முஸ்லிம் மத்திய கிழக்கை சீர்குலைக்கும் நோக்கில் பலஸ்தீன நிலங்களில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவால் ஸ்தாபிக்கப்பட்ட பாசிச குடியேற்ற காலனித்துவ கொலைகார இயந்திரமான இஸ்ரேல், 2025 செப்டம்பர் 9 ஆம் திகதி பிராந்தியத்தில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளத்தைக் கட்டிக் காத்து, விருந்து படைக்கும் கட்டார் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுத்து, இதுவரை அமெரிக்க வரி செலுத்துவோர் பணத்தில் 22 பில்லியன் அமெரிக்க டொலர்களை பலஸ்தீனர்களை படுகொலை செய்வதற்கும் காஸாவில் தங்கள் சுக போகத்துக்கான மத்திய கிழக்கின் உல்லாச புரியை கட்டியெழுப்புவதற்காக காஸாவை அழிப்பதற்கும் செலவிட்டுள்ளார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். கட்டார் மீதான இஸ்ரேலின் தாக்குதலை அவர் ஆசீர்வதித்துள்ளார். இது ஹமாஸின் மூத்த அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்டது என அமெரிக்க மற்றும் பிராந்திய உயர் அதிகாரிகள் ‘மிட்ல் ஈஸ்ட் ஐ’ இணையத்துக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்பாடு முரண்பாட்டை மேலும் ஆழமாக்குகின்றது. டோஹாவில் குண்டு வீசி கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் போராளிகள் அல்லர்.
அவர்கள் சமாதான பேச்சுவார்த்தையாளர்கள். இந்தப் பேச்சுவார்த்தைக்கு இடமளிக்குமாறு கட்டாரை வொஷிங்டன் கேட்டுக்கொண்டதன் விளைவாக அங்கு வந்த பிரதிநிதிகள். கட்டாரின் விருந்தாளிகள். எவ்வாறாயினும் அதிர்ஷ்டவசமாக இந்தத் தாக்குதலில் இருந்து ஹமாஸ் அதிகாரிகளான கலீல் அல்-ஹய்யா காலித், மெஷால் ஜாஹெர் ஜபரின் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் பலர் உயிர் தப்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அதிகாரிகளில் ஹாயாவின் மகன் ஹம்மம் அல்-ஹய்யா மற்றும் அவரின் அலுவலக இயக்குனர் ஜிஹாத் லுபாபாத் ஆகியோர் இந் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் வட்டாரங்கள் மிட்ல் ஈஸ்ட் ஐ க்கு தெரிவித்தன. மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
இந்த தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. காரணம், சில மாதங்களுக்கு முன்புதான் கட்டார், ட்ரம்பை வரவேற்க சிவப்பு கம்பளத்தை உருட்டியது.
காஸாவில் இனப்படுகொலைக்கு முழுமையாக ஆதரவளிக்கும் அமெரிக்காவில் 1.3 ட்ரில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாக உறுதியும் அளித்தது. கட்டார் அரச குடும்பம் ஜனாதிபதி ட்ரம்பிற்கு 400 மில்லியன் டொலர்கள்பெறுமதி கொண்ட ஆடம்பர விமானம் ஒன்றையும் பரிசாக வழங்கியது. இது வொஷிங்டனுடனான அதன் மூலோபாய உறவுகளின் ஆழத்தை கோடிட்டுக் காட்டுகிறது.
கட்டார் மீதான தாக்குதலை நடத்த எட்டு இஸ்ரேலிய எவ்-15 போர் விமானங்கள் மற்றும் நான்கு எவ்-35 விமானங்கள் ஜோர்தான் மற்றும் சவூதி அரேபியாவின் வான்வெளி மீது பறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், எதிர்பார்த்தபடி இரு நாடுகளும் இந்த அறிக்கைகளை மறுத்துள்ளன.
அரேபியர்கள் மற்றும் பலஸ்தீனர்கள் இல்லாத, நதி முதல் கடல் வரையான முழு நிலப்பரப்பும் தங்களுடையதாக இருக்க வேண்டும். அதுவே இஸ்ரேல் விரும்பும் அமைதி என்று கட்டுரையாளர் ஜியாத் மோட்டாலா கூறி உள்ளார்.
இருப்பினும் இஸ்ரேல் போதித்த இந்த கூர்மையான பாடம் கட்டாருக்கு மட்டும் உரியது அல்ல. இது ரியாத் மற்றும் அபுதாபிக்கும் பொருந்தும்.
அந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் சர்வதேச அரசியலில் மிகவும் அவமானகரமான ஒரு போக்கைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஓர் இனவெறி ஆட்சியுடன் ஒத்துழைக்கும் அதே நேரத்தில் தங்களை அரசுத் தலைவர்கள் என்றும் அவர்களே பாராட்டிக் கொள்கின்றனர்.
கட்டாரின் ஓர் இடத்தின் மீது குண்டுவீசுவது என்பது அங்குள்ள ஒவ்வொரு அரண்மனையையும், ஒவ்வொரு அமைச்சகத்தையும், அரபு உலகின் ஒவ்வொரு தெருவையும் உலுக்கும் ஓர் இடி என்று கட்டுரையாளர் சவுமயா கன்னோஷி தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரபு தலைநகரமும் பாதுகாப்பானது அல்ல என்பதே இதன் அர்த்தம். இஸ்ரேல் ஒரு கையால் அரபு பணத்தை கைப்பற்றி, மற்ற கையால் அரபு மண்ணை எரிக்கிறது.
‘அவர்களின் செல்வத்தை சூறையாடுங்கள். அதேநேரம் உங்கள் போர் விமானங்களை அவர்கள் மீது கட்டவிழ்த்து விடுங்கள்.’ -அதுதான் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியுள்ள புதிய ஒழுங்கு.
கடந்த சில வாரங்களில் மட்டும் காஸா, மேற்குக் கரை, சிரியா, லெபனான், யேமன் மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியுள்ளது. கடந்த ஆண்டும் அது ஈராக் மீது குண்டு வீசியது.
கடந்த இரண்டு நாட்களில் துனிசியாவில் உள்ள ஸ்முத் ஃப்ளோட்டிலாவின் இரண்டு கப்பல்களை அது தாக்கியது. இஸ்ரேல் ஒரு புதிய ஒழுங்கை நிறுவுகிறது.
ஒவ்வொரு அரபு நிலமும், நீர் பரப்பும் மற்றும் வான் வெளியும் அது விரும்பிய நேரத்தில் புகுந்து விளையாடும் விளையாட்டு மைதானம். இங்கு சர்வதேச சட்டம் என்பது வெறும் சாம்பல் மேடு. இங்கு நிலைத்துள்ள ஒரே சட்டம் காட்டுமிராண்டித்தனமான சக்தி மட்டுமே. இதுவே அமெரிக்க-இஸ்ரேல் புதிய ஒழுங்கு.
தண்டனையிலிருந்து விடுபாட்டுரிமை பெறும் கோட்பாடு இன்னமும் மேம்படுத்தப்படவில்லை. ஆனால், 1982 ஆம் ஆண்டின் ‘யினான் திட்டம்’ இன்னமும் பின்பற்றப்படுகின்றது. இந்தத் திட்டம் அரபு நாடுகளை சிறு சிறு குழுக்களாகவும் பகுதிகளாகவும் பிரிக்க அழைப்பு விடுக்கின்றது.
பலஸ்தீனர்ளை ஜோர்டான் ஆற்றின் குறுக்கே இடம்பெயர வைப்பது. இது தான் 1982இல் யூத ஊடகவியலாளர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட ‘யினான் திட்டம்’ என அழைக்கப்படும் அகண்ட இஸ்ரேலின் உருவாக்கத்துக்கான அடிப்டைத் திட்டமாகும்.
அண்மையில் ஒரு நேர்காணலில், இஸ்ரேலிய அரசியல்வாதி அவி லிப்கின், இஸ்ரேலின் எல்லைகள் “லெபனானில் இருந்து சவூதி அரேபியா வரை” விரிவடையும் என்று கணித்துள்ளார். அதை அவர் “பெரிய பாலைவனம்” என்றும், “மத்தியதரைக் கடலில் இருந்து யூப்ரடீஸ் வரை இருக்கும்” என்றும் வர்ணித்துள்ளார்.
Yinon Plan
அவர் மேலும் கூறுகின்றார் “யூப்ரடீஸின் மறுபுறத்தில் யார் இருக்கின்றார்கள்? குர்திஷ்கள். அவர்களும் எமது நண்பர்களே. எனவே,எங்களுக்கு பின்னால் மத்தியதரைக் கடலும், எங்களுக்கு முன்னால் குர்திஷ்களும் உள்ளனர்.
லெபனான், உண்மையில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கான ஒரு குடை. அதை பின்னர் நாங்கள் எடுத்துக் கொள்வோம். நாங்கள் மக்கா, மதீனா மற்றும் சினாய் மலைகளைக் கைப்பற்றி அந்த இடங்களையும் தூய்மைப்படுத்தப் போகிறோம் என்று நான் நம்புகிறேன்”.
சியோனிச எழுத்தாளர்கள் மக்கா மற்றும் மதீனா வரை பரவியுள்ள இஸ்ரேலின் எல்லைகளைப் பற்றி வெளிப்படையாக கற்பனை செய்கின்றார்கள். மேலும் ‘மக்காவுக்குத் திரும்பு’ போன்ற புத்தகங்கள் மற்றும் வெற்றிக்கான விவிலிய வரைபடங்களையும் அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
அவர்களின் இறுதி இலக்கு எப்போதும் தெளிவாகவே இருக்கின்றது. அரபு சக்திகளை துண்டு துண்டுகளாகக் கலைப்பது தான் அந்த இறுதி இலக்கு. இதனால் இஸ்ரேலுக்கு மேலாதிக்கம் செலுத்த முடியும்.
சற்று நிதாணித்து நின்று திரும்பிப் பாருங்கள். சிரியா கலைந்து போய் விட்டது. ஈராக் சிதைந்து விட்டது. யேமன் சீர் குலைந்துவிட்டது. காஸா முற்றுகையிடப்பட்டுள்ளது, லெபனானில் இரத்தம் வழிந்தோடுகிறது. இவை எல்லாமே ‘யினான்’ (Yinon Plan) வரைபடத்தின் வெற்றிகரமான நிகழ்கால அமுலாக்கமாக மாறியுள்ளன.
இந்த விரிவாக்கவாத, மேலாதிக்கவாத திட்டத்தை செயல்படுத்துவதில் அரபு ஆட்சிகள் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளன.
கேம்ப் டேவிட், ஒஸ்லோ உடன்படிக்கைகள், வாடி அராபா மற்றும் ஆபிரகாம் உடன்படிக்கைகள் மூலம் பத்தாண்டுகளுக்குப் பிறகு சமாதானம், பாதுகாப்பைக் கொண்டு வரும் என்ற மாயையின் கீழ் அவர்கள் கண்ணியத்தைக் கைவிட்டனர்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் கூற்று இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. “அமெரிக்காவால் பாதுகாக்கப்பட்டவர்கள் இப்போது நிர்வாணமாக விடப்படுகின்றார்கள்” என்று அவர் கூறினார்.
இந்த ‘யினான் திட்டம்’ ஓடெட் யினான் என்பவரால் எழுதப்பட்டு மறைந்த இஸ்ரேலிய பேராசிரியர் இஸ்ரேல் ஷாஹாக் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு கிவுனிம் இதழில் வெளியிடப்பட்டது.
அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போரை அறிவிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் குறைந்தபட்சம் பொருளாதாரத் தடைகள், புறக்கணிப்புகள், வான்வெளிகளை மூடுதல் மற்றும் வர்த்தக முடக்கங்களையும் விதிக்க முடியும். அத்தோடு அவர்கள் பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை சிறையில் அடைத்து, ஆர்ப்பாட்டங்களைத் தடைசெய்து, பலஸ்தீனத்துடனான ஒற்றுமையை தொடர்ந்து அமைதிப்படுத்துவார்கள்.
இருப்பினும், மக்கள் மத்தியில் நிலவும் மௌனம் என்றென்றும் நீடிக்காது. அரபு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பலஸ்தீனர்கள் குண்டுகள் மற்றும் பஞ்சத்தை தாங்குவதை அவர்கள் காணுகின்றார்கள். மேலும், லண்டனில் இருந்து கேப் டவுன், ஜகார்த்தா முதல் நியூயோர்க் வரை உலகளாவிய ஒற்றுமை எழுகின்றது.
அவற்றை அவர்கள் கூர்மையாக அவதானிக்கின்றார்கள். தங்கள் ஆட்சியாளர்கள் ஏன் எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் தம் மத்தியில் கேள்வி கேட்கின்றார்கள்.
இத்தகைய உத்வேகம் விரைவில் தெருக்களிலும், கடல்களிலும், வானத்திலும் ஊடுருவிச் செல்லலாம். ஒரு பாசிசவாத, விரிவாக்கவாத இஸ்ரேலுடன் இயல்பாக்கம் செய்வது அவர்களைக் காப்பாற்றும் என்ற மாயையை கைவிட்டு விட்டு, அதற்கு பதிலாக நட்பு நாடுகளுடன் கூட்டுப் பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதை, தெரிவு செய்ய அரபு ஆட்சியாளர்களுக்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது.
அரபு நாடுகள் ஈரான் அல்லது வேறு யாரையும் அல்ல, இஸ்ரேலை- தங்கள் உயிர்வாழ்வுக்கான முக்கிய அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அவர்கள் வெளிப்படையில் அவமானமானத்துக்கு உரியவர்களாகவே இருப்பார்கள்.
-லத்தீப் பாரூக்-