மாவை.சோ.சேனாதிராஜாவைப் படுகொலை செய்ய முயன்றவர் டக்ளஸ் தேவானந்தா என பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
காலம் சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராஜா, கோசல நுவன் ஜயவீர, டொனால்ட் திசாநாயக்க, சூரியபெரும ஆகியோரின் மறைவையொட்டி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (06) நடைபெற்ற அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றுகையில் இதனை தெரிவித்த சிறிதரன் எம்.பி,
கடந்த 2001.11.28 ஆம் திகதி, ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காக சென்ற மாவை சோ.சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் கிராம அலுவலர் சிவராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, நாரந்தனை – தம்பாட்டிப்பகுதியில் வைத்து டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஆயுதக்குழுவினரும் தாக்குதல் மேற்கொண்டனர்.
இதன்போது, ஏரம்பு பேரம்பலம். யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகிய இருவர் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 28 பேர் படுகாயமடைந்ததையும், மாவை.சோ.சேனாதிராஜா கொட்டன் பொல்லுககளாலும் தாக்கப்பட்டதுடன் துப்பாக்கிகளாலும் வாள்களாலும் சுட்டும், வெட்டியும், அடித்தும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு நினைவற்று போகுமளவிற்கு காயமுற்றிருந்த கறைபடிந்த சம்பவத்தையும் மீள நினைவூட்டி, அவரது நினைவுகளைப் பதிவு செய்கின்றேன்.
போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருந்த தமிழரசு என்ற அரசியல் ஆலமரம், கிளிநொச்சி மண்ணிலும் விழுதெறிந்து வளர்ந்ததில் மாவை அண்ணனின் பங்கே பரவியிருக்கிறது.
தமிழ்த்தேசியத்தின் இருப்பையும் இனத்துவ உரித்தையும் அவாவி நிற்கும் ஓர்அரசியற் கட்சியின் பயணம் தடம் மாறாததாக இருக்கவேண்டுமெனில் அது முழுக்க முழுக்க மக்கள் மயப்பட்டதாக மக்களின் மன உணர்வுகளுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டுமென்பதை தனது அரசியல் அனுபவத்தால் உற்றுணர்ந்த அவர் ஈழத்தமிழ் சமூகத்தின் இருபெரும் சக்திகளாகிய இளைஞர்களையும் பெண்களையும் சமதளத்தில் இணைத்துப் பயணிக்கும் அனைத்து வகை பிரயத்தனங்களிலும் ஈடுபட்டிருந்தார்.
அத்தகைய முதிர்ச்சி மிக்க அவரது செற்பாடுகளின் பயன்விளைவினால் தான் தமிழ்த் தேசியம் அதன் கொள்கை இறுக்கமும் கொதிநிலையும் தாழாது அடுத்த சந்ததியிடத்தே இன்று கையளிக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.