வவுனியா, கனகராயன்குளத்தைச் சேர்ந்த  செல்வராஜா சரண்ஜா என்ற 16 வயதுடைய சிறுமியின் சடலம் இன்று (6.4) சட்ட வைத்திய பரிசோதனைக்காக மன்னகுளம் மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
imagesகடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா, கனகராயன்குளம், மன்னகுளத்தில் வசித்து வந்த செல்வராஜா சரண்ஜா என்ற சிறுமி சுகவீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்திருந்தார்.இருப்பினும் அவர் கூட்டு வன்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக வைத்திய அதிகாரி தெரிவித்ததாக உறவினர்கள் பொலிசாரிடம் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் இச் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டதையடுத்து சட்டத்தரணிகள் ஊடாக வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.சிறுமியின் மரணம் தொடர்பாக வைத்திய அறிக்கையிலும் குழப்பமான நிலை காணப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நீதிமன்றத்தினால் மார்ச் மாதம் 6 ஆம் திகதி சடலத்தை தோண்டியெடுத்து கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டடிருந்தது.

இதனடிப்படையில்,  பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மன்னகுளம் மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்திற்கு நீதிமன்ற  உத்தரவிற்கமைய பொலிஸாரினால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு மாதமும் 8 நாட்களும் கடந்த நிலையில் வவுனியா மாவட்ட நீதிவான் முகமட் ரிஸ்வான், யாழ் மாவட்ட சட்ட வைத்திய நிபுணர் ருத்திரபதி மயூரதன்,  கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இதனையடுத்து உறவினர்களிடம் சடலம் அடையாளம் காண்பதற்காக பார்வையிடப்பட்டதன் பின்னர் கனகராயன்குளம் பொலிஸாரால் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி

கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கனகராயன்குளம் சிறுமி சரண்யாவின் மரணம்: அதிர்ச்சி தகவல்!!

– கரிகாலன்-
Share.
Leave A Reply

Exit mobile version