– காயமடைந்தவரை மீட்க பொதுமக்கள் எவரும் முன்வரவில்லை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியின் 256ஆவது கிலோமீட்டர் பகுதியில், பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக இன்று (29) அதிகாலை 5:30 மணியளவில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற இ.போ.ச பஸ், ஏ9 வீதியில் 256ஆவது கிலோமீட்டர் பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, பரந்தன் பகுதியில் இருந்து வந்த கனரக டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸுடன் மோதியது.

அதே நேரத்தில், கிளிநொச்சி நோக்கி இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்துடன் மோதியது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிளிநொச்சி பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, 1990 அம்பியூலன்ஸ் வண்டி மூலம் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து இடத்தில் கூடியிருந்த பலர், காயமடைந்தவருக்கு உதவுவதற்கு பதிலாக, புகைப்படம் எடுப்பதிலும், வீடியோ பதிவு செய்வதிலும் கவனம் செலுத்தியதாக அவதானிக்கப்பட்டது.

காயமடைந்தவரை அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றுவதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியபோதும், எவரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version