வேன் ஒன்றிலிருந்த 2 வயதான சிறுவன் வேனின் பின் கதவுக்கு ஊடாக வீதியில் வீழ்ந்ததை அறியாமல் அக்குழந்தையின் தாத்தாவான சாரதி பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த சம்பவம் சீனாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
ஜியாங்சு மாகாணத்தின் சுஸோஹு நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேற்படி சிறுவன் ஆச்சர்யகரமாக உயிர் தப்பியுள்ளான்.
இச் சிறுவன் வேனிலிருந்து வீழ்ந்த பின் தனியாக ஓடிச் செல்லும் காட்சி பின்னால் வந்த வாகனமொன்றின் டேஷ்கெம் கெமராவில் பதிவாகியுள்ளது.
போக்கு வரத்து நிறைந்த வீதியில் வீழ்ந்த இச்சிறுவன், சுதாகரித்துக் கொண்டு எழுந்தான். அதன்பின் அவ்வேன் சென்ற திசையை நோக்கி சிறுவன் ஓட ஆரம்பித்தான். எனினும், அப்போதும் மேற்படி வேன் நிறுத்தப்படவில்லை.
பின்னர் மற்றொரு வாகன சாரதி மேற்படி வேனை துரத்திச் சென்று அதன் சாரதியிடம் விடயத்தைக் கூறினார்.
பின்னர் அச்சாரதி திரும்பிவந்து, பெண் ஒருவரிடமிருந்து சிறுவனை பெற்றுக்கொண்டார்.
இச்சாரதி யாங் டெஃபு எனவும் அவர் மேற்படி சிறுவனின் தாத்தா எனவும் இனங்காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் கூறுகையில், “நான் சமிக்ஞை விளக்குக்காக காத்திருந்தேன். பின்னர் என்னை ஒரு காரின் சாரதி துரத்திவந்து ஹோர்ன் எழுப்பிக் கொண்டிருந்தார்.
எனது வேனிலிருந்து குழந்தையொன்று விழுந்ததாக அவர் கூறினார்.
அதன்பின் நான் வாகனத்தை நிறுத்திவிட்டு, எனது பேரனை தேடி திரும்பிச் சென்றேன்” என்றார்.
இவ்வானம் சில தினங்களுக்குமுன் பின்புறம் அடிபட்டதால் பின்புறக்கதவு தொய்வாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
வேனிலிருந்து சிறுவன் வீழ்ந்தபோது பதிவாகிய வீடியோவை கீழே காணலாம்.