ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளைக் குறிவைத்து, அவர்களின் பென்ஷன், சொத்துகளை மிரட்டிப் பறித்துவந்த ‘கல்யாண ராணி’ மடோனாவை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது போலீஸ்!
அவர் குறித்த பின்னணித் தகவல்களெல்லாம் ‘பகீர்’ கிளப்புகின்றன…
காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வனத்தையன். சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், மனைவி இறந்ததும் கோவையைச் சேர்ந்த மடோனாவை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.
வனத்தையன் மறைவுக்குப் பிறகு அவரின் சொத்தை அபகரிக்கத் திட்டமிட்ட மடோனா, வசமாகக் காவல்துறையினரிடம் சிக்கியிருப்பதோடு, அவர் குறித்த விசாரணையில் கிடைத்த தகவல்களால் காக்கிகளே அதிர்ந்துபோயிருக்கிறார்கள்.
இது குறித்து வனத்தையனின் மகள் செசிலியாவின் வழக்கறிஞரான பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, “வனத்தையனுடன் வாழ்ந்து வந்தபோதே, கனகராஜ் என்பவருடன் மடோனா அடிக்கடி போனில் பேசிவந்திருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த வனத்தையன், அவருக்கே தெரியாமல் மடோனாவும் கனகராஜும் பேசிக்கொண்ட உரையாடல்களை ரெக்கார்ட் செய்திருக்கிறார்.
அதில், ‘அவன் எதற்கும் லாயக்கு இல்லாதவன்… அவனால் என்னைத் திருப்திப்படுத்த முடியலை’ என்று குறைபட்டுக் கொண்ட மடோனா, தொடர்ந்து கனகராஜோடு செக்ஸியாகவும் பேசியிருக்கிறார்.
இது குறித்து மடோனாவிடம் வனத்தையன் கேட்டதும், இருவரிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து வனத்தையனிடமிருந்து சில லட்சங்களைச் சுருட்டிக்கொண்டு எஸ்கேப்பாகிவிட்டார் மடோனா.
மார்ச் 2024-ல் வனத்தையன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்தத் தகவலைத் தெரிந்துகொண்ட மடோனா, மறுபடியும் வனத்தையன் வீட்டுக்கு வந்தவர்,
`என்னை மன்னித்துவிடுங்கள்… நான் உங்களை உடனிருந்து கவனித்துக்கொள்கிறேன்’ என அக்கறை காட்டுவதுபோல நடித்திருக்கிறார்.
17.8.2024-ல் வனத்தையன் உயிரிழந்த சில நாள்களிலேயே, வனத்தையனின் பெயரிலுள்ள வீட்டின் பத்திரங்கள், நகைகள், பணத்தை எடுத்துக்கொண்டு மடோனாவும், அவரின் குடும்பத்தினரும் சென்றுவிட்டனர்.
இதையடுத்து வனத்தையனின் வீட்டில் அவரின் மகள் செசிலியாவும் மருமகனும் குடியிருந்துவந்தனர்.
இந்த நிலையில், ‘வனத்தையனின் சொத்தில் எனக்கும் பங்கு உண்டு’ என மீண்டும் மடோனா, செசிலியாவுக்கு நெருக்கடி கொடுக்கவே… மணிமங்கலம் காவல் நிலையத்தில் நாங்கள் கொடுத்த புகாரின் பேரில், மடோனாவை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்” என்றார்.
இந்த வழக்கு குறித்து மணிமங்கலம் போலீஸாரிடம் பேசியபோது, “மடோனா, 1993-ல் கோவையைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி மகேந்திரன் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார்.
2013-ல் மகேந்திரன் உயிரிழந்ததும் அவரின் பென்ஷன் தொகையை மடோனா மாதம்தோறும் வாங்கிவந்திருக்கிறார்.
அந்தச் சமயத்தில்தான், 2017-ல் திருவள்ளூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி கனகராஜை இரண்டாவதாகத் திருமணம் செய்திருக்கிறார்.
பின்னர் கனகராஜையும் மிரட்டி பணம், நகைகளை மடோனா பறித்துக்கொண்டதாகத் தகவல் இருக்கிறது.
மடோனாவின் டார்கெட்டில் மூன்றாவது கணவராக வனத்தையன் சிக்கியிருக்கிறார். வனத்தையன் உயிரிழந்ததும் சொத்தை அபகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
அதற்குள் எங்களிடம் சிக்கிக் கொண்டார். ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் திருமண மோசடியின் பின்னணியில் வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்கள்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.