வவவுனியா, கூமாங்குளம் பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய நபர் ஒருவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கருதப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
உடற்கூற்று பரிசோதனையில் வெளிவந்த உண்மை
முதியவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த பரிசோதனையின் முடிவில், இது இயற்கையான மரணமல்ல – ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.