மத்திய கிழக்குப் பகுதியில் உருவாகும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றங்கள் உலக பொருளாதாரத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரலாற்றில் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் அந்தப் பகுதி முக்கிய பங்காற்றுவதால், அங்கு ஏற்படும் எந்தப் போரும் உலக சந்தைகளில் அதிர்வை ஏற்படுத்துகிறது.
தற்போது ஈரான் மீதான இஸ்ரேல் – அமெரிக்காவின் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட போரின் காரணமாக உலகளவில் எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
உலகில் உற்பத்தியாகும் எண்ணெயின் சுமார் இருபது சதவீதம், பாரசீக வளைகுடாவையும் ஓமான் குடாவையும் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்நிலையில் ஈரான் போர் காரணமாக அந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
போர் தொடங்கிய சில நாட்களுக்குள் எண்ணெய் விலை வேகமாக உயர்ந்தது. ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை சில சந்தர்ப்பங்களில் நூறு அமெரிக்க டொலர்களைக் கடந்தன.
இந்த உயர்வு உலகளாவிய எரிபொருள் விலையையும் நேரடியாக பாதித்துள்ளது. உதாரணமாக கம்போடியாவில் சுமார் 67 சதவீதத்தாலும் வியட்நாமில் 49 சதவீதத்தாலும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வரலாற்றில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கான ஆகக்கூடுதலான விலை 2008 ஜூலை மாதம் 147.27 டொலர்களாக பதவியாகியமை குறிப்பிடத்தக்கது.

உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம்தான் ஹோர்முஸ் நீரிணைக்கு ஊடாக கொண்டுசெல்லப்படுவது வழக்கம்.
ஆனால், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகமாகும். கடந்த வருடம் ஹோர்முஸ் நீரிணைக்கு ஊடாக கொண்டு செல்லப்பட்ட எண்ணெயில் 90 சதவீதம் ஆசிய நாடுகளுக்கே சென்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மலேசியா, இந்தோனேஷியா போன்றவை எண்ணெய் வளம் கொண்ட நாடுகள். ஆனால், கடந்த பல வருடங்களில் அவை தமது சொந்த எண்ணெய் உற்பத்தியை குறைத்துக்கொண்டு எண்ணெய்யை ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை அதிகரித்திருந்தன.
மத்திய கிழக்கில் மாத்திரமல்லாமல், ரஷ்யா, வடஅமெரிக்கா, வெனிசுவேலா, ஆபிரிக்க நாடுகள் என உலகின் பல்வேறு பாகங்களிலும் எண்ணெய் வளம் உள்ளன. ஆனால், எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் மசகு எண்ணெய் ஒரே தன்மையானவை அல்ல.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளின் மசகு எண்ணெயை சுத்திகரிப்பதற்காக பல வேறு பல நாடுகளில் நிர்மாணிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் திடீரென வேறு பிராந்திய மசகு எண்ணெய்யை சுத்திகரிப்பது கடினம். இதற்கு பெரும் செலவில் பல மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் எரிபொருள் செலவிலேயே மட்டும் முடிவதில்லை. அதன் விளைவுகள் உலக பொருளாதாரத்தின் பல துறைகளில் விரைவாகப் பரவுகின்றன.
விமானப் பயணச் செலவுகள் அதிகரிக்கின்றன. கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் உயர்கின்றன. தொழில்துறை உற்பத்தி செலவுகள் கூடுகின்றன. இதனால் பொருட்களின் விலையும் உயரத் தொடங்குகிறது. இறுதியில் இது பணவீக்கமாக மாறி உலக பொருளாதாரத்தை அழுத்துகிறது.
தற்போது ஈரானில் தாக்குவதற்கு எதுவுமே இல்லை நிலை காரணமாக எந்த நேரத்திலும் போர் நிறுத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால், ஈரான் மீது தாக்குதல் தொடுத்ததன்றான அனைத்து நோக்கங்களும் நிறைவேறும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீண்டகால போருக்கு தான் தயாராகவுள்ளதாகவும், மசகு எண்ணெய் பீப்பாய் 200 டொலர்கள் வரை அதிகரிக்கப்படுவதை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் எரிபொருள் விநியோகம் மாத்திரமல்லாமல் உணவுப் பாதுகாப்பு கூட ஒரு புதிய கவலையாக உருவாகியுள்ளது. மேலும் உலகின் முக்கிய உர உற்பத்தி நாடுகள் சில இந்தப் போர் நடைபெறும் பிராந்தியத்திலேயே இருப்பதால் விவசாயச் செலவுகளும் உயரக்கூடும். இதன் விளைவாக உலகளவில் உணவு விலைகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானது அவசர எண்ணெய் கையிருப்புகளை வெளியிடும் தீர்மானம்.
பல நாடுகள் சந்தையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமநிலைப்படுத்துவதற்காக மிகப்பெரிய அளவில் எண்ணெய் கையிருப்புகளை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளன. இது எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உதவும் ஒரு தற்காலிக முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மாற்றுத் தீர்வுகள்
அதே நேரத்தில் சில நாடுகள் மாற்று எண்ணெய் ஆதாரங்களைத் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன. மத்திய கிழக்கு எண்ணெய்க்கு மாற்றாக ரஷ்யா மற்றும் பிற பகுதிகளில் இருந்து எண்ணெய் வாங்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. ரஷ்ய எரிபொருக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ளது.
அதேவேளை ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க கடற்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது உலக எண்ணெய் விநியோகத்தை மீண்டும் சீர்படுத்த உதவும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
மேலும் பல நாடுகள் உள்நாட்டு அளவில் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கின்றன. வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவித்தல், பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துதல், மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் திட்டங்களை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க முயற்சிக்கின்றன.
இந்த நெருக்கடி குறிப்பாக எரிபொருள் இறக்குமதியைப் பெரிதும் சார்ந்துள்ள நாடுகளுக்கு கடுமையான சவாலாக உள்ளது. இலங்கை போன்ற நாடுகள் உலக சந்தை விலையிலேயே எரிபொருள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளதால் எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் உடனடியாக நாட்டின் பொருளாதாரத்தில் தெரியும். எனவே இத்தகைய நாடுகள் எரிபொருள் கையிருப்பை முன்கூட்டியே உறுதி செய்தல் மற்றும் விநியோகத்தை திட்டமிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணுவதன் காரணமாக எரிபொருட்களை பெற்றுக் கொள்ள முயற்றிக்கிறது. இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளுடனும் இலங்கை அரசாங்கம் இதற்கான கோரிக்கைகளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படுவது அவசியம். அதேவேளை, தற்போதைய போர் உலக பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை உண்மையை மீண்டும் நினைவூட்டுகிறது. உலக எரிசக்தி அமைப்பு இன்னும் பெரும்பாலும் எண்ணெய் சார்ந்ததாகவே உள்ளது. குறிப்பாக சில முக்கிய கடல் பாதைகள் மற்றும் சில பிராந்தியங்கள் மீது அதிகமாக சார்ந்திருப்பது உலக பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கக்கூடியதாக மாற்றுகிறது.
இந்த அனுபவம் உலக நாடுகளுக்கு ஒரு முக்கிய பாடமாக அமைய வேண்டும். எதிர்காலத்தில் எண்ணெய் சார்பை குறைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை விரிவுபடுத்துவது அவசியமானது. சூரிய ஆற்றல் மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, பெற்றோலிய எரிபொருளுக்கு பதிலாக மின்சாரத்தால் வாகனங்கள் போன்ற மாற்று தீர்வுகள் மீது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டியதும் அவசியம் என்பது உணரப்படுகிறது.
ஆர். சேதுராமன்