது சனிக்கிழமை 7 ஆம் திகதியன்று தெளிவுப்படுத்தல் ஊடக அறிக்கை ஒன்றை வெளிட்டது. மேலும் இது குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தது.

இதையடுத்தே பொது மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் குற்றப்புலனாய்வு திணைக்களமானது அறிக்கையொன்றை வெளியிட்டது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சிறைகைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இதன்போது சிறைகைதிகள் பலருக்கு முறையற்ற வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக 2025.06.06 ஆம் திகதியன்று ஜனாதிபதி செயலகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் அளித்துள்ள முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் இவ்விடயம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஆவணங்களை பரிசீலனை செய்து உரிய தரப்பினரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி ஒருசில சிறைக்கைதிகள் வெசாக் தினத்தன்று விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட சிறைக்கைதிகளுடன் அனுமதியளிக்கப்படாத அல்லது பெயர்குறிப்பிடப்படாத கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெசாக் தினத்தன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் கைதிகளில் பலர்  ஜனாதிபதி அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டு இறுதிப்படுத்திய பட்டியலில் இல்லாதவர்கள் என்பது ஒரு மாபெரும் மோசடியாகும்.

குறித்த ஒரு நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்தாலும் மேலும் இப்படியான பலர் அன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் சி.ஐ.டி நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தினால் இறுதி செய்யப்பட்ட பட்டியலை இடையில் மாற்றியவர்கள் யார்? அல்லது தவறான ஆதாரங்களை முன்வைத்து பொதுமன்னிப்புக்கான கைதிகள் பட்டியல் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதா என்பது பலரிடமும் எழுந்துள்ள கேள்விகளாகும்.

அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால் அது ஜனாதிபதிக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை. ஆகவே அவருக்குத் தெரியாமலேயே இவ்வாறான மோசடி காரியங்களை செய்யும் தரப்பினர் யார் என்பது முக்கியமானதொரு கேள்வி.

இதனிடையே ஊழல் இதுஷ்பிரயோகம் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்ற தேசிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு விரோதமாக சில அதிகாரிகள் நடந்து கொள்கின்றமை வெளிவந்துள்ளது.

கடந்த கால ஊழல் இ துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்ட பல முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் இஎம்.பிக்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் பல அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் எவ்வித அச்சமும் இன்றி செயற்படுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இலங்கையில் அரசியல்வாதிகள் ஊழல்களில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளே பிரதான காரணகர்த்தாக்களாக விளங்குகின்றனர்.

அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களாக விளங்குபவர்கள் நினைத்தால் அரசியல்வாதிகளையும் அவர்களால் வழிநடத்த முடியும்.

மக்களின் பணம் வீணாகாமல் தடுக்க முடியும். ஆனால் மகிந்த ராஜபக்ச காலத்திலிருந்து மேற்படி அமைச்சுக்களின் அதிகாரிகள் இ மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் தம்மிஷ்டடப்படி ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கி விட்டனர்

. மேற்படி சம்பவம் குறித்து இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அநுராதபுரம் சிறைச்சாலையின் பிரதி ஆணையாளர் குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் இன்னும் பலர் சிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

சி.சி.என்

Share.
Leave A Reply

Exit mobile version