சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட யாழ். இளைஞன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தை உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட 30 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்கு சுவிட்சர்லாந்தின் ப்ரிபோர்க் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர்ஸ் (Kerzers) நகரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் பேருந்துக்குள் புகைமூட்டம் காணப்பட்டதையடுத்து, பயணிகள் வெளியேற முயற்சித்துள்ளனர். எனினும், தீ மளமளவெனப் பரவியதில் பேருந்து முழுமையாகக் கருகியுள்ளது.

பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகச் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த இரங்கலையும் இறுதி அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version