2026 பெப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஈரான்,
தன்மீதான தாக்குதல்களுக்கு தள வசதிகள் அளித்ததாக நம்பப்படும் தனது வளைகுடா அண்டை நாடுகளின் அமெரிக்கத் தளங்களைத் தாக்கி வருகின்றது.
இந்த தாக்குதல்களின் போது தங்களை மீட்பதற்கு முன்வர அமெரிக்கா தவறியமைக்காக, சவூதி தலைமையிலான எண்ணெய் வளம் நிறைந்த அரபு வளைகுடா நாடுகள் அமெரிக்கா மீது அதிருப்தி அடைந்து, அமெரிக்காவுடனான உறவுகளைத் துண்டிக்க முன்வந்துள்ளன.
இஸ்ரேலின் அடுத்த இலக்காக தாங்கள் இருக்கக்கூடும் என்று அரபு தலைவர்கள் அஞ்சுகின்றனர்.
இதுதான் இன்றைய நிலைமை. ஒரு சவூதி அதிகாரி அல் ஜசீராவிடம் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்கா எங்களை கைவிட்டு விட்டு ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களிடமிருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதில் அதன் பாதுகாப்பு பொறிமுறைகளின் முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளது.
அவர்களுக்கு தள வசதிகளை வழங்கியுள்ள நாமும் ஏனைய வளைகுடா நாடுகளும் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தயவில் விடப்பட்டோம்” என்று கூறி உள்ளார்.
அரேபிய வளைகுடாவில் உள்ள எரிசக்தி மற்றும் பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீது சில ட்ரோன் தாக்குதல்களை இஸ்ரேலே நடத்தி உள்ளதாக, ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களை பிராந்திய சீற்றத்தைத் தூண்டுவதற்கும், அரபு நாடுகளை தெஹ்ரான் மீதான போருக்குள் இழுக்கவும், திட்டமிட்ட ஒரு முயற்சி என்று ஈரான் அதிகாரிகள் விளக்கி கூறியுள்ளனர்.
வளைகுடா நாடுகளை போருக்குள் நுழையத் தூண்டுவதற்காக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பொதுமக்கள் இலக்குகள் மீதான சில தாக்குதல்கள் இஸ்ரேலால் நடத்தப்பட்டதாக மேலும் சில வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக காஸா மீதான இஸ்ரேலிய இனப்படுகொலையிலும், பலஸ்தீனர்கள் கண்மூடித்தனமாக படுகொலை செய்யப்பட்டதிலும், அரபு சர்வாதிகாரிகள் பலஸ்தீனர்களைப் பாதுகாக்க வேண்டிய தமது தார்மீக கடமையில் இருந்து மோசமாகத் தவறிவிட்டனர்.
அதற்கு பதிலாக அவர்கள் இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்தனர். பலஸ்தீன மக்களை முழுமையாகக் கைவிட்டனர். அந்த மக்கள் மனித வரலாற்றின் இடைக்கால பாணியிலான காட்டுமிராண்டித்தனத்திற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தங்குமிடம் உணவு மற்றும் தண்ணீர் கூட வழங்கப்படவில்லை.
மறுபுறம் இந்த வளைகுடா நாடுகள் அமெரிக்க இராணுவத் தளங்களை தமது பூமிக்குள் அனுமதித்தன. அவை உண்மையில் அந்தந்த நாடுகளில் இஸ்ரேலிய இராணுவத் தளங்களாகவே இருந்தன.
பிராந்தியத்தில் அரேபியர்கள் மீதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மீதும் அமெரிக்க-இஸ்ரேலிய கடுமையான நிலைப்பாடுகள் இருந்த போதிலும், அரபு நாடுகள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.
அரபு நாடுகள் தமது மக்களின் கருத்துக்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்கவில்லை. தங்கள் நாடுகளின் செல்வத்தின் பெரும்பகுதியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அரபு நாடுகள் முதலீடு செய்துள்ளன.
மொத்தத்தில் அவர்கள் முஸ்லிம் நாடுகளையும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் துன்பங்களையும் கண்டு கொள்ளவே இல்லை அல்லது அவற்றை கண்டும் காணாமல் நிராகரித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதற்கிடையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவை சவூதி அரேபியா திரைக்குப் பின்னால் வலியுறுத்தியதாகவும் அதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இது சவூதி இராச்சியத்தின் பொதுவான இராஜதந்திர நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாகும்.
“சவூதி – இஸ்ரேலின் கூட்டு உந்துதல் ஈரானைத் தாக்க ட்ரம்பிற்கு உற்சாகமூட்டியது” என்ற தலைப்பில் 2026 பெப்ரவரி 28 அன்று வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல வாரங்களாக நீடித்த ஆலோசனைகளுக்குப் பிறகு ஈரான் மீது பரந்த அளவிலான தாக்குதலைத் தொடங்கி உள்ளார்.
மத்திய கிழக்கில் உள்ள வழமைக்கு மாறான ஒரு ஜோடி, அமெரிக்க கூட்டாளிகளான இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா இந்த விஷயத்தில் ஜனாதிபதி ட்ரம்புக்கு பெரும் அழுத்தங்ளை கொடுத்துள்ளன.
இந்த விடயத்தை நன்கு அறிந்த நான்கு முக்கிய நபர்களின் கூற்றுப்படி இந்த அழுத்தங்களின் பிறகு இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க படைகள் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக ஆட்சியில் இருக்கும் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனியை கவிழ்க்க ஒன்றிணைந்தன.
இந்த தாக்குதல் அதன் ஆரம்ப மணி நேரத்திலேயே ஆயத்துல்லா கமேனி மற்றும் இன்னும் பல மூத்த ஈரானிய அதிகாரிகளைக் கொல்ல வழிவகுத்தது.

அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போது சவூதி முடிக்குரிய இளவரசருக்கும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸேஷ்கியனுக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பும் இடம்பெற்றது.
அதை தொடர்ந்து ஈரான் மீதான தாக்குதல் ஒன்று நடந்தால் அதற்கு சவூதி வான்வெளியை அல்லது அதன் பிரதேசங்களைப் பயன்படுத்த இளவரசர் அனுமதிக்க மாட்டார் என்று றியாத் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இளவரசரின் நிலைப்பாட்டை அவரது சகோதரர் சவூதியின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் உறுதி செய்தார்.
அவர் கடந்த ஜனவரி மாதம் வொஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளுடன் மூடிய கதவுகளுக்குள் இரகசிய கூட்டங்களை நடத்தினார். இந்த இரகசிய சந்திப்புக்களின் போது ஈரான் மீது தாக்குதல் ஒன்றை நடத்தாவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர் அமெரிக்காவை எச்சரித்துள்ளார் என்றும் இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் ஈரானும் சுன்னாஹ் பிரிவு தலைமையிலான சவூதி அரேபியாவும் நீண்ட காலமாக முஸ்லிம் உலகின் தலைமைத்துவத்துக்கான தீவிரமான போட்டியைக் கொண்டுள்ளன. இது பிராந்தியத்தில் இதற்கு முன்னரும் சில மறைமுக யுத்தங்களை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில் தனது உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் இஸ்லாம் தொடர்பான சவூதி அரசின் நிலைப்பாடுகள் சில சமயங்களில் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே கவலையையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உதாரணமாக, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேலிய யுத்தங்களின் போது, பாதிக்கப்பட்ட முஸ்லிம் நாடுகளுக்கு சார்பாக நிற்பதற்கு பதிலாக மற்ற தரப்பிலேயே சவூதி அரேபியா நின்றுள்ளது.
எகிப்தில் 61 ஆண்டுகளில் முதல் முறையாக மக்களின் விருப்பப்படி சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது முர்சியின் இஸ்லாமிய சகோதரத்துவ அரசாங்கத்தை கவிழ்க்க சவூதி அரேபியா குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன இணைந்து பதினொரு பில்லியன் டொலர்களை செலவிட்டன.
இதற்கிடையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸும் இஸ்ரேலின் நலனுக்காக முழு பிராந்தியத்தையும் சீர்குலைப்பதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் பங்காளியாக மாறியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ, பிரபல ஊடகவியலாளர் டக்கர் கார்ல்சனுடனான ஒரு பேட்டியில் நைல் நதியிலிருந்து யூப்ரடீஸ் வரையிலான அனைத்து நிலங்களையும் இஸ்ரேல் எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார். இது வெறும் தற்செயலான ஒரு கூற்று அல்ல.
இந்த தீய நோக்கத்திற்காக இஸ்ரேல், அரபு நிலங்களில் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலைகளை நடத்தியது மட்டுமல்லாமல், பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான தனது திட்டங்களையும் சுட்டிக்காட்டியது. அது மட்டுமன்றி மேற்குக் கரை சிரியா மற்றும் லெபனானிலும் தனது பிடியை ஆழமாக்கியுள்ளது.
சுருக்கமாக கூறுவதாயின் இஸ்ரேலின் முழுமையான பிராந்திய மேலாதிக்கத்தின் நோக்கம் ஒருபோதும் தெளிவாக இருந்ததில்லை.
மேலும் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் விரிவாக்கம் மற்றும் அதன் பிராந்திய சக்தியின் விரிவாக்கம் ஆகிய இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே உள்ளது.
இது ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு தெரிவிக்கப்படும் அரபு எதிர்ப்பலைகளின், மையத்தில் ஏற்படுத்த விளையும் கட்டமைப்பு மாற்றமாகும்.
பிராந்திய பாதுகாப்பையும் மற்றும் பொருளாதார நலன்களையும் பாதுகாக்க, வளைகுடா நாடுகள் மத்தியில் ஸ்திரத்தன்மை அவசியம். ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அதற்கு எதிரான ஈரானிய பதிலடி, என்பன எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகளில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது குறித்து அவர்கள் குறிப்பாக கவலை அடைந்துள்ளனர்.
ஒருவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தவிர, பெரும்பாலான அரபு ஆட்சிகள் இப்போது இஸ்ரேலை பிராந்தியத்தில் மிகவும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் சக்தியாகவே கருதுகின்றன.
இஸ்ரேலிய விரிவாக்கவாதம், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகளைப் பொருட்படுத்தாமல், எல்லைகளைத் தாண்டி தாக்குதல் நடத்துவதற்கான அதன் விருப்பம், மற்றும் பிராந்திய மேலாதிக்கத்தை வெளிப்படையாகக் கடை பிடிப்பது என்பன அரபு தலைவர்கள் ஆபத்தை மதிப்பிடும் பொறிமுறையை அடிப்படையில் மாற்றி அமைத்துள்ளன.
அரபு தலைவர்கள் இப்போது தாங்கள் ஏற்கெனவே “அகண்ட இஸ்ரேலின்” பாதையில் வீழ்ந்திருக்கலாம், அல்லது அவர்கள் இஸ்ரேலின் அடுத்த இலக்காக இருக்கலாம் என்று அஞ்சுகின்றார்கள்.
இதில் பரிதாப நிலை என்னவென்றால் இஸ்ரேலிய போர்க்குணமும்-இஸ்ரேலின் வேண்டுதலின் பேரிலான அமெரிக்க போர்க்குணமும் இப்போது ஒரு பிளவுபட்ட பிராந்தியத்தை ஒன்றிணைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இது ஒன்றில் பொதுவான நலன்களின் அடிப்படையில் அல்லது குறைந்தபட்சம் ஒரு பொதுவான அச்சுறுத்தலின் அடிப்படையில் கூட அமையலாம்.
லத்தீப் பாரூக்