குற்றம் செய்பவர்கள் தப்பிக்க முடியாது. கண்டிப்பாக சிக்குவார்கள். அதிலும் எமது பொலிஸார் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகத் திறமையானவர்கள் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கின்றது குருணாகல் சம்பவம்.
ஆம், கடந்த 05 ஆம் திகதி திங்கட் கிழமை அதிகாலை நேரம் குருணாகல், கெட்டுவான சந்தியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு கான்ஸ்டபிள்கள் அடையாளம் தெரியாத வெள்ளை வேனில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டிருந்தனர்.
சந்தன சம்பத், அஜித் விஜேசூரிய ஆகிய இவ்விரு கான்ஸ்டபிள்களினதும் பொலிஸ் சீருடைகள் கடத்தல்காரர்களால் அபகரிக்கப்பட்டிருந்ததுடன் சந்தன சம்பத் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
குருணாகல், படகமுவ, மூக்கலான காட்டுப் பகுதியில் இடம்பெற்றிருந்த இந்த கொலையின் போது அஜித் விஜேசூரிய என்ற கான்ஸ்டபிள் கடத்தல்காரர்களுடன் கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிர் தப்பினார்.
இந்த சம்பவமானது நாடளாவிய ரீதியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியது. இந் நிலையிலேயே இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.டீ.ரணவீர தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினரிடம் கையளித்தார்.
இதனை அடுத்து சம்பவம் நடைப் பெற்ற கடந்த 5 ஆம் திகதி முதலே ஸ்தலத்துக்கு சென்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஸ்தலத்திலிருந்து ஒரு தொப்பியும், ரீ.56 ரக துப்பாக்கியின் மெகஸினையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிகமாக சாட்சியங்களை பதிவு செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.
எனினும் அவ்விடத்தில் இருந்த வேன் ஒன்றின் சக்கரங்களின் பதிவுகள், வெற்றுத்தோட்டாக்கள் என்பனவும் புலனாய்வுப் பிரிவினருக்கு தடயங்களாக மாறின. எனினும் சந்தேக நபர்களை அடையாளம் காணவோ அல்லது இனம்காணவோ ஏற்றவகையில் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந் நிலையில் தான் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலதிகமாக வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன மற்றும் குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் குமார ஆகியோரின் கீழும் 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கென நியமிக்கப்பட்டன.
இந் நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கவனமும் ஏனைய பொலிஸ் குழுக்களின் கவனமும் சம்பவதினம் அதற்கு முன், பின்னைய தினங்களில் குருணாகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலான அவதானங்களை நோக்கி செல்கின்றது.
இதன் படி ஆராய்ந்த புலனாய்வுப் பிரிவினர் கான்ஸ்டபிளின் கொலை அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதை அவதானித்தனர். அத்துடன் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முதல் இடம்பெற்றுள்ளதையும் கொலை சம்பவம் இடம்பெற்றதிலிருந்து சுமார் 1 1/4 மணித்தியாலங்களில் (அதாவது அதிகாலை 1.20 மணிக்கு ) வேவல் தெனிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளமையும் புலனாய்வுப் பிரிவினரின் விஷேட அவதானத்துக்குட்பட்டது.
எனவே இந்த மூன்று சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கலாயினர்.
அதன்படி காயங்களுடன் தப்பிய பொலிஸ் கான்ஸ்டபிளிடம் வாக்கு மூலம் பெற்ற புலனாய்வுப் பிரிவு கடத்தல் காரர்கள் நான்கு பேர் கொண்ட குழு என்பதையும் அவர்களில் ஒருவன் மட்டுமே முகத்தை மறைத்துக்கொள்ளாது இருந்துள்ளதையும் தெரிந்துகொண்டனர்.
அதே போன்று வேவல் தெனிய எரிபொருள் நிரப்பு நிலையம் கொள்ளை தொடர்பில் விசாரணை செய்த போது அங்கும் நால்வர் கொண்ட குழு, வெள்ளை வேன் தொடர்பான தகவல்கள் கிடைத்ததுடன் சீ.சீ.ரீ.வீ.பதிவுகளும் கிடைத்தன.
நாரம்மல எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பிலும் இதையொத்த தகவல்களே கிடைத்த போதும் சீ.சீ.ரீ.வீ. பதிவுகள் கிடைக்கவில்லை.
இதுவே புலனாய்வுப் பிரிவினருக்கு துரும்பானது. உயிர் பிழைத்த பொலிஸ் கான்ஸ்டபிள் அஜித் விஜேசூரிய, வேவல்தெனிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் வழங்கிய தகவல்களின் பிரகாரம் புலனாய்வுப் பிரிவினர் முகம் மறைக்காது இருந்த சந்தேக நபரின் உருவத்தை வரைந்தனர்.
அத்துடன் வேவல் தெனிய பெற்றோல் நிரப்பு நிலைய சீ.சீ.ரீ.வீ.கமரா பதிவுகளையும் சேகரித்தனர். இவ்விரு துரும்புகளையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன ஊடாக ஊடகங்களில் பிரசுரித்து, ஒளி பரப்பி சந்தேக நபர் , வேன் தொடர்பில் தகவல் கோரப்பட்டது. அத்துடன் சரியான தகவலுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானமும் அறிவிக்கப்பட்டது.
இங்கு வைத்து தான் விசாரணையின் கோணம் திரும்புகின்றது. ஊடகப் பிரசாரத்துக்கு கைக்கு மேல் பலன் கிட்டியது புலப்னாய்வுப் பிரிவினருக்கு. ஊடக செய்தியை பார்த்த வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு வெள்ளை வேன் தொடர்பிலான மிக முக்கிய தகவல் ஒன்றை வழங்குகினார்.
அவர் வழங்கிய தகவல் ஊடாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வேவல்தெனிய கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளைவேன் வென்னப்புவ பகுதியில் உள்ள வாகனங்களை வாடகைக்கு விடும் நிலையம் ஒன்றிலிருந்தே பெறப்பட்டுள்ளதை அறிந்துகொண்டனர்.
எனினும் அந்த வேனை வாடகைக்கு எடுத்தவர் இன்னுமொருவருக்கும் அவர் வேறு ஒருவருக்கும் கைமாற்றி மூன்றாவது தரப்பாகவே சந்தேக நபர்கள் கைக்கு அந்த வேன் கிடைக்கப் பெற்றுள்ளமையும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்தே புலனாய்வுப் பிரிவினர் வரைந்த சந்தேக நபர் தொடர்பிலான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கின்றது. அவர்தான் மாத்தறையை சேர்ந்த திலக். இராணுவ பயிற்சியை முடித்திருந்த திலக் அதிலிருந்து தப்பிவந்தவர்.
தகவல்களை திரட்டிய புலனாய்வுப் பிரிவு மறுகணமே திலக்கை கைது செய்தபோது நாரம்மல, குருணாகல் கான்ஸ்டபிள் கொலை, வேவல்தெனிய எரிபொருள் நிரப்பு கொள்ளை என்பன ஒரே குழுவினரால் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.
திலக் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் வென்னப்புவ பிரதேசத்தில் பெற்றுக்கொண்ட குறித்த வேனுக்கு சாரதியாக அவரே பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் படகமுமூக்கலான காட்டில் கொலை இடம்பெற்ற இடத்தின் அருகில் இருந்து பொலிஸார் பெற்ற வேனின் சக்கரங்களின் பதிவுகளை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி சந்தேக நபர் செலுத்திய வேனையும் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்திக்கொண்டனர்.
இதனை அடுத்தே ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக்கொள்கின்றனர். இந் நிலையில் தங்கள் முகங்களை மறைத்தவாறு வேனில் இருந்த ஏனையோர் இராணுவத்திலிருந்து தப்பிவந்த லான்ஸ் கோப்ரல் தர அதிகாரியான ஹேரத் முதியன்சலாகே தென்னகோன், சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவை சேர்ந்த தருக நிலூக அல்லது தாருக நிலன், தம்புள்ளையை சேர்ந்த சஞ்ஜீவ என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டனர்.
திலக்கை கடந்த 15 ஆம் திகதி கைது செய்த பொலிஸார் 16 ஆம் திகதி தென்னகோனை கைது செய்தனர். இவர்களை விசாரணை செய்தபோது அபகரிக்கப்பட்ட பொலிஸாரின் சீருடைகள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் எரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
உடனே அந்த வீட்டுக்கு புலனாய்வுப் பிரிவினர் சென்றபோதும் அங்கு யாரும் இருக்கவில்லை. எனினும் பொலிஸ் சீருடைகளை எரித்ததற்கான தடயங்களை அவர்களால் மீட்க முடிந்தது. பொலிஸ் சீருடையில் உள்ள இலச்சினை ஒன்றும் சீருடையின் பொத்தான்கள் சிலவும் எரியாத நிலையில் பொலிஸாரால் அவ்விடத்தில் இருந்து மீட்கப்பட்டன.
அத்துடன் சுமார் ஒரு மாதமாக அந்த வீட்டில் இந்த நால்வரும் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மூனலான காட்டில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிளை சுட்டவர் தாருக நிலூக என்ற விடயம்
தெரியவந்தது. எனினும் நிலூகவை கைது செய்ய அவன் எங்கு உள்ளான் என்பது தெரியாதிருந்தது.
இந்நிலையில் தொழில் நுட்ப சாட்சிகளை பயன்படுத்திய பொலிஸார் தென்னகோன் ஊடாக நிலூகவை கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். அத்துடன் மேலதிக விசாரணைகளில் நிலூகவை தென்னகோன் தனது ஊரான கண்டி, உடுதும்பறை பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு அமர்த்தியுள்ளதை தெரிந்துகொண்டனர்.
‘ கூகுள் மெப்’ உள்ளிட்ட தொழில் நுட்ப விடயங்களை பயன்படுத்திய புலனாய்வுப் பிரிவு பிரதான சந்தேக நபர் என நிலூகவை இனம் கண்டு அவரை கைது செய்யும் நடவடிக்கையை கடந்த 17 ஆம் திகதி சனிக்கிழமை தொடங்கியது.
அன்றைய தினம் கண்டி தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்றில் தனது இரு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் பயணித்துக்கொண்டிருந்த நிலூக நடு வீதியில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதன் போது புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் போராடிய நிலூக அவரின் கைத் துப்பாக்கியை அபகரித்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்த முயன்றுள்ளான். எனினும் அதன் போது வெளிப்பட்ட தோட்டா அவனது 8 வயது மகளின் காலை பதம் பார்த்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதனை அடுத்து அந்த பிள்ளையை கண்டி வைத்தியசாலையில் அனுமதித்த புலனாய்வுப் பிரிவு தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் வைத்து தாருக நிலூகவை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.
இதன் போது நீர்கொழும்பு உள்ளிட்ட அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற பல முக மூடி தலைக்கவசம் அணிந்த கொள்ளைகளுக்கும் இந்த நால்வர் கொண்ட குழுவினருக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் நிலூக கைது செய்யப்படும் போது அந்த மோட்டார் சைக்கிளில் வந்தே சீதுவையில் உள்ள ‘கொமர்ஷல் வங்கி’ கொள்ளையிடப்பட்டுள்ளமை தெளிவானது.
அத்துடன் சபுகஸ்கந்த, பேலியகொடை பொலிஸ் பொலிஸாரினால் தேடப்படும் மிக
முக்கியமான குற்றவாளியாகவும் பெயர்போன (ஐ.ஆர்.சீ.) குற்றவாளியாகவும் விசாரணைகளினூடாக அடையாளம் காணப்பட்டார். அத்துடன் மஹர நீதிவான் நீதிமன்றில் அவருக்கு எதிராக 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தன.
இந் நிலையில் தொடர்ச்சியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிரதான சந்தேக நபர் தாருக்கவின் வாக்கு மூலத்தை பதிவு செய்து முடிக்கும் போது நேரமோ ஞாயிறு காலை 6.30 ஆகியிருந்தது.
அந்த வாக்கு மூலத்தில் கான்ஸ்டபிளை கொன்ற ரீ 56 ரக துப்பாக்கி கூடு தும்பறை காட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு வேறு சில ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தாருக நிலன் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து புலனாய்வுப் பிரிவினர் அவரை அழைத்துக்கொண்டு காட்டுக்கு ஆயுதம் எடுக்க சென்றுள்ளனர். இந் நிலையில் தான் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக் குண்டொன்றை புலனாய்வுப் பிரிவினர் மீது வீச சந்தேக நபர் முயற்சித்துள்ளார்.
இதன் போது புலனாய்வுப் பிரிவின் சார்ஜன் ஒருவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகினர். இதனை அடுத்து தற்காப்பு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி தாருக்க நிலூக சடலமானார். இது தான் குருணாகல் சம்பவம் தொடர்பில் 12 நாட்களுக்குள் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி வேட்டை.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் செய்த விசாரணைகளில் கொலைக்கான காரணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கேசரியிடம் குறிப்பிட்டார்.
அதாவது கடந்த 10 ஆம் திகதி எழுதப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டவாறு அந்த இரவுப் பொழுதில் பெண்ணொருவர் கெட்டுவான சந்திக்கு கணவருடன் சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வரும் போது, நாரம்மல கொள்ளையை முடித்துக்கொன்டு சந்தேக நபர்கள் ட்ர்ஹம்புள்ளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்துள்ளனர்.
இந் நிலையில் அந்த பெண்னை இரவு நேர விபசாரி என நினைத்த கொள்ளை கோஷ்டி தமது வேனில் ஏற்றிக்கொள்ள எண்ணம் கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து தமது வேனை திருப்பி கொழும்பு திசை நோக்கி செலுத்த முற்பட்டுள்ள இந்த கொள்ளையர்கள் கெட்டுவான சந்தியில் பொலிஸார் அப்பெண்ணிடம் உரையாடுவதையும் பின்னர் வரும் அவரது கணவருடன் சமரசம் செய்து அனுப்பி வைப்பதையும் கெட்டுவான பாடசாலை அருகில் இருந்தவாறு அவதானித்துள்ளனர்.
இந்தன் போது தொடர்ந்தும் முன்னோக்கி பயணிப்பது என தீர்மானித்துள்ள கொள்ளையர்கள் பொலிஸார் தங்களை நிறுத்தினால் அவர்களை கடத்துவது என தீர்மானித்துள்ளார்.
அதன்படியே அந்த வேன் கொழும்பு நோக்கி பயணிக்க முற்படுகையில் பொலிஸார் நிறுத்த அதை நிறுத்திய இருவரும் கடத்தப்பட்டு ஒருவர் காட்டுப்பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர் என்கிறார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன.
இந்த கடத்தல், கொலையின் போது சந்தேக நபர்கள் குடி போதையில் இருந்ததாக குறிப்பிடும் புலனாய்வுப் பிரிவு ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கும் சந்தேக நபர்கள் அடிமையானவர்கள் என குறிப்பிடுகின்றனர்.
இதனைவிட வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த இந்த நான்கு பேரும் சிறைச்சாலைகளில் வைத்தே அறிமுகமாகி இந்த கோஷ்டிப் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.
குறிப்பாக முதல் இரு சந்தேக நபர்கள் மாத்தறை சிறையிலும் ஏனைய இருவரும் நீர்கொழும்பு சிறையில் வைத்து ஒருவரை ஒருவர் அறிமுகமாகியுள்ளனர்.
இந் நிலையில் இந்த நான்கு பேர் கொண்ட கொள்ளை குழுவை நீர்கொழும்பு சிறையில் உள்ள பிரதான போதைப் பொருள் குற்றவாளியொருவர் வழி நடத்துவதும் புலனாய்வுப் பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என குறிப்பிடும் பொலிஸார் கொள்ளை சம்பவங்களை திட்டமிட்டு வழிநடத்தியது அவரே என சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறை அதிகாரிகளுடன் இணைந்து புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விஷேட தேடுதலில் சிறையில் இருக்கும் கோஷ்டித் தலைவரிடமிருந்து 5 கையடக்கத்தொலை பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடி கின்றது.
யுத்தம் நிறைவடைந்துள்ள சூழலில் இராணுவத்தில் இருந்து தப்பி வந்த பலர் ஆயுதங்களுடன் சஞ்சரித்துக் கொண்டி ருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணமாகும்.
இராணுவத் திலிருந்து தப்பி வந்தவர்கள் மட்டுமன்றி சிறையில் உள்ள பிரபல குற்ற வாளிகள் அங்கு இருந்துகொண்டே குற்றச் செயல்களை அரங்கேற்றுவது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.
எனவே இவ்வாறான சம்பவங்களின் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு இதன் பின்னர் இதனை ஒத்த சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கவும் வழிவகைக்ள் செய்யப்பட வேண்டும்.
-எம்.எப்.எம்.பஸீர்-
<iframe width=”540″ height=”360″ src=”//www.youtube.com/embed/LUHsMS9DJOM?feature=player_detailpage” frameborder=”0″ allowfullscreen></iframe>