யாழ்ப்பாணம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

அதன் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான சுற்றாடல் அறிக்கை பெறப்படவில்லை என்பது தெரியவந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் அமையவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நீண்ட காலத் திட்டத்தின் கீழ் மண்டைதீவு தீவை சர்வதேச தரத்திலான வசதிகளைக் கொண்ட ஒரு ‘விளையாட்டு நகராக’ மாற்றுவது குறித்த திட்டமும் இதன்போது அறிவிக்கப்பட்டது.

இந்த விளையாட்டு நகர் நீச்சல் தடாகம், ஏனைய விளையாட்டுகளை உள்ளடக்கிய முழுமையான உள்ளக விளையாட்டு அரங்கு, நட்சத்திரத் தரம் கொண்ட ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தகத் தொகுதிகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களையும் உள்ளடக்கியதாக அமையும்.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நான்கு கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக போட்டிகளை நடாத்தக்கூடிய வகையில் மைதானமும் அரங்கும் நிர்மாணிக்கப்படும்.

இரண்டாம் கட்டத்தின் கீழ் பிரதான பார்வையாளர் அரங்கு மற்றும் ஊடகப் பிரிவு அறையும், மூன்றாம் கட்டத்தின் கீழ் ஏனைய பார்வையாளர் அரங்குகளை நிர்மாணிப்பதற்கும், இறுதிக்கட்டத்தில் மின்னொளி தொகுதியை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், வேலணை பிரதேச சபையினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள காணியில் நிர்மாணிக்கப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 40,000 பார்வையாளர்கள் போட்டிகளைக் கண்டுகளிக்க முடியும்.

அத்துடன் சர்வதேச தரத்திலான பகல்/இரவு போட்டிகளை நடாத்தும் வசதிகளுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஐந்தாவது மைதானமாகவும், சர்வதேச போட்டிகளை நடாத்தக்கூடிய ஏழாவது மைதானமாகவும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வரலாற்றில் இடம்பிடிக்கும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

Share.
Leave A Reply

Exit mobile version