திருகோணமலை கந்தளாய் பகுதியில் திருடப்பட்ட இரண்டு எருமை மாடுகளை வைத்திருந்த கந்தளாய் பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும்தெரியவருவதாவது,

கடந்த 13ஆம் திகதி சேருநுவரப் பகுதியில் இருந்து திருடப்பட்ட எருமை மாடுகள் கந்தளாய் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு விற்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னர், குறித்த நபர் அவற்றை தனது தோட்டத்தில் கட்டியிருந்த நிலையிலே, அவர் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபர் ஒரு அரச ஊழியர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல். எம். சஞ்சீவ பண்டாராவின் வழிகாட்டுதலின் கீழ், இந்த விடயம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மூதூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிவான் தஸ்னீம் பௌஸான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version