மன்னார், தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது ஏழு மாதமான பெண் குழந்தையின் சடலம், மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைய செவ்வாய்க்கிழமை (21) தாராபுரம் மையவாடியில் தோண்டி எடுக்கப்பட்டது.

துருக்கி சிற்றி பகுதியில் கடந்த 18ஆம் திகதி மாலை, பாண் விற்பனைக்காக சென்ற மின்கலத்தால் (Battery) இயங்கும் முச்சக்கர வண்டி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, வீட்டின் வளவினுள் இருந்து வெளியே வந்த குறித்த குழந்தை முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த குழந்தை உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

எனினும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மன்னார் பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளின் பின்னர், குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 19ஆம் திகதி தாராபுரம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல் சடலத்தை ஒப்படைத்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், மேலதிக விசாரணைக்காக சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.

அதற்கமைய, செவ்வாய்க்கிழமை (21)காலை நீதவான் முன்னிலையில் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த அகழ்வுப் பணியின் போது மன்னார் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸார் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் பலரும் தாராபுரம் மையவாடிப் பகுதியில் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply

Exit mobile version