2025 ஜனவரியில் இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் பிரவேசித்த பிறகு, பத்து மாதகாலப் பகுதிக்குள் உலகின் பல்வேறு பிராந்தியங்களில் எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதாக பெருமையுடன் உரிமை கோரிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக தன்னைத் தவிர, வேறு எவரினால் அவ்வாறு போர்களை நிறுத்த முடியும் என்று கேள்வியெழுப்பி கர்வம் காட்டினார்.
ஆனால், தற்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக தான் தொடுத்த போரை நிறுத்த முடியாமல் அவர் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
போரைத் தொடங்குவதற்கு முன்னதாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மூன்று குறிக்கோள்கள் இருந்தன. அணுத் திட்டத்தை மூடுவதற்கு ஈரானை நிர்ப்பந்திப்பது, உயர்ந்தளவுக்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரானில் இருந்து வெளியே கொண்டு போக வைப்பது, மேற்காசியாவில் அரசு அல்லாத திரட்டல் படைகளுக்கு ஈரான் வழங்கிவரும் ஆதரவைத் துண்டிப்பதுடன் அதன் ஏவுகணை ஆற்றல்களை நிர்மூலம் செய்வது.
ஆனால், சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டியிருப்பதே ட்ரம்பின் முக்கியமான முன்னுரிமைக்குரிய விடயங்களில் ஒன்றாக இருக்கிறது. போர் வெடித்த பின்னர் ஈரான் மூடிய அந்த நீரிணையை திறப்பதற்கு அவருக்கு எளிதான தெரிவுகள் இல்லை. ஒன்றில் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை நடத்தி உடன்பாடொன்றுக்கு வேண்டியிருக்கிறது அல்லது தரையில் இராணுவ நடவடிக்கைக்கு அதிகாரமளிக்க வேண்டியிருக்கிறது.
ஆயிரக்கணக்கான துருப்புகளை ஏற்கெனவே அமெரிக்கா வளைகுடாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஈரானின் எரிசக்திவள உட்கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்திருப்பது பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் நாட்டம் இருப்பதாக உலகிற்கு காண்பித்துக்கொண்டு மறுபுறத்தில் ஈரான் மீதான தாக்குதல்களை கடுமையாக தீவிரப்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதற்கு காலஅவகாசத்தைப் பெறும் ஒரு தந்திரோபாயமாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்கா பாகிஸ்தான் ஊடாக 15 அம்ச சமாதான யோசனையை கடந்த வாரம் ஈரானுக்கு அனுப்பியது. அதை நிராகரித்த தெஹ்ரான் அதன் சொந்த நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது.
ஈரான் அதன் அணுத் திட்டத்தைக் கைவிட்டு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால் அதற்கு பிரதியுபகாரமாக 30 நாட்களுக்கு போர்நிறுத்தம் செய்து தடைகளில் தளர்வுகளைச் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
ஆனால், பெப்ரவரி 28 அதியுயர் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியையும் வேறுபல தலைவர்களையும் விமானக்குண்டு வீச்சுக்களின் மூலம் படுகொலை செய்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரான் ஐந்து நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது.
ஆக்கிரமிப்பையும் படுகொலைகளையும் முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும்; எதிர்காலத் தாக்குதல்களை தடுப்பதற்கு உறுதியான செயற்பாட்டு முறைகள் வகுக்கப்படவேண்டும்; போரின் விளைவான அழிவுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்; சகல முனைகளிலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; ஹேரர்முஸ் நீரிணை மீதான ஈரானின் இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பவையே அந்த நிபந்தனைகள்.
அதியுயர் தலைவர் உட்பட தலைவர்களும் படைத்தளபதிகளும் கொல்லப்பட்ட பின்னரும் கூட தலைமைத்துவக் கட்டமைப்பு முற்றாக நிலைகுலையாமல் இஸ்ரேலுக்கும், அமெரிக்கப் படைத் தளங்களைக் கொண்டிருக்கும் வளைகுடா அரபு நாடுகளுக்கும் எதிரான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது மாத்திரமல்ல,
மிலேச்சத்தனமான ஒரு மாதகாலக் குண்டு வீச்சுகளின் விளைவான முன்னென்றுமில்லாத அழிவுகளுக்கு மத்தியிலும் கூட அமெரிக்காவின் நிபந்தனைகளின் அடிப்படையில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்ற உறுதிப்பாட்டுடன் ஈரான் அடிபணியாமல் நிற்பது உலகை வியக்க வைக்கிறது.
எந்த நேரத்தில் எந்த விதமாக நடந்து கொள்வார் என்றோ அல்லது பேசுவார் என்றோ கூறமுடியாத தான்தோன்றித்தனமான பேர்வழியான ட்ரம்ப், போர் நிலைவரம் குறித்து தெரிவித்து வரும் கருத்துக்களை உலகினால் நம்ப முடியாமல் இருக்கிறது.
போரில் அமெரிக்கா ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டது என்று ஒரு தடவை கூறிய அவர், சில நாட்கள் கழித்து ஹோர்முஸ் நீரிணையைத் மீண்டும் திறப்பதற்கு போர்க் கப்பல்களை அனுப்பி வைக்குமாறு மற்றைய நாடுகளை குறிப்பாக, வட அத்திலாந்திக் ஒப்பந்த இராணுவக் கூட்டணியின் (நேட்டோ) உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் போரில் இணைந்து கொள்வதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டன.
போர் தொடங்கியதற்கு பிறகு முதற்தடவையாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ட்ரம்ப் தனது வேண்டுகோளை நிராகரித்தமைக்காக நேட்டோ நாடுகளை கடுமையாகக் கண்டனம் செய்தார்.
திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு முன்னதாகவே போரில் அமெரிக்கா வெற்றியை நோக்கிச் செல்வதாக அமைச்சரவையில் கூறிய அவர் உடன்பாடொன்றுக்கு வருவதற்கு ஈரான் தன்னைக் கெஞ்சிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் .

ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்துவதற்கு கப்பல்களுக்கு கட்டணம் அறவிடும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஈரான் தீர்மானிக்கக்கூடும் என்று அவர் அங்கு செய்த எச்சரிக்கை அந்த நீரிணையை திறப்பதற்கு மற்றைய நாடுகளின் உதவி அமெரிக்காவுக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, இது இன்னொரு பின்னடைவுப் போராக அமையப் போகிறது என்பதையே இதுவரையான நிகழ்வுப்போக்குகள் கட்டியம் கூறுகின்றன. அதனால், ஈரானை மீண்டும் தலையெடுக்காமல் செய்வதற்காக அதன் இராணுவ மற்றும் பொருளாதாரக் கடமைப்புக்களை இயன்றவரை நிர்மூலம் செய்வதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முனைப்புக் காட்டக்கூடிய பேராபத்து இருக்கிறது.
அதற்கு பதிலடியாக வளைகுடா அரபு நாடுகளின் எண்ணெய் வளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்தத்தில் மத்திய கிழக்கின் எண்ணெய் வளமே அழியப் போகிறது.
போருக்காக இதுவரையில் அமெரிக்காவுக்கு 30-40 பில்லியன் டொலர்களும் இஸ்ரேலுக்கு 300 மில்லியன் டொலர்களும் நாளொன்றுக்கு செலவாகுவதாக ‘ த கார்டியன் ‘ செய்தி வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவுக்கு ஈரான் எந்தவிதமான உடனடி ஆபத்தையும் தோற்றுவித்திருக்கவில்லை என்றும் இன்றைய போர் இஸ்ரேலின் தயாரிப்பு என்றும் கூறி, போர் தொடங்கிய மூன்று வாரங்களில் அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு நிலையத்தின் பணிப்பாளரான ஜோ கென்ற் தனது பதவியை இராஜினாமா செய்தமை போரை தொடங்கியமைக்காக ட்ரம்ப் தனது நிருவாகத்திற்குள் எந்தளவுக்கு அதிருப்தியை எதிர்நோக்குகிறார் என்பதைக் காட்டுகிறது.
2025 ஜூலையில் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட குடியரசு கட்சிக்காரரான கென்ற், “இஸ்ரேலிடமிருந்தும் அதற்கு ஆதரவான செல்வாக்குமிக்க யூத ஆதரவுக் குழுக்களிடமிருந்தும் வந்த நெருக்குதலின் விளைவாகவே இந்தப் போரை நாம் தொடங்கியிருக்கிறோம் என்பது தெளிவானது. இதை நல்ல மனச்சாட்சியுடன் ஆதரிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
உலகின் பல்வேறு பிராந்தியங்களில் படைகளை தரைப் போரில் இறக்கியதன் விளைவாக அதன் வரலாற்றில் பெற்ற படுமோசமான அனுபவங்களில் இருந்து அமெரிக்கா இன்னமும் படிப்பினை எதையும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையே ட்ரம்பின் தற்போதைய செயற்பாடுகள் உணர்த்துகின்றன.
இந்த கட்டத்திலாவது போரை நிறுத்துவதற்கு ட்ரம்புக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், எந்தவொரு இராஜதந்திர முயற்சியிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக வெறிபிடித்த அடாவடிக்காரன் போன்று ஈரான் மற்றும் லெபனான் மீது குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கும் தனது போர்க் கூட்டாளியான இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹுவை அவர் அடக்கிவைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
வீரகத்தி தனபாலசிங்கம்