மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றம், தற்போது ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.

ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதல், ஏவுகணை தாக்குதல்களால் தீவிரமடைந்தது. ஈரானின் பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை டெல் அவிவ் மீது ஏவியது.

இதனால் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலியாகியதாக தகவல். உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு, வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்தது.

பல தசாப்தங்களாக மறைமுகப் போராக (Proxy War) நடந்து வந்த ஈரான் – இஸ்ரேல் இடையிலான பகை, தற்போது ஏவுகணைகளின் இடிமுழக்கத்தோடு பகிரங்கமான நேரடிப் போராக உருவெடுத்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல் வளைகுடா நாடுகளின் வான் பாதுகாப்பு எச்சரிக்கைகள் வரை, இந்த மோதலின் அதிர்வுகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த அதிரடி மாற்றத்திற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது, ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் (Supreme National Security Council – SNSC) செயலாளராகவும் பணியாற்றிய அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்ட விவகாரமாகும்.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இதனை ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகவும், நாட்டின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதலாகவும் சித்தரிக்கும் ஈரான், இதற்குப் பதிலடியாக “Operation True Promise 4” என்ற பெயரில் தனது 61-வது அலை தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (Islamic Revolution Guards Corps) இஸ்ரேலின் இதயப்பகுதியான டெல் அவிவ் (Tel Aviv) நகரை நோக்கி 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.

(Khorramshahr-4)

குறிப்பாக, பல போர்முனைகளைத் தாங்கிச் செல்லக்கூடிய கோரம்ஷார்-4 (Khorramshahr-4) மற்றும் காத்ர் (Qadr) ஏவுகணைகளுடன், அதிநவீன எமாத் (Emad) மற்றும் கைபர் ஷெக்கான் (Kheibar Shekan) ரக ஏவுகணைகளும் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி, டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளைத் தாக்கியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது.

இந்தத் தாக்குதலின் விளைவாக டெல் அவிவ் நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் உள்ளூர் அதிகாரிகளுக்குப் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 230-ஐக் கடந்துள்ளதாக IRGC மதிப்பிட்டுள்ளது.

டெல் அவிவ் தவிர, அல்-குட்ஸ் (al-Quds), ஹைஃபா (Haifa) துறைமுகம், பீர் ஷேவா (Be’er Sheva) தொழில்நுட்ப மையம் மற்றும் நெகேவ் (Negev) பாலைவனப் பகுதிகளில் உள்ள உத்தேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
(Kheibar Shekan)

அதேவேளையில், இந்த மோதல் இஸ்ரேல் எல்லையைத் தாண்டி அண்டை நாடுகளிலும் எதிரொலிக்கிறது.

கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகமான பிரஸ் டிவி (Press TV) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,000-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் ஈரான் தரப்பு கூறுகிறது. மேலும், அமெரிக்காவின் பல ராணுவ விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

மறுபுறம், லாரிஜானி மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்த மோதலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இது கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இரு நாடுகளையும் அமைதி காக்க வலியுறுத்தி வரும் வேளையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முற்றிலும் முடிவுக்கு வரும் வரை தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் ஓயாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version