இமாச்சல பிரதேசத்தின் சர்மூர் மாவட்டத்தில் ட்ரான்ஸ்-கிரி என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் ஹாட்டி சமூகத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு நடந்துள்ளது.
ஷில்லை கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி என்ற சகோதரர்கள், அருகிலுள்ள குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணை, குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் முழு சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
ஹாட்டி சமூகத்தில் “ஜோடிதரன்” அல்லது “திரௌபதி பிரதா” என்று அறியப்படும் இந்த பலதார திருமண வழக்கம், பொதுவாக ரகசியமாகப் பின்பற்றப்பட்டாலும், இந்த திருமணம் ஊரார் அறிய பிரமாண்டமாக நடந்துள்ளது.
இந்த வழக்கம் குடும்ப ஒற்றுமையைப் பேணுவதற்கும், மூதாதையர் நிலத்தைப் பிரிப்பதைத் தடுப்பதற்கும், பெண்கள் விதவையாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் பின்பற்றப்படுகிறது.
சகோதரர்களில் ஒருவரான பிரதீப் ஜல் சக்தி துறையிலும், கபில் வெளிநாட்டிலும் பணிபுரிகின்றனர்.
இருவரும் தங்கள் முடிவை பரஸ்பரமானது என்றும், தங்கள் வரலாற்றைப் பற்றி பெருமைப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மணமகள் சுனிதா, “இது எனது தேர்வு. நான் ஒருபோதும் வற்புறுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில், அண்டை கிராமங்களைச் சேர்ந்த மக்களும் உறவினர்களும் பங்கேற்று, பாரம்பரிய பஹாரி நாட்டுப்புற இசையுடன் நடனமாடி, மணமக்களை வாழ்த்தினர். “,