ilakkiyainfo

இராணுவத்தினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 37

பிரபாவின் செய்தி

இலங்கை அரசு   தேசியப் பாதுகாப்பு நிதியை ஆரம்பித்தவுடன் புலிகள் ‘தமிழீழ தேசிய பாதுகாப்பு’ நிதியை ஆரம்பித்தது பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன்.

அதனை முன்னிட்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்ளுக்கு பிரபா விடுத்த செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“தமிழீழ அரசியல் வராற்றில் என்றுமில்லாத ஒரு சோதனையான நெருக்கடியான காலகட்டத்தை  நாம் எதிர்நோக்கிய வண்ணம் இருக்கிறோம்.

pirapaகொடுங்கோன்மையான இராணுவ ஆட்சி எம்மீது திணிக்கப் பட்டிருக்கிறது. ஆயுத பலாத்காரத்தை கட்டவிழ்த்து விட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளை கொன்றுவிட அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கின்றது.

அடக்குமுறை எந்தளவிற்கு தீவிரமாகிறதோ அவ்வளவிற்கு மக்களிடம் புரட்சியுணர்வு  பிறக்கிறது விடுதலை வேட்கை எழுகிறது விழிக்புணர்வு தோன்றுகிறது.

எமது ஆயுதப்போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத அரசு தனது ஆவேசத்தை அப்பாவி மக்கள்மீது கட்டவிழ்த்து விடுகிறது.

பொதுமக்கள் போராளிகளுக்கு எதிராக திருப்பிவிடலாமென்பதே அரசின் நோக்கம். இதனை நாம் நன்கறிவோம். அதேவேளை இந்தச் சிக்கலைத் தவிர்த்துக்  கொள்ள நாம் ஆயுதப் புரட்சிப் போரை ஒத்திப் போடுவது அசட்டுத்தனமாகும்.

இராணுவ அடக்குடுமுறையால் தமிழினத்தை ஒதுக்கிவிட முடியாது என்பதை உணர்த்த இராணுவத்தை சதா பயங்கொள்ளச் செய்து பதற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும்.

எமது போராட்டத்தில் நாம் தனித்து நிற்கவில்லை. தமிழக மக்களின் ஒன்று திரண்ட மாபெரும் சக்தி எமக்கு பக்கபலமாக இருக்கிறது.

அகில இந்திய மக்களின் அனுதாபமும் எமது பக்கமே இருக்கும். எனினும் எமது விடுதலையைப் பெற்றுக்கொள்ள நாமே போராடியாக வேண்டும்.

என்பதுதான் பிரபாவின் செய்தி தற்போதைய நிலவரத்தோடு பிரபாவின் மனப்போக்கைப் புரிநடது கொள்ளவும் மேற்கண்ட செய்தி உதவுமல்லவா.

சந்திரகாசன் அழைப்பு

தந்தை செல்வநாயகத்தின் மைந்தன் எஸ்.சந்திரகாசன் ரெலோ அமைப்போடு தொர்பாக இருந்தது பற்றி முன்னர் கூறியிருந்தேன்.

84 இறுதியில் என்று நினைக்கிறேன் திரு.சந்திரகாசன் மூன்று தமிழ் அமைப்புக்களுக்கு அவசர அழைப்பொன்றை விடுத்திருந்தார்.

இந்திய அரசு தொிவித்த முக்கியமான செய்தியொன்றை தொிவிக்க வேண்டியிருக்கிறது. எனவே உடனடியாகத் தன்னை சந்திக்குமாறு அவர் செய்தியனுப்பினார்.

ரெலோ, ஈ.பழ.ஆர்.எல்.எஃப்ஈ, ஈரோஸ் ஆகிய மூன்று அமைப்புக்களும் கூட்டமைப்பாகசெயற்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.

அந்த மூன்று அமைப்புக்களுக்குமே அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

சந்திரகாசன் என்ன சொல்லப்போகிறார் என்று அறிந்துவர மூன்று அமைப்புக்களது பிரதிநிதிகளும் சென்னையில் உள்ள சந்திரகாசன் அலுவலகத்திற்குச் சென்றனர்.

ரெலோ சார்பாக சிறீ சபாரத்னம், மதி ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக பத்மநாபா, ரமேஷ் ஈரோஸ் சார்பாக பாலகுமார், முகிலன் ஆகியோர் அச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தி அரசு ஒரு திட்டத்தை தயாரித்திருக்கிறது என்றார் சந்திரகாசன்

“என்ன திட்டம்”?

இலங்கை படையினரைத் தோற்கடித்து தமிழீழத்தை உருவாக்குவதற்கு தேவையான ஆயுத உதவிகள் மூன்று தமிழ் அமைப்புக்களுக்கும் வழங்கப்படும்.

தமிழீழம் உருவாகிய பின்னர் அதனை இந்திய அரசு அங்கீகரிக்கும். அத்தோடு தமிழீழம் உருவாகிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான பொருளாதார உதவிகளை இந்தியா வழங்கும்.

 சந்திரகாசன்

என்று  சொன்ன சந்திரகாசன் மூன்று அமைப்புக்களது பிரதிநிகளிடம் கேட்டது இது.

“எவ்வளவு  ஆயுதங்கள் தேவை என்ற விபரத்தை என்னிடம் தொிவியுங்கள். நான் அதை அங்கு தொிவிக்கிறேன்.”

தமிழ் அமைப்புக்களது பிரதிநிதிகள் ஒருவர்முகத்தை ஒருவர் பார்த்ததுக் கொண்டார்கள்.

ரெலோ தலைவர் சிறீ சபாரத்னம் ஒரு கேள்வி எழுப்பினார்.

“நாமும் இந்திய அரசோடும் அதன் உளவு நிறுவனங்களோடும் தொர்புகளை வைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது உங்கள் மூலமாக இந’திய அரசு நம்மோடு எதற்காக தொடர்பு கொள்ள வேண்டும்?”

“அதுதானே” என்று சிறீயின் கருத்தை ஆமோதித்தனர் ஏனைய பிரதிநிதிகள்.

இறுதியாக சிறீ தெரிவித்தது இது.

“இந்திய அரசுக்கு ஏதாவது யோசனை இருந்தால் எம்மோடு நேரடியாக பேசுமாறு கூறுங்கள். இடையில் யாரும் தேவையில்லை”

அத்தோடு அந்த சந்திப்பு முடிவுற்றது.

இன்றுவரை புதிர்

சந்திரகாசனுக்கு அந்த யோசனை யார் தொிவித்தார்கள்? ஏன் தொிவித்தார்கள்? அல்லது தமிழ் அமைப்புக்களிடம் தனது செல்வாக்கை நிலைப்படுத்த அவராகவே அவிழ்த்துவிட்ட திட்டமா என்பது இன்றுவரை புதிர்தான்.

ஆனால் சந்திரகாசனுக்கு “றோ” எனப்படும் இந்திய ஆய்-பகுப்பாய்வுப் பிரி வோடு நல்ல தொடர்பு இருந்தது.

இலங்கை விவகாரத்தை “றோ” உளவு நிறுவனம் மூலமாகவே இந்திய அரசு கையாண்டது.றோவில் முக்கிய அதிகாரியாக இருந்தவர் உன்னிகிருஷ்ணன்.

உன்னிகிருஷ்ணனுக்கும் சந்திரகாசனுக்கும் நல்ல நெருக்கம். அந்த உன்னிகிருஷ்ணன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமொிக்க மத்திய புலனாய்வு நிறுவனத்தின்(சி.ஐ.ஏ )கையாளாக  ‘றோ’வில் இருந்து செயற்பட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார் உன்னிகிருஷ்ணன்.

உன்னிகிருஷ்ணன் மூலமாக தமிழ் போராளிகள், போராளி அமைப்புக்கள் பற்றிய விபரங்கள் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்திற்கு சென்றிருக்கலாம்.

சி.ஐ.ஏ.  மூலமாக அந்தத் தகவல்கள் யாவும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது நம்பப்பட்டது.

தூதர் வந்தார்

அமொிக்க அரசு ஜே.ஆர் அரசுக்கு சகல வழிகளிலும் உதவிக்கரம் நீட்டியே வந்தது.

10.12.1984 அன்று அமொிக்காவின் விசேஷ தூதுவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவரது பெயர் ஜெனரல் வோல்டர்ஸ். அப்போது அமொிக்க அதிபராக இருந்தவர் றீகன். அவரது தூதுவராகவே ஜெனரல் வோல்டர்ஸ் வந்திருந்தார்.

இவர் வந்த தினத்தன்றுதான் வடபகுதியில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 42 மணி நேர ஊரடங்கு முடிவடைந்தது.

42 மணிநேர ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு வீடாக இராணுவ சோதனை இடம்பெற்றது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் 300 பேர்வரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை போன்ற பகுதிகளில் 100 பேர்வரை பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதேவேளையில் கொழும்பிலும் மலையகத்திலும் தமிழர் விரோத உணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்தன.

மலையகத்தில் இரத்தினபுரியில் தமிழர்களுக்குச் சொந்தமான இரு கடைகளும் , ஹட்டனில் இரு கடைகளும் எரிக்கப்பட்டன. பதுளையிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.  7.12.84 அன்று இச்சம்பவங்கள் நடந்தன.

 

சுவரொட்டிகள்

இதேவேளை கறுப்பு நில வர்ணங்களில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

அச் சுவரொட்டிகளில் காணப்பட்ட வாசகம் இது:

தமிழீழம் கோருபவர்கள் ராஜதுரோகிகள். துரோகிகள் யாவரும் திருமலையில் இருந்து துரத்தப்பட வேண்டும்.

சிங்களவர்கள் யாழ்நகரில் வேலைபார்க்க முடியாது என்றால் தமிழர்கள் எவ்வாறு திருக்கோணமலையில் வேலைபார்க்க முடியும்?

இச் சுவரொட்டிகள் திருமலைத் தமிழ் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தின.

அச்சத்தை நியாயப்படுத்தும் விதமாக திருமலை மாவட்டத்தில் ஒரு சம்பவமும் நடந்தது.

திரியாயிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு  வருமாறு கிராம மக்கள் இராணுவத்தினரால் அழைக்கப்பட்டனர்.

அப்போது ஊரடங்கு உத்தரவும் அமுலில் இருந்தது. விளையாட்டு மைதானதடதிற்குச் சென்ற தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  நூறுபேர் படுகாயங்களோடு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொிய குளத்திலும் இது போல் ஒரு கோரச் சம்பவம் வீடுகளில் இருந்து வெளியே அழைக்கப்பட்ட தமிழர்களில் 20 பேர்வரை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

84 நவம்பர் மாதத்தில் திருகோணமலையில் ‘தென்னைமரவாடி’ என்னும் கிராமம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகச் சென்றனர்.

நடந்ததும் – செய்தியும்

வடக்கில் நடைபெற்ற கைதுகள் குறித்து ஜே.ஆர். அரசு வெளியிட்ட பொய்கள் கலப்படமில்லாதவை.

யாழ்ப்பாணம் கைதடியில் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தீடீரென்று அங்கு வந்த இராணுவத்தினர் மாணவர்களில் 200 பேரைக் கைது செய்து சென்றனர்.

இதனையடுத்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு பொய் சொன்னது:

“யாழ்பாணத்தில் பயங்கரவாதிகளின் மூன்றுமுகாங்களில் இருந்து துப்பாக்கிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவை கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.”

இதேவேளை தேசியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்தலலித் அத்துலத்முதலி ஒரு அறிவுப்புச் செய்திருந்தார்.

“பயங்கரவாதத்தை கைவிட்டு சரணடைய வேண்டும்” என்று தமிழ் போராளிகளை அவர் கோரியிருந்தார்.

லலித்  அத்துலத் முதலி

புலிகள் கடிதம்

இதனையடுத்து புலிகளால் லலித்  அத்துலத் முதலிக்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அக கடிதத்தில் சில முக்கிய பகுதிகள் இவை:

“திரு.அத்துலத் முதலி அவர்களே: அப்பாவி மக்களுக்கு எதிராக இனவாத யுத்தம் நடத்துகிறீர்கள். கிட்லரையும் வெல்லக் கூடிய முறையில் இனக் கொலைக் கலையில் நீங்கள் மிக வல்லவராயிருக்கிறீர்கள்.

ஓரின மக்களின் வராலாற்றில் பக்கத்துக்கு பக்கம் இரத்தமும், கண்ணீரும் காணப்படுவதற்கான பழியையும், பாவத்தையும் சுமக்கப் போகிறீர்கள்.

நீங்கள் ‘பயங்கரவாதம்’ என்று குறிப்பிடுவது  ஒடுக்கப்படும் மக்களின்  புரட்சிகர எதிர்ப்பேயன்றி வேறல்ல.

அரசு பயங்கரவாதம் பெற்றெடுத்த குழந்தையே தமிழீழத்தில் தோன்றியுள்ள ஆயுதப்போராட்டம்.  இதை உருவாக்கியவர்கள் நீங்களே.

இராணுவரீதியாக இதை நீங்கள் முறியடித்துவிட முடியாது. எமடமை ‘பயங்கரவாதிகள்’ என்பதால் தமிழர் பிரச்சனை தீரப்போவதில்லை.

உங்கள் இராணுவத் தீர்வு உங்களுக்கே அழிவை ஏற்படுத்தும்.

எங்களை நீங்கள் கண்டுகொள்ளவோ, அடையாளம் காணவோ முடியாது, ஏனெனில் நாம் எவ்விடத்திலும் இருக்கிறோ. இன்னும் சொல்லப்போனால் மக்களே நாம்தான்.

எவ்வளவு சக’தி வாய்ந்த அரசாக இருந்தாலும் மக்களுக்கு எதிரான போரில் அது வெற்றிவாகை  சூடியதில்லை.

எத்தகைய இன்னல்கள், இடர்பாடுகள் எதிர்ப்படினும் அவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்து எமது தமிழீழநாட்டை அமைத்தே தீருவோமம்.

இறுதியில் உலக மக்களின் மனச்சாட்சியில் நீங்கள் ஒரு குற்றவாளி ஆக்கப்படுவீர்கள்.

இராணுவ அணிக்குள் சிக்கிய புலிகளின் தளபதிகள்

வழிமறிப்பு

84இல் இலங்கை இராணுவத்தினர் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களை தேடி தீவிர வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் இது:

மோட்டார் சைக்கிள் ஒன்றில் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தனர்.

அதில் இரண்டு பேர் முக்கியமானவர்கள். ஒருவர் கிட்டு, அவர்தான் மோட்டார்சைக்கிளை செலுத்திக்கொண்டிருநடதார். பின்னால் இருந்தது சென்றவரில் ஒருவர் ரஞ்சன்லாலா.

இருவருமே யாழ் மாவட்டத்தில் புலிகளது பிரதான தளபதிகள்.

யாழ்-பருத்தித்துறை வீதி வழியாக அச்சுவேலி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

அச்சுவேலி பஸ் நிலையத்தை சென்றடைய முன்பாக வசாவிளான் வீதிச் சந்தி இருக்கிறது. அங்கு இராணுவத்தினர் நின்றனர் சோதனை நடவடிக்கையில்.

மோட்டார் சைக்கிள் இராணுவத்தினரால்மறிக்கப்பட்டது. கேள்விகள் தப்பிக்கொள்ளும் பதில்கள். கிட்டுவின் சட்டைப் பையில் சயனைட் குப்பி இருந்தது.

சயனைட் குப்பி இராணுவத்தினரின்கண்ணில் பட்டுவிட்டது.

அப்போது சயனைட் குப்பி பிரபலமாகாத காலம் எனவே “இது என்ன?” என்று கேட்டனர் இராணுவத்தினர்.

“தொய்வு நோய்க்குப் பயன்படுத்தும் மருந்து” என்று பதில் சொன்னார் கிட்டு. இராணுவத்தினருக்கு ஏதோ ஒரு சந்தேகம்.

மூவரில் ஒருவரை தமது ‘ட்றக்’ வண்டியில் ஏறுமாறு கூறினார்கள், மற்றைய இருவரையும் மோட்டார் சைக்கிளில் தமது வாகன அணிகளின் மத்தியில் வருமாறு கூறிலிட்டு புறப்பட்டனர்.

வீதியில் விபரீதம்

இராணுவ வாகன அணிக்கு மத்தியில் மோட்டார்சைக்கிளில் கிட்டுவும், ரஞ்சன்லாலாவும்.

அச்சுவேலி வசாவிளான் பாதையில் வாகன அணி சென்று கொண்டிருக்கிறது.

அந்த பாதையில் ‘மக்கோண’ என்று அழைக்கப்படும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி  இருக்கிறது. அதன் அருகே ஒரு ஒழுங்கையும் இருக்கிறது.

வாகன அணி மத்தியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திடீரென்று அந்த ஒழுங்கைக்கு திருப்புகிறார் கிட்டு.

இராணுவ வாகனங்கள் சட்டென்று நிறுத்தப்பட்டன. மோட்டார் சைக்கிள் 50 யார் தூரம்வரை சென்று விடுகிறது.

அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.

(தொடர்ந்து வரும்)

(முன்னைய தொடர்களை  பார்வையிட இங்கே  அழுத்தவும்:  அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை..1..2…3..4…………….37)

Exit mobile version