சீனாவை ‘உலகின் தொழிற்சாலை’ என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு, குண்டூசி முதல் விமானங்கள் வரை கிட்டத்தட்ட எல்லா பொருள்களையுமே சீனா உற்பத்தி செய்கிறது.

சில பொருள்களை மிகையாக உற்பத்தி செய்து உலக சந்தையில் கொட்டுகிறது. சில பொருள்களில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், சீனாவின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு பொருள்தான் சமீபத்தில் ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

வளர்ந்து வரும் தொழில்துறைகளுக்கு neodymium-iron-boron (NdFeB) மற்றும் samarium-cobalt (SmCo) போன்ற அரிய பூமி காந்தங்கள் (Rare earth magnets) மிக அத்தியாவசியத் தேவையாக இருக்கின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க மின்சக்தி, ராணுவக் கருவிகள், எலெக்ட்ரானிக்ஸ் என முக்கியமான தொழில்துறைகளால் இந்த அரிய பூமி காந்தங்கள் இல்லாமல் உற்பத்தி செய்ய முடியாது.

உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனங்களில் ஸ்டியரிங், புரொபல்ஷன் உட்பட பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு அரிய பூமி காந்தங்கள் தேவை.

இதேபோல, உலகம் முழுவதும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களும் வளர்ந்து வருகின்றன. ஆனால், அதற்குத் தேவையான காற்றாலை டர்பைன் ஜெனரேட்டர், சோலார் பேனல் போன்றவற்றுக்கு அரிய பூமி காந்தங்கள் வேண்டும்.

ஏவுகணைகள், போர் விமானங்கள், ரேடார், சோனார் உட்படப் பல்வேறு ராணுவ உபகரணங்களுக்கும் அரிய பூமி காந்தங்கள் அவசியம்.

மொபைல் போன்கள் கம்பியூட்டர்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ், எம்.ஆர்.ஐ போன்ற மருத்துவக் கருவிகள் என அனைத்திற்கும் இந்த அரிய பூமி காந்தங்கள் அவசியம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அரிய பூமி காந்தங்களின் உற்பத்தியில் சீனா முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மற்ற நாடுகளால் பக்கத்தில் கூட வர முடியாது. உலகளவில் அரிய பூமி கூறுகளின் சுரங்க உற்பத்தியில் மட்டும் சீனாவுக்கு 70% பங்கு இருக்கிறது.

உலகின் ஒட்டுமொத்த சுத்திகரிப்பு திறனில் 85% சீனாவிடம் இருக்கிறது. மொத்த அரிய பூமி காந்த உற்பத்தியில் சீனாவுக்கு 90% பங்கு இருக்கிறது.

இப்படி, அரிய பூமி காந்தங்களை வைத்து ஒரு தொழில்துறை ராஜாங்கத்தையே சீனா நடத்தி வருகிறது.

இதெல்லாம் திடீரென நடந்த வளர்ச்சி அல்ல. பல ஆண்டுகளாக சுரங்க உற்பத்தியில் முதலீடு செய்து, அரசு மானியங்கள் வழங்கி, சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்தி இன்று முழு ஆதிக்கத்தை சீனா செலுத்தி வருகிறது.

இந்தியா, அமெரிக்கா என மற்ற எல்லா நாடுகளுமே சீனாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்து வருகின்றன.

உதாரணமாக, 2024-ம் ஆண்டில் இந்தியா 540 டன் அரிய பூமி காந்தங்களை இறக்குமதி செய்தது. அதில் 80% சீனாவிடம் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு தடாலடியாக சீனா, இந்தியா என எல்லா நாடுகளுக்கும் இஷ்டத்துக்கு வரிகளை விதித்தார்.

அதற்கு முன்பாகவே, சீனாவுக்கு அட்வான்ஸ்டு சிப்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, samarium, dysprosium, terbium, gadolinium, lutetium, scandium, and yttrium ஆகிய ஏழு அரிய பூமி கூறுகளையும், அவற்றை சார்ந்த அரிய பூமி காந்தங்களையும் ஏற்றுமதி செய்வதற்கு கடந்த ஏப்ரல் 4-ம் தேதி சீன அரசு தடை விதித்தது.

ஏற்றுமதி செய்வதற்குத் தனியாக லைசன்ஸ் வாங்க வேண்டும் என சீனா உத்தரவிட்டது. அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுப்பது என்பதையும் தாண்டி, மற்ற நாடுகளுக்கும் தனது தொழில்துறை செல்வாக்கை காட்டுவதற்காக சீனா இப்படி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறப்படுகிறது.

உதாரணமாக, அரிய பூமி காந்தங்களை வழங்குவதற்காக இந்தியா முன்வைத்த 30 இறக்குமதி கோரிக்கைகளையும் சீனா நிராகரித்துவிட்டது.

அரிய பூமி காந்தங்களை ஏற்றுமதி செய்வதற்கு லைசன்ஸ் பெறுவதற்காக வந்த பெரும்பாலான கோரிக்கைகளையும் சீனா நிராகரித்துவிட்டது.

இதனால், சர்வதேச அளவில் அரிய பூமி காந்தங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டிமாண்ட் எகிறி எங்கோ போய்விட்டது.

அரிய பூமி காந்தங்களுக்காக ஒட்டுமொத்த உலகமும் சீனாவை நம்பியே இருக்கிறது. ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகள் கொஞ்சமாக உற்பத்தி செய்கின்றன.

ஆனால், ஜப்பானில் உற்பத்தியாகும் அரிய பூமி காந்தங்களை ஜப்பான் நிறுவனங்களே பயன்படுத்தி விடுவதால், உலக சந்தைக்கு பெரிதாக வருவதில்லை.

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் ஒரே ஒரு சுரங்கம் மட்டுமே இருக்கிறது. அதிலும் பெரிதாக உற்பத்தி இல்லை.

2024-ம் ஆண்டில் உலக சந்தையில் அரிய பூமி கூறுகளுக்கான டிமாண்ட் 93 கிலோ டன். 2050-ம் ஆண்டுக்குள் டிமாண்ட் 180 கிலோ டன் முதல் 202 கிலோ டன் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ராணுவ உபகரணங்கள் போன்ற துறைகளில் டிமாண்ட் உயர்ந்துகொண்டே போகிறது. உதாரணமாக, ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தில் சுமார் அரை கிலோ அரிய பூமி கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களிலும் கூட கால் கிலோ பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சந்தைகளில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அரிய பூமி காந்தங்கள் இல்லாமல் உற்பத்தி தடைபடக்கூடிய சூழலை எதிர்கொள்கின்றன.

இந்தியாவில், அரிய பூமி காந்தங்கள் சப்ளை வரவில்லை எனில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நின்றுபோகக்கூடிய அளவுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

இதுபற்றி டி.வி.எஸ், பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளன. மாருதி சுஸுகி நிறுவனம் தனது e-Vitara எலெக்ட்ரிக் காருக்கான உற்பத்தி இலக்கை 26,000-ல் இருந்து 8,000-ஆக குறைத்துள்ளது.

மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை உயரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய சந்தையில் இதைவிட மோசமான நிலை உள்ளது.

ராணுவத் துறையிலும் சிக்கல் உள்ளது. உதாரணமாக, அமெரிக்காவின் F-35 போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவ உபகரணங்களுக்கு samarium சார்ந்த அரிய பூமி காந்தங்கள் அத்தியாவசியம்.

உலகத்துக்கே samarium கூறுகளை 100% சீனாதான் சப்ளை செய்கிறது. எனவே, இந்த விஷயத்தில் முழுமையாக சீனாவை சார்ந்துதான் இருக்க வேண்டியுள்ளது.

அரிய பூமி காந்தங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பொருள்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அமெரிக்க ஆட்டோமொபைல் துறைக்கு 210 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திதான் தீர்வு காண வேண்டியுள்ளது. அமெரிக்கா ஏற்கெனவே சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டது.

அரிய காந்தங்களை சீனா வழங்கினால், சிப்கள் மீதான ஏற்றுமதி தடை தளர்த்தப்படும் என்று அமெரிக்கா சிக்னல் கொடுத்திருக்கிறது.

இந்தியா தரப்பில் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ஆட்டோமோட்டிவ் பாக உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஒரு குழு சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜே.பி.எம் குரூப் போன்ற சில நிறுவனங்கள் ஜப்பான், வியட்நாம் போன்ற பிற ஆசிய நாடுகளிடம் இருந்து அரிய பூமி காந்தங்களை வாங்குகின்றன.

மஹிந்திரா நிறுவனம் குறுகிய கால தேவைகளுக்கு அரிய காந்தங்களை வைத்திருக்கிறது. எதிர்கால தேவைகளுக்கு வியட்நாம், இந்தோனேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் இருந்து அரிய காந்தங்களை வாங்குவதற்கு முயற்சித்து வருகிறது.

மேலும், மறுசுழற்சி வாயிலாக அரிய பூமி கூறுகளை பெற முடியுமா என்று இந்தியா ஆய்வு செய்து வருகிறது.

இதுதவிர, இந்தியாவிலேயே அரிய பூமி காந்தங்களை உற்பத்தி செய்வதற்காக ஊக்கத்தொகை வழங்குவதற்கும் இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

சீனாவின் ஏற்றுமதி தடை ஆஸ்திரேலியாவுக்கு புதிய வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலியா அரிய பூமி கூறுகளின் உற்பத்திக்காக பல மில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

ஆனால், இதனால் உடனடியாக உலக சந்தையின் தேவைகள் தீருமா என்பது சந்தேகம் இன்றைய சூழலில், அரிய காந்தங்களில் சீனா முழு ஆதிக்கம் செலுத்துகிறது.

முக்கியமான தொழில்துறைகள் இதைச் சார்ந்திருப்பதால், மற்ற நாடுகளுக்கு ரிஸ்க் உண்டாகிறது.

உடனடியாக அரிய பூமி காந்தங்களை பெறுவதற்கு முதலில் சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.

அடுத்தகட்டமாக, ஜப்பான் போன்ற மற்ற நாடுகளிடம் வாங்க முடியுமா என முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இதைவிட முக்கியமாக, சீனாவைத் தவிர்த்து பிற நாடுகளும் சொந்த நாட்டிலேயே அரிய பூமி காந்தங்களை உற்பத்தி செய்வதற்கு முயற்சிப்பதுதான் நீண்டகால அடிப்படையில் சீனா மீதான சார்பை குறைக்க ஒரே வழி

Share.
Leave A Reply

Exit mobile version