ஈரான் போரில் ராணுவ தாக்குதல் நின்றுவிட்டாலும் டிரம்ப்-ன் செயல்பாடுகள் மூலம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

இதனால் கச்சா எண்ணெய், தங்கம், பங்குச்சந்தை என அனைத்தும் பெரும் தடுமாற்றத்தில் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க – ஈரான் மத்தியிலான தற்காலிக போர் நிறுத்ததை நிரந்தர போர் நிறுத்தமாக மாற்ற வெளிச்சம் தெரிகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மீண்டும் அமைதிப் பேச்சு தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஈரான் தரப்பில் இருந்து பேச்சவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்கள் அமைதி ஒப்பந்தம் வேண்டும் என்று கூறுகின்றனர்” என்று குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தப் பேச்சுகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு உதவி செய்யும் நாடுகள் பற்றிய விவரங்களை நாளை வெளியிடுவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி

கடந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்தன.

ஆனால் இரு தரப்புக்கும் இடையேயான தொடர்பு இன்னும் நீடித்து வருவதாக ராய்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளிடம் பெற்ற தகவல் படி “இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் தயாராகி வருகின்றன” என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை விரைவில், அதாவது வியாழக்கிழமை முதல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மீண்டும் பிக்பாஸ்

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்கா மத்தியஸ்த நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக ராய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இரு நாடுகள் இடையே செய்திகளை தொடர்ந்து பரிமாறி வருகிறது. அமெரிக்க அதிகாரி ஒருவர், “ஈரான் தரப்பில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

ஒப்பந்தம் வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்” என்று ராய்டர்ஸிடம் தெரிவித்தார். அசோசியேட்டட் பிரஸ் செய்தியின்படி, இரு தரப்பும் புதிய நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகின்றன.

அடுத்த வாரம் போர் நிறுத்தம் முடிவடையும் முன்பு ஒப்பந்தம் எட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சி நடைபெறுகிறது.

பாகிஸ்தான் அதிகாரிகள், “இஸ்லாமாபாத்தில் இரண்டாவது சுற்று பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஜெனீவாவும் ஒரு சாத்தியமான இடமாக பரிசீலிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இடம் மற்றும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

போர் தொடர்ந்தால் என்ன பாதிப்பு?

ஈரான் – அமெரிக்கா இடையேயான இந்தப் போர் பிப்ரவரி இறுதியில் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் பொருளாதாரமும் பெரும் நெருக்கடியில் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இரண்டாவது சுற்று பேச்சு விரைவில் நடைபெறுவது இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் முக்கியமானது. குறிப்பாக கச்ச எண்ணெய், எரிவாயு பிரச்சனைகள் உலக நாடுகளில் குறைந்து விலைவாசி கட்டுக்குள் வரும்.

 

Share.
Leave A Reply

Exit mobile version