,”நெல்லை,நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே எடுப்பல் கிராமம் கக்கன் தெருவைச் சேர்ந்தவர் பூல்பாண்டி. இவருடைய மனைவி ரெஜினா (வயது 43). இவர்களுடைய மகன்கள் கொம்பையா (வயது 22), வினோத் (வயது 13).
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பூல்பாண்டி துக்க வீட்டுக்கு சென்று விட்டு, கருங்குளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
பின்னர் ரெஜினா கட்டிட தொழிலாளியாக வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தார். மூத்த மகன் கொம்பையா டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இளைய மகன் வினோத் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். ரெஜினாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த ரெஜினாவின் உறவினர்கள் மற்றும் மகன் கொம்பையா அவர்களைக் கண்டித்தனர்.
எனினும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தனர். நேற்று முன்தினம் பரப்பாடி அருகே தாமரைகுளத்தில் நடந்த கோவில் கொடை விழாவுக்கு கொம்பையா சென்று விட்டு நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டுக்குள் தாயார் ரெஜினாவுடன் கள்ளக்காதலன் உல்லாசமாக இருந்ததைப் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே ஆத்திரத்தில் வீட்டுக்குள் நுழைந்ததும், கள்ளக்காதலன் கொம்பையாவை தள்ளிவிட்டு வெளியே தப்பிச் சென்றார்.
இதனால் ஆத்திரமடைந்த கொம்பையா தாயார் ரெஜினாவைக் கண்டித்தார். மேலும் ஆத்திரம் தீராத அவர் சைக்கிளுக்கு காற்று அடிக்க பயன்படுத்தும் இரும்பு பம்பை எடுத்து தாயாரின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த தாயார் ரெஜினா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த பயங்கர கொலை குறித்து அக்கம்பக்கத்தினர் மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இறந்த ரெஜினாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொம்பையாவை பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.”,