இலங்கை திறைசேரியினால் அவுஸ்திரேலியாவிலுள்ள கடன் வழங்குநர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 10 பரிவர்த்தனைகள்) உரிய பெறுநரைச் சென்றடையாமல் காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சின் அதிகாரிகள் நேற்று (30.04.2026) நாடாளுமன்ற பொது நிதி மீதான குழுவின் (COPF) முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர். திறைச் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்த நிதி விவகாரம் குறித்துப் பொது நிதி மீதான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா தெரிவிக்கையில், 2025 நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிவர்த்தனைகளில் பாரிய குறைபாடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஜனவரி மாதத்திலேயே இது தொடர்பான அபாய அறிகுறிகள் தென்பட்ட போதிலும், மார்ச் மாதத்தில்தான் பணம் சென்றடையவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தாமதம் மற்றும் நாடாளுமன்றத்திற்குத் தகவல் தெரிவிக்காதது குறித்துக் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. மாயமான இந்த நிதி மீட்கப்படாவிட்டால், அந்தச் சுமை இறுதியில் வரி செலுத்தும் மக்கள் மீதே விழும் என அவர் எச்சரித்துள்ளார்.

