காணாமற்போன மூதாட்டியினை தேடி அலைந்த உறவினர்களுக்கு, காகங்கள் அடையாளம் காட்டியதனால் பற்றைக்குளிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மதியம் யாழ்ப்பாணம் கொட்டடியில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த இளைதம்பி சொர்ணம்மா (வயது -90) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி திருமணம் செய்யாத நிலையில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த 25ஆம் திகதி மாலை மூன்று மணிவரை வீட்டில் இருந்தவர் திடீரென காணாமற்போயுள்ளார்.
உறவினர்கள் எங்கும் தேடிய நிலையில் அன்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் வீட்டின் பின் புறத்தில் உள்ள பற்றைகாட்டினை சுற்றி காகங்கள் நீண்டநேரமாக கரைந்தவண்ணம் இருந்துள்ளன.
காகங்களின் போக்கினை அவதானித்து சந்தேகம் கொண்டு பற்றைக்காட்டிக்குள் சென்று பார்த்த போது காணமற்போன மூதாட்டி அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.