முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தமிழர்கள் அனுஷ்டிக்க தூண்டுவது அரசாங்கமே. எத்தடைவரினும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் என்று வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். பல்கலைக்கழகமானது எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படுகின்றது என்று பதிவாளர் அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்த அறிவிப்பு தொடர்பாக எந்தவிதமான காரணங்களும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
எதிர்வரும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் உலகெங்கிலும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்.பல்கலைக்கழத்தில் மாணவர்கள் முள்ளிவாய்;க்கால் நினைவு தினத்தை அனுஷ்டித்து விடுவார்;களோ என்ற அச்சத்தில் பல்கலைக்கழகத்திற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பல 10 ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட நாளை தமிழர்கள் எவ்வாறு எளிதில் மறந்துவிடுவார்கள். அவ்வாறு தமிழ் மக்கள் மறக்க நேரிட்டாலும் இந்த அரசாங்கம் அவர்களின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க தூண்டும் என்பதில் ஐயமில்லை.
அவ்வாறே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க தூண்டும் வகையில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதையாரும் தடுத்து விட முடியாது. எத்தகைய முட்டுக்கட்டைகளை இந்த அரசு போட்டாலும், அடக்கு முறைகளைப் பிரயோகித்தாலும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கமுடியாது.
எத்தடை வரினும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும். கோவில்களிலோ தேவாலயங்களிலோ இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் வழிபாடுகளையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.