ஆப்­கா­னிஸ்­தானில் இரண்­டா­வது தட­வை­யாக தாம் ஆட்­சியைக் கைப்­பற்­றி­யதன் 4 ஆவது ஆண்டு நிறைவை தலி­பான்கள் நேற்­று­முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை கொண்­டா­டினர்.

ஆப்கான் மக்­களின் குறிப்­பாக பெண்­களின் உரி­மை­களைப் புறக்­க­ணித்து அடக்கி ஒடுக்­கி­ வ­ரு­வ­தாக தலி­பான்­களின் மீது பல தரப்­பி­ன­ராலும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. ரஷ்யா தவிர வேறு எந்த நாடும் தலி­பான்­களின் அர­சாங்­கத்தை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அங்­கீ­ரிக்­க­வில்லை.

எனினும், தனது ஆட்­சியின் 4 ஆவது ஆண்டு பூர்த்­தியை கோலா­க­ல­மாக தலி­பான்கள் கொண்­டா­டினர்.

தலை­நகர் காபூல் உட்­பட பல நக­ரங்­களில் இக்­கொண்­டாட்­டங்கள் நடை­பெற்­றன. தலிபான் அங்கத்­த­வர்­களும் ஆத­ர­வா­ளர்­களும் வாக­னங்­களில் இருந்து வெளியே எட்டிப் பார்த்து, “ஆப்­கானிஸ்தான் இஸ்­லா­மிய எமிரேட்” என்ற கறுப்­பு-­,வெள்ளைக் கொடி­களை அசைத்­தனர். ஹெலி­கொப்­டர்கள் காபூல் மீது வட்­ட­மிட்டு, றோஜா மலர் இதழ்­களைத் தூவின.

20 வரு­டங்­க­ளாக, அமெ­ரிக்க தலை­மை­யி­லான படை­க­ளுக்கு எதி­ரான போரின்­போது தயா­ரிக்­கப்­பட்ட குண்­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட பொருட்­களை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற எண்ணெய்க் கொள்­க­லன்­களும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டன.

1996 ஆம் ஆண்டு முதல் ஆப்­கா­னிஸ்­தானை முல்லா ஒமர் தலை­மை­யி­லான தலி­பான்கள் ஆட்­சி­பு­ரிந்து வந்­த ­நி­லையில் 2001 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் நடத்­தப்­பட்ட ‘செப்­டெம்பர் 11 ‘தாக்­கு­த­லை­ய­டுத்து ஒசாமா பின்­லே­டனை தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு அமெ­ரிக்கா வலி­யு­றுத்­தி­யது.

அதற்கு தலி­பான்கள் மறுத்­ததால் ஆப்கான் மீது அமெ­ரிக்கா தலை­மை­யி­லான நேட்டோ படைகள் படை­யெ­டுத்­தன. 2001 நவம்பர் 7 ஆம் திக­தி­யுடன் ஆப்­கா­னிஸ்­தானில் தலி­பான்­களின் முத­லா­வது ஆட்சி முடி­வுக்கு வந்­தது.

அதன்பின் அமெ­ரிக்க ஆத­ர­வுடன் அர­சாங்கம் ஸ்தாபிக்­கப்­பட்­டிருந்த நிலையில் 2020 பெப்­ர­வரி 29 ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் தலை­மை­யி­லான அமெ­ரிக்க அர­சாங்­கத்­துக்கும் தலி­பான்­க­ளுக்கும் இடையில் கட்­டாரில் ஒப்­பந்­த­மொன்று கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. இதன்­படி ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்­கப்­ப­டைகள் 14 மாதங்­க­ளுக்குள் (2021 மே1 ஆம் திக­திக்குள்) வெளி­யே­று­வ­தற்கு இணக்கம் காணப்­பட்­டது.

ஜனா­தி­பதி அஷ்ரப் கனி

இதற்­கி­ணங்க அமெரிக்க படையினர் ஆப்­கா­னிஸ்­தானில் தமது இரா­ணுவ நட­வ­டிக்கை­களை நிறுத்­திக்­கொண்­ட­வுடன் ஜனா­தி­பதி அஷ்ரப் கனி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­துக்கு எதி­ராக தலிபான் படைகள் தாக்­கு­தலை தீவி­ரப்­ப­டுத்­தின. ஆப்கான் அரச படைகள் சர­ண­டைந்­த­தை­டுத்து தலி­பான்கள் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட வேக­மாக பிராந்­தி­யங்­களைக் கைப்­பற்­றினர்.

ஜனா­தி­பதி அஷ்ரப் கனி நாட்­டை­விட்டு தப்­பி­யோ­டிய நிலையில் 2021 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்­கா­னிஸ்­தானில் தலி­பான்­களின் இரண்­டா­வது ஆட்சி ஆரம்­ப­மா­கி­யது.

எதிர்­பார்ப்பு

1996 முதல் 2001 தலி­பான்­களின் முத­லா­வது ஆட்­சி­யா­னது மனித உரி­மை­களை ஒடுக்கும் ஆட்­சி­யா­கவே அறி­யப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், இரண்­டா­வது தடவை அவர்கள் ஆட்­சியை கைப்­பற்­றி­ய­போது, அந்த நிலையில் மாற்றம் ஏற்­ப­டலாம் எனக் கரு­தப்­பட்­டது. குறிப்­பாக பெண்கள் விட­யத்தில் அவர்கள் முந்­தைய நிலை­யை­விட மித­மான போக்கை பின்­பற்­றக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

தலி­பான்கள் தரப்­பி­லி­ருந்தும் இதற்­கான சமிக்­ஞைகள் அப்­போது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

தலி­பான்கள் தலை­நகர் காபூலை கைப்­பற்றி, 2 நாட்­களின் பின்னர் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய தலிபான் பேச்­சாளர் ஸபி­யுல்லா முஜாஹித், ‘இஸ்­லா­மிய சட்ட வரை­ய­றைக்குள் பெண்கள் கல்வி கற்­கவும், வேலை செய்­யவும், சமூ­கத்தில் பங்­காற்­றவும் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள். ஷரிஆ சட்­டத்­துக்குள் பெண்­களின் உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தற்கு நாம் உறு­தி­பூண்­டுள்ளோம்’ என்றார்.

புதி­தாக ஆட்­சிக்கு வந்த தலிபான் அர­சாங்­கத்தின் தலை­வர்­களை பெண் ஊட­க­வி­ய­லா­ளர்கள் செவ்வி காணும் காட்­சி­களும் ஆப்கான் தொலைக்­காட்­சி­களில் ஒளி­ப­ரப்­பா­கின. தலி­பான்­களின் முத­லா­வது ஆட்­சிக்­கா­லத்தில் வெறும் கற்­ப­னை­யாக மாத்­தி­ரமே இருந்­தி­ருக்­கக்­கூ­டிய ஒரு விடயம் இது.

பெண் மருத்­து­வர்­களும் தாதி­யர்­களும் தமது பணியை தொட­ரலாம் என அறி­விக்­கப்­பட்­டது. ஆப்கான் பல்­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு பேரா­சி­யர்கள், விரி­வு­ரை­யா­ளர்கள், மாண­விகள் என பெண்கள் தொடர்ந்தும் சென்­று­கொண்­டி­ருந்­தனர்.

ஏமாற்­றங்கள்

ஆனால், அந்த சூழல் அதிக காலம் நீடிக்­க­வில்லை.

சில மாதங்­க­ளுக்குள் சிறு­மி­க­ளுக்­கான 6 ஆம் வகுப்­புக்கு மேற்­பட்ட பாட­சா­லைகள் மூடப்­பட்­டன. படிப்­ப­டி­யாக பெண்களுக்கான உயர்­கல்வி மற்றும் பெரும்­பா­லான தொழில்கள் தடை­செய்­யப்­பட்­டன.

ஆண் பாது­கா­வ­லரின் துணை­யின்றி பெண்கள் பயணம் செய்­வது தடுக்­கப்­பட்­டது. 2 வரு­டங்­க­ளுக்குள், பெண்கள் பூங்­காக்­க­ளுக்கு செல்­வது, விளை­யாட்டுப் போட்­டி­களில் பங்­கு­பற்­று­வது, அழ­கு­ப­டுத்தல் நிலை­யங்­க­ளுக்கு செல்­வது போன்­ற­வற்­றுக்கும் முற்றாக தடை விதிக்­கப்­பட்­டது.

ஆண் மாண­வர்கள் கல்வி கற்­ப­தற்கும் ஆண்கள் வேலைக்குச் செல்­லவும் தலி­பான்கள் அனு­ம­தித்­தனர். ஆனால், ஆண்­க­ளுக்கும் முழு உரி­மைகள் இல்லை.

பாட­சா­லை­களில் கலை, சங்­கீதம், சமூக விஞ்­ஞானம் போன்ற பாடங்கள் நீக்­கப்­பட்­டன. ஆண் மாண­வர்­க­ளுக்கு ஆசி­ரி­யைகள் கல்வி கற்­பிப்­பதும் தடை செய்­யப்­பட்­டது. இதனால் ஆண் மாண­வர்­களின் கல்வி பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் 2023 ஆம் ஆண்டில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

தலி­பான்­களின் அடக்­கு­மு­றையை எதிர்­கொள்ளும் நிலையில் அந்­நாட்டு மக்கள் இல்லை. தலி­பான்கள் இரண்­டா­வது தட­வை­யாக ஆட்­சியை கைப்­பற்­றிய பின் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் நாட்­டை­விட்டு தப்பிச் சென்­றனர்.

தலிபான் அமைப்பின் தற்­போ­தைய தலை­வ­ரான ஹிப­துல்லா அகுண்ட்­ஸாதா, தலி­பான்கள் இஸ்­லா­மிய சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக கடுமையாக போராடி தியாகங்களை செய்­த­தாகக் கூறினார். தலை­மையின் கட்­ட­ளை­க­ளையும் வழி­காட்­டு­தல்­க­ளையும் பின்­பற்­று­வது கட்­டாயம் என்றும், இந்த கீழ்ப்­ப­டி­தலின் எல்­லைக்குள் அனை­வரும் செயல்­பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அவ­ரது ஆத­ர­வா­ளர்கள், உத்­த­ர­வு­களை வெளி­யி­டு­வ­தற்கு அகுண்ட்­ஸா­தாவின் மேலான மத அதி­கா­ரத்தை வலி­யு­றுத்­து­கின்­றனர். தலிபான் அர­சாங்­கத்தின் உயர் கல்வி அமைச்சர், கடந்த ஏப்ரல் மாதம் ஒரு படி மேலே சென்று, அகுண்ட்­ஸா­தாவை விமர்­சிப்­பது இறை­நிந்­த­னைக்கு ஒப்­பா­னது என்றும், அவ­ருக்கு கீழ்ப்­ப­டி­வது இறை­வனின் கட்­டளை என்றும் கூறினார்.

Hibatullah Akhundzada ஹிப­துல்லா அகுண்ட்­ஸாதா

ஐ.சி.சி. பிடி­வி­றாந்து

இந்­நி­லையில் தலிபான் தலைவர் ஹிப­துல்லா அகுண்ட்­ஸா­தா­வையும் ஆப்­கா­னிஸ்­தானின் பிர­தம நீதி­ய­ரசர் அப்துல் ஹக்கீம் ஹக்­கா­னி­யையும் கைது செய்­யு­மாறு சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐ.சி.சி.) அண்­மையில் பிடி­வி­றாந்து பிறப்­பித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஹைப­துல்லா அகுண்ட்­ஸா­தாவும் ஹக்கீம் ஹக்­கா­னியும், பெண்கள் மற்றும் பெண் குழந்­தை­களுக்கான “கல்வி, தனி­யு­ரிமை, குடும்ப வாழ்க்கை, நட­மாட்டம், வெளிப்­பாடு, எண்ணம், மன­சாட்சி மற்றும் மதம் ஆகி­ய­வற்றின் சுதந்­தி­ரங்­களை” பறிக்கும் கொள்­கை­களை உத்­த­ரவுகளில் வெளிப்படுத்தியமைக்கு “நியா­ய­மான அடிப்­ப­டைகள் உள்­ளன” என்று தான் நம்­பு­வ­தாக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் தெரி­வித்­தது.

கடந்த ஏப்ரல் வரை, ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு மிகப்­பெ­ரிய நன்­கொ­டை­யா­ள­ராக அமெ­ரிக்கா விளங்­கி­யது. ஆப்கான் மக்­களில் அரை­வா­சிக்­குமேல் உயிர்­வாழ்வதற்கான உத­வியை நம்­பி­யுள்­ளனர்.

ஆனால், தலி­பான்கள் இந்த உத­விகள் மூலம் பய­ன­டை­வ­தாக உள்­ளனர் என்ற கரி­ச­னைகளுக்கு மத்தியில் இந்த அவ­சர உத­வியை அமெ­ரிக்கா நிறுத்தத் தீர்­மா­னித்­தது.

அரசு சாரா அமைப்­புகள் மற்றும் நிறு­வ­னங்கள் மூடப்­ப­டும்­போது அல்­லது தங்கள் பணி­களை குறைத்­துக்­கொள்ளும் போது ஆயி­ரக்­க­ணக்­கான ஆப்­கா­னிஸ்தானி­யர்கள் வேலை­களை இழப்­பார்கள். வேலைகள், ஒப்­பந்­தங்கள் மற்றும் குறைந்து வரும் மனி­தா­பி­மான இருப்பு ஆகி­யவை தலி­பான்­க­ளுக்கு வருவாய் இழப்­பா­கவும் மாறும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

ஐ.நா. அறிக்கை

இந்­நி­லையில் ஐ.நா. பெண்கள் அமைப்பு அண்­மையில் விடுத்த அறிக்­கை­யொன்றில், “தலி­பான்­களின் ஆட்சி ஆரம்­ப­மாகி நான்கு வரு­டங்­க­ளாகும் நிலையில் ஆப்­கா­னிஸ்­தானில், பெண்கள் மற்றும் சிறு­மி­களின் உரி­மை­க­ளையும் மாண்­பையும் பணிப்­பு­ரை­களின் அலைகள் பறித்­துள்­ளன.

இந்தக் கட்­டுப்­பா­டுகள் தற்­கா­லி­க­மா­னவை அல்ல, ஒரு உத்­த­ரவு கூட மீளப் பெறப்­ப­ட­வில்லை. தலி­பான்கள், பெண்­களை பொது வாழ்க்­கையில் இருந்து முற்­றிலும் அகற்றும் தங்கள் நோக்­கத்தை அடை­வதில் மிக நெருங்­கி­யுள்­ளனர்” எனத் தெரி­வித்­துள்­ளது.

“ஆப்­கானிஸ்தானில் நிலவும் உலகின் மிக மோச­மான பெண்­களின் உரி­மைகள் நெருக்­கடி நிலை­யா­னது,

இயல்­பா­கி­விடும் அபா­யத்தில் உள்­ளது. பெரும்­பா­லான பெண்­களால் தங்கள் வீட்டில் கூட முடி­வு­களை எடுக்க முடி­ய­வில்லை.

பெண்கள் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் மருத்­துவம் படிப்­ப­தற்கு தடை, நாட்டின் சில பகு­தி­களில் ஆண் மருத்­து­வர்­க­ளிடம் சிகிச்சை பெறு­வ­தற்கு தடை, மற்றும் வெளி­நாட்டு உத­வி­களில் குறைப்பு ஆகி­யவை, பெண்­க­ளுக்கு தேவை­யான மருத்­துவ பரா­ம­ரிப்பு கிடைக்­காமல் இருப்­ப­தற்கு காரணமாக உள்ளன.

“இதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்துகின்றன. பெண்கள் குறைவான ஆரோக்கியமான, குறுகிய வாழ்க்கையை வாழ்கின்றனர்.

மகப்பேற்று மரண அபாயங்களும், குழந்தைத் திருமண விகிதங்களும் அதிகரிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்பாடற்று வளர்கின்றன. ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளின் நிலை, இந்த நாட்டை உலகில் இரண்டாவது மிகப் பெரிய பாலின இடைவெளி கொண்ட நாடாக (யேமனுக்கு அடுத்தபடியாக) ஆக்கியுள்ளது.

“ஆப்கான் பெண்களும் சிறுமிகளும் தொடர்ந்து வலிமை, மீள்தன்மை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.

சமத்துவம் சாத்தியம் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், அனைவருக்கும் சிறந்த ஆப்கானிஸ்தானை உருவாக்குவதற்கான இந்த சவால்களை அவர்கள் தனியாக எதிர்கொள்ளக் கூடாது.

உலகம் இப்போது செயல்பட வேண்டும். உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்ல, அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் சம உரி­மை­க­ளுடன் ஒரு தலை­மு­றையின் எதிர்­கா­லத்தை உரு­வாக்­கு­வ­தற்கு ஆப்கான் பெண்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும்” எனவும் மேற்­படி அறிக்­கையில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆர்.சேதுராமன்-

Share.
Leave A Reply

Exit mobile version