பாடசாலை மாணவிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் ஜனக பண்டார தெரிவித்தார்.

பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை சந்தேக நபர் காண்பித்ததாக நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலையில் மாணவர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன், நானுஓயா பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (21) ஆஜர்படுத்துவத்றகு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்

நானுஓயா காவல்துறை மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி மற்றும் அவரது பொலிஸ் அதிகாரிகள், நானுஓயா பகுதி மக்கள், பாடசாலை மாணவிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும் இதன் போதே இவ்வாறான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த 06 மாணவிகள் தடயவியல் மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version