இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை தமதிஷ்டப்படி விடுதலை செய்யும் அதிகாரத்தை கடந்த காலங்களில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உட்பட அவரின் கீழ் இயங்கும் சிறைச்சாலைகளின் அத்தியட்சகர்கள் கொண்டிருந்தமை தற்போது அம்பலமாகியுள்ளது.

கடந்த பொசன் போயா தினத்தின் ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் 338 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் ஜனாதிபதி கையெழுத்திட்ட ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்படாத பலரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது பின்பு தெரிய வந்தது.

இது குறித்த அறிக்கைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடந்த வாரம் நீதிமன்றுக்கு சமர்ப்பித்த போது கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பெப்ரவரி மாதம் வரை இவ்வாறு 68 பேர் சட்டவிரோதமாக சிறைச்சாலைகளிலிருந்து பொது மன்னிப்பு என்ற பெயரில் விடுவிக்கப்பட்டிருக்கின்றமை தெரிய வந்துள்ளது.

நாட்டில் விசேட பண்டிகை தினங்கள் சுதந்திர தினம் மற்றும் பொசன் போயா நாட்களில் நாட்டிலுள்ள 29 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை அவர்களின் நடத்தைகள் மற்றும் தண்டனை காலத்தை அடிப்படையாகக்கொண்டு பொது மன்னிப்பில் விடுதலை செய்யும் அதிகாரத்தை ஜனாதிபதிகள் கொண்டிருக்கின்றனர்.

அதே வேளை எல்லா கைதிகளுக்கும் இந்த வகையில் பொது மன்னிப்பு வழங்க முடியாது. பிதானமான நான்கு பிரிவுகளின் கீழ் ஜனாதிபதியானவர் தனக்கு சிபாரிசு செய்யப்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கின்றார்.

1) குறைந்தது ஒரு வருடம் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளுக்கு ஏழு நாள் விடுதலை.

2) அபராதம் செலுத்தப்படாமை காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு முழு விடுதலை.

3) பாதி தண்டனை அனுபவித்த 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுவித்தல்.

4) 30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்பட்டவர்களில் இருபது ஆண்டு காலத்துக்கு மேல் தண்டனை அனுபவித்தவர்களுக்கு முழு விடுதலை.

சில கடுமையான குற்றங்களின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளை பொது மன்னிப்பு பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று நீதி அமைச்சகம் குறிப்பிட்டிருந்தது.

சிறைச்சாலை ஆணையர் ஒவ்வொரு கைதியின் மீதும் குற்றம், தண்டனை, சிறை எண் மற்றும் வழக்கு எண் உள்ளிட்ட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கைதிகள் மட்டுமே விடுவிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம்.

இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத கைதிகள் பொது மன்னிப்பு பெறுபவர்களாக மோசடியாக பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததன் பின்னரே இத்தகைய நீண்ட நாள் மோசடி அம்பலமானது. இதன் பின்னணியில் இருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கடந்த வாரம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் அறிக்கையின் படி கடந்த வருடம் டிசம்பர் மாதம் நத்தார் தினத்தை முன்னிட்டு 25 ஆம் திகதி நாட்டிலுள்ள 29 சிறைச்சாலைகளிலுமுள்ள 389 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த பொது மன்னிப்பு ஆவணத்தில் பெயரிடப்படாத 57 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளை நாட்டின் சுதந்திர தினம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட வேளை நாட்டிலுள்ள 28 சிறைச்சாலைகளிலும் விடுவிக்கப்பட்ட 285 கைதிகளில் 11 பேர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை பொசன் போயாவுக்கு மேற்படி 338 சிறைச்சாலை கைதிகளை விடுவிப்பதற்கான கோரிக்கை இவ்வருடம் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதியன்று சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் தெரிவு செய்யப்பட்ட பட்டியலினூடாக ஜனாதிபதி செயலகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இவை பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் மே மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதியின் மேலதிக செயலாளரால் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எனினும் விடுதலை செய்யப்பட்ட அத்துல திலகரட்ண என்பவரின் பெயர் மேற்படி ஜனாதிபதி கையொப்பமிட்ட ஆவணத்தில் இல்லையென சர்ச்சை கிளம்பியதையடுத்தே இந்த பிரச்சினை பூதகரமானது.

ஏனென்றால் ஜுன் 4 ஆம் திகதியன்று பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட அவர் பத்து நாட்களுக்கு முன்பே தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதியாவார். பத்து நாட்கள் சிறையிலிருந்த ஒருவரை எவ்வாறு பொது மன்னிப்பில் விடுதலை செய்வது என்ற கேள்வி எழுந்தது.

எது எப்படியானாலும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பட்டியலில் இல்லாமல் சட்டவிரோதமாக சிறைச்சாலை நிர்வாகத்தால் விடுதலை செய்யப்பட்ட 68 கைதிகளும் யார் என்ற கேள்விகள் இப்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் பாதாள உலக கோஷ்டியினருடன் தொடர்புள்ளவர்களா அல்லது மிக மோசமான குற்றச்சாட்டுக்காக தீர்ப்பு வழங்கப்பட்டவர்களா, சி

றைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கும் அல்லது சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கும் இவர்களுக்குமிடையே உள்ள தொடர்புகள் என்ன,. இவர்கள் அனைவரும் மீண்டும் கைது செய்யப்படுவார்களா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதே வேளை கடந்த நத்தார் பண்டிகை இவ்வருடம் சுதந்திர தினம் மற்றும் பொசன் போயா தினங்களில் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களின் தகவல்களே இது வரை கிடைத்துள்ளன.

ஜனாதிபதி ரணில் மற்றும் அதற்கு முன்பதாக கோட்டாபய , மைத்ரிபால ஆகியோரின் காலத்திலும் இவ்வாறு இடம்பெற்றதா என்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

அவ்வாறு இருந்தால் மாத்திரமே நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாரதூரமான குற்றச் செயல்களை புரிந்தவர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்த முடியும். அநுர அரசாங்கம் அது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

சி.சி.என்

Share.
Leave A Reply

Exit mobile version