ஜூன் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாம்பியன்ஸ் கோப்பைக்கு இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறும் ஆட்டத்தை காண தமிழ்நாடே ஆவலாகக் காத்திருந்தது.
ஆனால் அதைவிட விறுவிறுப்பான ஆட்டத்தைத் தமிழகம் கண்டு பரவசமடைந்தது. அதுதான் தீபா – தீபக்– ராஜா – மாதவன் ஆகியோர் இணைந்து போயஸ் தோட்டத்தில் நடத்திய கரகாட்டம். என்ன நடந்தது?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயதீபா முற்றுகை என்று வந்த செய்தியைப் பல பத்திரிகையாளர்கள் கூட நம்பவில்லை.
பேபியம்மாவாவது காலையில் எந்திருச்சு வர்றதாவது என்று தட்டிக்கழித்துவிட்டுப் போர்வைக்குள் சுருண்ட பத்திரிகையாளர்களை, அடுத்த சில நிமிடங்களில் பின்னங்கால் பிடரியில் பட ஓடி வரவைத்தார் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் நிறுவுநர் (!) தலைவர் (!) பொதுச் செயலாளர் (!) ஜெயதீபா.
அங்கே பத்திரிகையாளர்களும் டி.வி. கேமராமேன்களும் சென்றபோது, போயஸ் தோட் டம் மூடப்பட்டிருந்தது. யாரும் அனுமதிக்கப்படவில்லை.
விசாரித்தால், போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்த வருமாறு தனது தம்பி தீபக் பலமுறை தொடர்பு கொண்டு அழைத்ததாகவும் இதனை நம்பி தானும் தனது நண்பர் ராஜாவும் கார்டன் இல்லத்திற்கு வந்ததாகவும் கூறிய தீபா, வீட்டிற்குள் நுழைந்தவுடன் தங்களைச் சிலர் தீபக் முன்னிலையிலேயே தாக்கியதாகப் பொலிஸாரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மனைவி சிக்கிக்கொண்டதாகத் தகவல் கிடைத்ததும் மனைவியை மீட்க (?) நாலு அல்லு சில்லுகளுடன் ஓடிவந்தார் மாதவன். பொலிஸாரிடம் அவரும் மல்லுக்கட்ட ஒரு வழியாக அவரை மட்டும் பொலிஸார் அனுமதித்தனர்.
என்னதான் நடந்தது? தீபாவுடன் சென்றவர்களிடமும் கார்டன் ஊழியர்களிடமும் பேச்சுக் கொடுத்தபோது, காலை 5 மணிக்கு தீபாவின் செல்போனை தொடர்பு கொண்ட தீபக், அத்தை படத்துக்கு சில பூஜையெல்லாம் பண்ண வேண்டியிருக்கு. நீ மட்டும் தனியா கார்டனுக்கு வா என்று கூறினார்.
இல்லடா எனக்கு டயர்டா இருக்குது. நான் தூங்கிட்டு இருக்கேன். ஈவ்னிங் வர்றேன் தீபா கூறவே, இல்லை நீ வந்தே ஆகணும் என்று தீபக் மல்லுக்கட்ட அதற்கு மேல் பேச விரும்பாமல் தீபா போனை கட் செய்து விட்டார்.
பிறகு தீபாவின் நண்பரும் தீபா பேரவையின் பொருளாளருமான ராஜாவைத் தொடர்பு கொண்ட தீபக், அக்காவ எப்படியாவது கார்டன் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடு என்று கேட்டுக் கொள்ளவே இருவரும் காலை 9 மணியளவில் கார்டன் இல்லத்திற்கு வந்தனர்.
வரும்போதே தனியார், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றையும் கூடவே அழைத்து வந்தனர்.
வீட்டிற்குள் நுழைய எந்த எதிர்ப்பும் இல்லை. சகஜமாக உள்ளே நுழைந்த போர்டிகோவில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இதற்கு பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.
மலரஞ்சலி செலுத்திய தீபா, வீட்டிற்குள் நுழைய முயன்றார். இதனை எதிர்பாராத கார்டன் ஊழியர்களும் பாதுகாவலர்களும் அதற்கு அனுமதி மறுத்தனர்.
நீ யாருடா என்னைத் தடுக்குறதுக்கு? என்று சீறிய தீபா, வீட்டிற்குள் நுழைந்து அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களை எல்லாம் எடுத்து தனது காரில் வைக்கச் சொன்னார். அவருடன் வந்தவர்கள், ஜெயலலிதாவின் சிறு வயதுப்படங்களை எல்லாம் எடுத்து தீபாவின் காரில் வைத்தனர்.
அப்பொழுது சசிகலாவின் ஓவியம் ஒன்று சுவரில் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்த தீபா திடீரென்று டென்ஷனாகி, ராஜாவை அழைத்து உடனடியாக அதை எடுத்து வெளியே போடச் சொன்னார்.
ராஜாவும் அதைக் கழற்றி வெளியே கொண்டு போகவே எங்கிருந்தோ ஓடிவந்த கோதண்டம் என்ற ஊழியர், இதையெல்லாம் நீங்க எடுக்கக்கூடாது என்று தடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் வாக்குவாதம் முற்றிக் கைகலப்பானது.
கார்டன் பாதுகாப்பிற்கு நின்ற தனியார் நிறுவன பாதுகாவலர்கள், தீபாவையும் ராஜாவையும் கார்டனை விட்டு வெளியேற்றினர்.
இவர்களை யாரும் தாக்கவில்லை. இவர்களோடு வந்திருந்த தனியார் தொலைக்காட்சியின் நிருபர், கேமராமேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களது கேமரா உடைக்கப்பட்டது.
வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட தீபா ஆவேசமாக அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த பொலிஸாரிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்.
என்ன சார் அரெஸ்ட் பண்ணிடுவீங்களா? எங்க பண்ணுங்க பார்க்கலாம் என்று மல்லுக்கட்டவே செய்வதறியாது பொலிஸாரும் திகைத்தனர்.
அப்போது அங்கு வந்த பொலிஸ் துணை கமிஷனர் சரவணன், தேனாம்பேட்டை பொலிஸ் உதவி கமிஷன் சுப்பிரமணியன் ஆகியோர் நீங்கள் இங்கே இருந்து கிளம்புங்க. உங்க தம்பியும் காரில் ஏறிப் போய்விட்டார். ஏன் பிரச்சினை செய்கிறீர்கள் என்றனர்.
என்ன சார் நான் சாகிற வரைக்கும் இங்கே உண்ணாவிரதம் இருப்பேன் என்று மிரட்டத் தொடங்கினார் தீபா.
அச்சமயம் தீபாவின் கணவர் மாதவன் போயஸ் கார்டன் வந்து சேரவே அவரிடம் தீபா, தீபக் தான் தேவையில்லாம எங்கள இங்க வரவச்சு மாட்டிவிட்டான். நாங்களா வரலை, அவன் தான் கூப்பிட்டான் என்று அவரிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு பொலிஸ் அதிகாரி மாதவன் மீது கை வைத்து கௌம்புங்க சார் என்று கூறவே தீபாவுக்கு சுர்ர்ர் என்று கோபம் தலைக்கேறிவிட்டது.
அந்த அதிகாரியைப் பார்த்து, அவ்வளோதான் உங்களுக்கு எல்லாம். மாதவன் யார்ன்னு தெரியும்ல. என் ஹஸ்பெண்டு என்று சொல்ல, அந்த ரணகளத்திலும் ஒரு குதூகலமாக மாதவன் முகத்தில் மத்தாப்பு சிரிப்பு!
திடீரென அங்கே வந்த தீபக், தனியாகப் போய்ப் பேசிக் கொள்ளலாம் வா என்று தீபாவை அழைத்தார்.
டேய் என்னடா நடிக்குற? நீ தானே எங்கள வரவச்சு? மாதவன் மேல கை வைக்குற, ராஜாவா தெரியாதுன்னு சொல்ற, போடா எச்சக்கல, பிச்சைக் காசுக்காக இப்படிப் பண்ணாத என்று தன் சொந்தத் தம்பி மீது ஆத்திரத்தைக் கொட்டினார்.
தீபக் தன் காரில் ஏறிச் செல்லவும், ஓடி வந்த ராஜா, இப்ப வர்றீயா இல்லையா? நீ (கட்சித் தலைவர் என்ற மரியாதை கூட இல்லாமல் தீபாவை ஒருமையில் விளித்தபடி பேசினார் ராஜா) என்று தீபாவுக்கு அதட் டல் போட்டார்.
உனக்கு விஷயம் புரியல. நம்மள தீபக் சிக்கல்ல மாட்டி விட்டிருக்கான். நம்ம எல்லாருக்கும் இதனால பிரச்சினை இருக்கு. இந்தப் பிரச்சினை தீர்ற வரைக்கும் நீ வெயிட் பண்ணணும் என்று ராஜாவை அடக்கினார்.
இதையெல்லாம் தீபாவின் கணவர் மாதவன் தனது செல்போனில் படம் பிடித்துக்கொண்டே, நான் தீபாவைப் பார்த்துக்கிறேன்.
நீ கிளம்பு என்று ராஜாவிடம் பவ்யமாகச் சொன்னார். மாதவன், உஷ்ணமான ராஜா, டேய் இத ஏன்டா படம் புடிக்கிற பரதேசி.
மொபைல் போனை ஆப் பண்ணுடா. (கட்சித் தலைவியின் கணவருக்கு என்னா மரியாதை என்னா மரியாதை) என்று தீபாவின் முன்னிலையிலேயே அவரைத் திட்டியதோடு ஒரு கட்டத்தில் உஷ்ணமாகி, “பணத்துக்காகப் பிச்சை எடுக்கிற நாய் நீ சொந்த வீட்டுல நகை, பணம் திருடிட்டு போன நாய் நீ” என்று எகிறவே தீபாவின் முகத்தில் எந்த ரியாக் ஷனும் இல்லை.
கணவர் மீது கைவைத்துவிட்டதாகப் பொலிஸ் அதிகாரியைக் காய்ச்சிய தீபா, ராஜாவை மட்டும் ஏனோ எதிர்த்து வாய்திறக்கவில்லை.இறுதியாகப் பொலிஸார் தீபாவைச் சமாதானப்படுத்தி கார்டன் ஏரியாவை விட்டு வெளியே அனுப்பினார்.
பத்திரிகையாளர்களைச் சந்தித்த தீபா, பொறம்போக்கு அவன். சசிகலாவோட ஆளுங்க அவன். சொந்த அத்தையத் தாய் மாதிரி இருந்தவங்கள சசிகலாவோட சேர்ந்து பணத்துக்காகக் கொன்னுட்டான் என்று ஏதோ பிதற்றினார்.
உங்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்று கேட்டதற்கு, பிரதமர் இந்த ஆட்சியக் கலைக்கணும். சட்டம், ஒழுங்கு நாசமாப் போய்க்கிட்டு இருக்குது.
இது ஒரு ஆட்சியா? என்று சீறிவிட்டு, இது சம்பந்தமாகப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிடப் போவதாகச் சொல்லிவிட்டு தீபா கிளம்பவே, நடந்தது புரியாமல் பத்திரிகையாளர்கள் திரு திருவென விழித்தது நிஜம்.
இதுபற்றி விளக்கமளித்த தீபக், ஆமாம் நான் தான் தீபாவக், கூப்பிட்டேன். போயஸ் கார்டன் வீட்டுக்குள்ள போறதுக்கு எங்களுக்கு எப்பொழுதுமே தடை இல்ல.
அது எங்க சொத்து. அங்க யாரும் தாக்கப்படலை. விளம்பரத்துக்காக இப்படிப் பேசுற தீபாவை அந்த போயஸ் கார்டன் வீடு வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கச் சொல்லங்க பார்க்கலாம் என்று சீறினார்.
மாதவனோ, பிரச்சினை முடிஞ்சு. ஒன்றா ஒரே கார்ல கிளம்பின எங்களப் பிரிச்சு தனி கார்ல சில பொலிஸ் அதிகாரிகளும் ராஜாவும் என்னைய அனுப்பி வச்சாங்க.
புருஷன் பொண்டாட்டிய பிரிக்கிறதுல இவங்களுக்கு அப்படி என்ன சந்தோஷமோ தெரியல? என்று சொல்லிவிட்டு கபி…கபி…. மேரே தில் மே என்ற பாடலை முணுமுணுத்தார்.
ஜூன் 11 ஆம் திகதி போயஸ் தோட்டத்தில் நடந்த கூத்துக்களைப் பார்க்கும்போது, நான்தான் சொப்பன சுந்தரி…. என்னை யாரு வைச்சிருக்கா என்ற பாடல்தான் நினைவுக்கு வந்தது.
ஆம் அந்த போயஸ் தோட்ட பங்களாவை யாரு வைச்சிருப்பது என்ற பிரச்சினைக்குத்தான் இந்த ஆட்டம் அரங்கேறியதாகவே தெரிகிறது. விரைவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு எடுத்துக்கொண்டால்தான் அவருக்குப் புண்ணியம் செய்தது போல இருக்கும்!
தகவல்கள்: ஷண்
கட்டை குண்டம்மா தீபிகாவின் அட்டகாசத்தை பாருங்கள்.