ஈரான் மீதான போர் உணர்த்தும் உண்மை
Published By: Digital Desk 2
22 Jun, 2025 | 04:31 PM
image
ஈரான் – இஸ்ரேல் மோதல்கள் தான், இப்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ஏனென்றால், இந்தப் போர் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் மீது ஏதோ ஒரு வகையில் தாக்கம் செலுத்துவதாக இருக்கிறது. ரஷ்ய- உக்ரேன் போர், நான்கு ஆண்டுகளாக நடந்தாலும், அதன் தாக்கம் முழு உலகினாலும் உணரப்படவில்லை.
ஆனால், ஈரான்- இஸ்ரேல் போர் அப்படிப்பட்டதல்ல. அது ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாதிக்கிறது. காஸா மோதல்கள், உக்ரேன் -ரஷ்ய போரைத் தாண்டி, ஈரான் -இஸ்ரேல் மோதல்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு அதுவே காரணம்.
இந்த போர் எதனை நோக்கி செல்கிறது? – ஏன் முன்னெடுக்கப்படுகிறது? என்பது ஆராயப்பட வேண்டியதொன்று.
2009 ஆம் ஆண்டு, இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போர் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டதோ, அதற்கும் இப்போது முன்னெடுக்கப்படுகின்ற போருக்கும் தொடர்புகள் இருக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தது, ஈரானின் வலுவான ஆதரவு இருந்தது, இஸ்ரேலின் ஆயுத உதவிகளும் கிடைத்திருந்தன.
ஆனால், இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்குகின்றன.
ஈரானிடம் உள்ள அணுசக்தி ஆற்றலும், அதனிடம் உள்ள சக்தி வாய்ந்த ஏவுகணைகளும் தான், இந்தப் போர் தொடங்கப்பட்டதற்கு இஸ்ரேலினால் கூறப்பட்ட காரணம் ஆகும். ஈரான் அணுகுண்டுகளை தயாரிக்கும் கட்டத்தை எட்டி விட்டதாகவும், அதனை தயாரித்து விட்டால், தற்போது தயாரித்துள்ள ஏவுகணைகளைக் கொண்டு, இஸ்ரேலை அழித்து விடும் என்றும் இஸ்ரேல் கூறியது. ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது தனக்கு ஆபத்து என இஸ்ரேல் கருதுகிறது.
ஈரானின் அந்தப் பலத்தை அழிப்பதற்காகவே ‘ஒப்பரேசன் ரைசிங் லயன்’ எனும் நடவடிக்கையை தொடங்கியதாக இஸ்ரேல் கூறியது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கோ அதன் மிரட்டலுக்கோ ஈரான் மசியவில்லை. அதற்கு தாறுமாறாக ஏவுகணைகளின் மூலம் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இதனால் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஆவேசம் அடைந்தன.ஏனென்றால், இந்த இரண்டு நாடுகளினதும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளால், இஸ்ரேலை முழுமையாகப் பாதுகாக்க முடியவில்லை.
இஸ்ரேல் மீது விழுந்த ஒவ்வொரு ஏவுகணையும் இந்த இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு ஓட்டைகளை உலகத்துக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தது.
ஈரானின் நவீன ஏவுகணைகள் இஸ்ரேலின் விழுந்து வெடித்து ஏற்படுத்திய சேதங்களை விட, இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு கட்டமைப்பின் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை மீது ஏற்படுத்திய சேதமே அதிகம்.
அதனால் ஈரானை எப்படியாவது துவம்சம் செய்து விட வேண்டும் என்ற தீர்மானத்துடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் செயற்பட தொடங்கியிருக்கின்றன.
ஈரானின் மீது இஸ்ரேல் எந்த முகாந்திரமும் இல்லாமல் தாக்குதல்களை தொடுத்தது.
முதலில் தாக்குதலை கொடுத்தது இஸ்ரேல்தான். போரை தொடங்கி விட்டு, ஈரானை தாக்குதலை நிறுத்தும்படி இரண்டு நாடுகளும் கூறின.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறும் அது சார்ந்த பேச்சுக்கு வருமாறும் இரண்டு நாடுகளும் அழுத்தம் கொடுத்தன.
அதற்கு மசியாத ஈரானை பணிய வைப்பதற்காக- ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தை இப்பொழுது செயற்படுத்த தொடங்கியிருக்கின்றன.
இரானிய மக்களை அச்சுறுத்தி, ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்பச் செய்வதற்கு, இந்த இரண்டு நாடுகளும் முயற்சிக்கின்றன. இதற்காக குழப்பம் விளைவிக்கும் வேலைகள் இஸ்ரேலிய புலனாய்வாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், பிரச்சினைக்கு முற்று முழுதாக தீர்வு காண முடியும் என அமெரிக்காவும் கூறியிருக்கிறது. இஸ்ரேலும் கூறியிருக்கிறது. அதற்காக ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமெய்னியை படுகொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கிறது.
அதனை இஸ்ரேலிய தலைவர்கள் ஒப்புக் கொண்டும் இருக்கிறார்கள்.
அமெரிக்காவுக்கு அல்லது இஸ்ரேலுக்குப் பணிந்து போகாத தலைவர்களை, ஆட்சியில் இருந்து அகற்றுவது அல்லது உலகத்தை விட்டு அகற்றுவது ஓர் உலக நீதியாக மாறிக் கொண்டிருக்கிறது.
லிபியாவில் கேணல் கடாபியும், ஈராக்கில் சதாம் ஹுசெய்னும் இவ்வாறு தான் – ஆட்சியை விட்டு – உலகத்தை விட்டு அகற்றப்பட்டார்கள்.
அவர்கள் அணு ஆயுதங்களை, இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாக , தயாரிப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு சர்வதேசத்திடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார்கள். கடைசியில் அவர்கள் மீது படையெடுப்புகள் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் அல்லது தூக்கில் போடப்பட்டார்கள். ஆனால், கடைசி வரை ஈராக்கிலோ, லிபியாவிலோ, எந்த ஒரு இரசாயன ஆயுதமோ, அணு ஆயுதமோ கண்டுபிடிக்கப்படவே இல்லை.
அதேபோன்றுதான், இப்பொழுது ஈரானின் ஆன்மீகத் தலைவர் கமெய்னியை அழிப்பதற்கு, அணு ஆயுதங்களை அவர் வைத்திருக்கிறார் என்ற காரணத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னிறுத்தியிருக்கின்றன.
எந்த ஒரு நாடும் தன்னிடம் உள்ள ஆயுதங்களை பிற நாடுகளின் மீது பயன்படுத்தாமல் இருக்கும் வரை- அதனை அச்சுறுத்தலுக்குரிய ஒன்றாக கருத முடியாது.
ஆனால், இஸ்ரேலோ அமெரிக்காவோ அப்படிப்பட்டவையல்ல. தங்களிடம் உள்ள ஆயுதங்களைக் கொண்டு பிற நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன.
அவ்வப்போது பிற நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. தங்களின் ஆயுதங்களை பரிசோதித்து வருகின்றன. அந்த வகையில் இப்பொழுது ஈரான் பலிக்கடா வாகியிருக்கிறது, ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
சிரியாவில் இதேபோன்றுதான், இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கூறி முன்னர், பஷர் அல் அசாத் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்குலகினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கெல்லாம் தாக்குப் பிடித்த அசாத் அண்மையில் இஸ்ரேல்– அமெரிக்க கூட்டின் இரகசிய சதித் திட்டத்தினால், ஆட்சியை இழந்து, தப்பியோடுகின்ற நிலை ஏற்பட்டது.
அந்த ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது இஸ்ரேல் தான் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புக்கொண்டிருந்தார்.
அசாத் அரசாங்கத்துக்கு எதிரான படைகளை பலப்படுத்தி, அவர்களை தாக்குதல் தொடங்க வைத்து, அவர்களுக்கு ஆதரவாக தாக்குதல்களை நடத்தி, தங்களின் திட்டத்தை நிறைவேற்றினார்கள்.
அதுமாத்திரமன்றி, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிரியாவிடம் இருந்த அத்தனை சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் இஸ்ரேல் தனது போர் விமானங்களைக் கொண்டு தாக்கி அழித்தது.
இஸ்ரேலின் இலக்கு, சிரியாவில் இருந்து அசாத்தை துரத்துவது மாத்திரம் அல்ல, அதனிடம் உள்ள சக்திவாய்ந்த ஆயுதங்களை இல்லாமல் அழிப்பதும் தான்.
அதேபோலத்தான், இப்பொழுது ஈரானை நிராயுதபாணி ஆக்கும் தாக்குதலை தொடுத்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்- –அமெரிக்க கூட்டு.
ஈரான் தன்னிடம் உள்ள ஏவுகணை பலத்தைக் கொண்டு இஸ்ரேலுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
Kim Jong-Un-North Korea
அமெரிக்காவினது இந்த விளையாட்டு, வட கொரியாவிடம் பலிக்கவில்லை.
வட கொரியாவை சாதாரண நாடு என கருத முடியாது.
அது ரஷ்யாவுடனும் சீனாவுடனும் நெருக்கமான உறவை கொண்டிருக்கிறது, கிட்டத்தட்ட தரைவழித் தொடர்புகளையும் பேணுகிறது.
இன்று ரஷ்யாவுக்கு தேவையான ஆயுதங்களை மாத்திரமன்றி ஆளணியையும் போருக்காக வழங்குகின்ற அளவுக்கு வடகொரியா வலுவான நிலையில் இருக்கிறது.
அதன் மீது கை வைத்தால், தென்கொரியா அழிந்து போகும் என்பதும், வடகொரியா எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறது என்பதும் அமெரிக்காவுக்கு தெரியும்.
அதனால் தான் வடகொரியா விடயத்தில் கொஞ்சம் எட்ட நின்றே விவகாரங்களை கையாளப் பார்க்கிறது.
ஈரான் விடயத்தில் அவ்வாறு இல்லை. ஈரானுக்கு என அரபுலகில் ஆதரவாளர்கள் மிக மிகக் குறைவு.
அதனால் இஸ்லாமிய உலகத்தை பிளவுபடுத்தி, ஈரான் போன்ற நாடுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றன.
2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளுக்கும் அதே நிலை தான் ஏற்பட்டது.
அப்பொழுது பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு அமெரிக்கா தலைமை தாங்க தொடங்கி இருந்தது. அந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.
விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு எதிராக சர்வதேச வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சர்வதேசம் காட்டும் பாதையில் பயணிக்க நிர்பந்திக்கப்பட்டார்.
சீருடை அணிந்த போராளியாக மரணத்தை தழுவ தயாராக இருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை, பயங்கரவாதத்துக்கு எதிரான போராக அடையாளப்படுத்தி, சர்வதேச ஆதரவுடன் அதில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணியாத அமைப்பு எனப் பெயரெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம், அதன் தலைமைத்துவம் எல்லாமே அடியோடு அழிக்கப்பட்டன.
மேற்குலகம் விரும்புகின்ற உலக ஒழுங்கிற்கு ஒத்திசைந்து போகாத உலகத் தலைவர்களாக இருந்தாலும் சரி, அமைப்புகளின் தலைவர்களாக இருந்தாலும் சரி- அவர்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது.
இதனை அவ்வப்போது அமெரிக்கா மற்றும் அதனுடன் இணைந்த நாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன. ஈரானில் இப்பொழுது நடக்கின்ற தாக்குதல்களையும் அவ்வாறே பார்க்க வேண்டியிருக்கிறது.
ஹரிகரன்