வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அடைகின்ற பாரிய வெற்றியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக வெளிவரும் தகவல்கள் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதற்கு அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முயற்சிககளை மேற்கொண்டுவருதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு புலம் பெயர் அமைப்புக்களும் நாட்டில் உள்ள தமிழ் இனவாத சக்திகளும் பாரிய சதித் திட்டம் ஒன்றை மேற்கொண்டுவருகின்றன.
விக்னேஸ்வரன் மூலம் இந்தத் தரப்பினர் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேறாமையின் காரணமாக இவ்வாறு அவரை வெளியேற்றுவதற்கு சதி முயற்சிகளை முன்னெடுக்கின்றனர் . ஆனால் இவ்வாறு வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை பதவியிலிருந்து விலக்கிவிட்டு அந்தப் பழியை அரசாஙக்த்தின் மீது சுமத்துவதற்கும் முயற்சிக்கின்றனர்.
அதாவது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிப்பதால் வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவி விலகிவிட்டார் என்று கூறுவதற்கு இனவாத சக்திகள் முயற்சிக்கின்றன. அந்த விடயம் எங்களுக்கு தெரிந்துவிட்டது.
மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை வடக்கு மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்பதே ஒரே நோக்கமாகும். அதற்காவே அனைத்து தரப்புக்களும் இணைந்து செயற்படவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து கோரிக்கை விடுத்துவருகின்றோம்.
வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வடக்கில் தேவையான அனைத்து விடயங்களையும் மத்திய அரசாங்கம் செய்திருந்தது. குறிப்பாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை நாங்கள் வலுப்படுத்தினோம். வடக்கில் மாவட்டங்களை இணைக்கும் வகையில் வீதிகளை அமைத்தோம். வடக்கு ரயில் பாதைக்காக 850 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுகின்றன.
இது மிகப்பெரிய தொகையாகும். அதாவது மத்தல விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்க செலவிடும் தொகைக்கு சமனாக இவ்வாறு அபிவிருத்திகள் செய்யப்படுகின்றன.
யாழ்ப்பாண மருத்துவனை சகல வசதிகளுடனும் காணப்படுகின்றது. அத்துடன் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் மருத்துவமனைகளை அமைத்துள்ளோம். கல்வி சுகாதாரம் விவசாயம் மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டே வட மாகாண சபையை உருவாக்கினோம்.
குறிப்பாக சில வெளிநாட்டு நிதி நேரடியாக வட மாகாண சபைக்கு செல்லுமளவுக்கு அனுமதி வழங்கியுள்ளோம் . இது ஒரு முறையற்ற செயற்பாடாக இருப்பினும் வட மாகாண சபைக்காக அதற்கு அனுமதியளித்துள்ளோம். அவ்வாறு சிறப்பான நிலைமைகள் காணப்பட்டும் கூட்டமைப்பினர் அரசாங்கத்தை குறைகூறுவதிலேயே குறியாக உள்ளனர். மாறாக வடக்கு மக்களுக்கு சேவையாற்ற எதுவும் செய்யவில்லை.
இந்த விடயத்தை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவரக்கூடாது. மாறாக மக்களின் நிகழ்ச்சிநிரலாக பார்க்கவேண்டும். வாக்குகளை எதிர்பார்த்து அரசாங்கம் வடக்கு மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்று கருதவில்லை. மாறாக அந்த மக்களுக்கு சேவையாற்றவேண்டியது அவசியமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளூராட்சி மன்றங்களும் மாகாண சபையும் உள்ளன. எம்மிடம் பாராளுமன்ற அதிகாரமும் நிறைவேற்று அதிகாரமும் உள்ளது. எனவே இரண்டு தரப்புக்களும் ஒன்றிணைந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்பதே எமது திட்டமாகும்.
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதிகமான சந்தர்ப்பங்களும் சாத்தியங்களும் காணப்படுகின்றன. ஆனால் கூட்டமைப்பினர் மததிய அரசாங்கத்தை குறைகூறுகின்றனரே தவிர சேவையாற்ற முன்வரவில்லை.
ஒருவேளை அரச இயந்திரம் செயற்படும் விதம் தொடர்பில் வடக்கு முதல்வருக்கு அனுபவங்கள் இல்லாமல் இருக்கலாம். எங்களுக்கே அவற்றை புரிந்துகொள்ள காலம் தேவைப்படுகின்றது. எனவே அவற்றை உரிய முறையில் புரிந்துகொண்டு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வட மாகாண சபை அதிகாரத்தில் இருப்போர் முன்வரவேண்டும்.
இது இவ்வாறு இருக்க வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை பொதுவேட்பாளராக களமிறக்கினால் அது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அடைகின்ற மிகப்பெரிய அரசியல் வெற்றியாக அமையும்.
காரணம் இதற்கு முன்னர் தமிழ் வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒரு கட்சியின் சார்பாகவே போட்டியிட்டுள்ளனர். ஆனால் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொது வேட்பாளராக களமிறக்கப்படுவாராயின் அதன்மூலம் இந்த நாட்டின் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அநீதிகளின்றி வாழ்கின்றனர் என்பது உறுதியாகும்.
அனைத்து இன மக்களும் அனைத்து உரிமைகளுடனும் இலங்கையில் வாழ்கின்றனர் என்பது இதன்மூலம் உறுதியாகும். எனவே விக்னேஸ்வரன் பொதுவேட்பாளராக வந்தால் அது எமக்கு கிடைக்கின்ற வெற்றியாகும்.
ஆனால் இந்த நாட்டின் உண்மையான பொதுவேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காணப்படுகின்றார். அனைத்து இன மக்களையும் சமூகங்களையும் அரவணைத்துக்கொண்டு ஜனாதிபதி பயணிக்கின்றார். அந்தவகையில் பார்க்கும்போது அவரே சிறந்த பொதுவேட்பாளராக இருக்கின்றார் என்றார்.