திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்புனர்வு செய்த குற்றவாளிக்கு 32 ஆண்டு கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் நேற்று முன்தினம் (02) வழங்கினார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியிலும் 2022 பெப்ரவரி மாத்ததிலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கெதிராக வழக்கு தொடரப்பட்டு வந்தன.
இதனடிப்படையில் குறித்த வழக்கின் சந்தேக நபரான சேருநுவர – தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் ரன்கொத் பேடிகே உதார பெதும் (26 வயது) என்ற சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் 5 குற்றச்சாட்டுகளும் வழக்கு விசாரணையின்போது உறுதி செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் திருகோணமலை மேல் நீதிமன்ற அரச சட்டவாதி தர்ஷிகா திருக்குமாரநாதன் ஆஜராகி இருந்தார்.
இதேவேளை குறித்த வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் மொத்தமாக 8 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 குற்றச்சாட்டுகளுக்கும் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ. 60 ஆயிரம் செலுத்தவேண்டும் இல்லையேல் மேலும் இரு வருட சாதாரண சிறை தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் இத்தண்டனை ஏக காலத்தில் நிறைவேற்றப்படும் என்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் கட்டளை பிறப்பித்தார்.