ilakkiyainfo

ஹைதராபாத் ஆணவ கொலை: முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த இந்து இளைஞர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் கலப்புத் திருமணம் செய்த இந்து இளைஞரான நாகராஜ், அவரது முஸ்லிம் மனைவியின் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அஷ்ரினும் நாகராஜும் கடந்த 7 ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருந்தனர், அவர்கள் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் வெவ்வேறு மதங்களைக் கொண்டிருந்தனர். அதனால் நாகராஜ் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது,” என்று கூறினர்.

நாகராஜ், மாலா பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இருவரும் ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். அஷ்ரினின் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

மே 4ஆம் தேதி இரவு 9 மணியளவில் சரூர் நகர் முனிசிபல் அலுவலகத்தில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள பஞ்சா அனில் குமார் காயத்ரி காலனி சாலையில் பொதுமக்கள் வேடிக்கை பார்க்க நாகராஜ் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், அஷ்ரினின் காதலை அவரது சகோதரர் சையது மொபீன் அகமது விரும்பவில்லை என்றும் பல முறை தமது சகோதரியிடம் இருந்து விலகி இருக்குமாறு அவர் நாகராஜை எச்சரித்திருந்தது தெரிய வந்ததாக கூறினர்.

மாற்று ஜாதி பெண்ணை காதலித்த இளைஞர் மர்ம சாவு – என்ன நடந்தது?
கண்ணகி – முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு: ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை

உயிர் பயத்தால் வெளியூர் சென்ற ஜோடி

போலீஸ் கூற்றுப்படி, விகாராபாத்தில் தங்கியிருந்த நாகராஜ், பின்னர் ஹைதராபாத் திரும்பி வந்து கார் விற்பனை ஷோரூமின் விற்பனைப் பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். நாகராஜ் அடிப்படையில் சரூர் நகரில் உள்ள விருந்தாவன் காலனியை சேர்ந்தவர்.
தெலங்கானா ஆணவ கொலை

கடந்த ஜனவரி மாதம் விகாராபாத் சென்ற நாகராஜ், அஷ்ரின் சுல்தானாவைச் சந்தித்தார். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால், இதற்கு தன் வீட்டில் சம்மதம் கிடைக்காது என்பதை உணர்ந்த அஸ்ரின், நாகராஜை வீட்டார் சம்மதமின்றி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

தனது வீட்டை விட்டு வெளியேறும்போது செல்பேசியை வீட்டிலேயே வைத்து விட்டு இந்த ஜோடி சென்றனர்.

இருவரும் ஹைதராபாதை அடைந்து ஜனவரி 31ஆம் தேதி ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே, அஷ்ரினை காணவில்லை என அவரது குடும்பத்தினர் பாலாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி அஸ்ரின் மற்றும் நாகராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இருவரும் 18 வயதை கடந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்திய பிறகு இரு குடும்பத்தினரும் போலீஸார் அழைத்து கவுன்சலிங் கொடுத்தனர்.

திருமணத்திற்கு நாகராஜின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் நாகராஜ் மீது அஸ்ரினின் குடும்பத்தாருக்கு நம்பிக்கை வரவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதனால் தங்களுக்கு ஏதேனும் நேரலாம் என்று அஞ்சி இந்த ஜோடி சில நாட்களுக்கு ஹைதராபாத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

அவர்கள் விசாகப்பட்டினத்தில் சில காலம் வாழ்ந்தனர். பிறகு எல்லாம் இயல்பு நிலைக்கு மாறியதாகக் கருதி மீண்டும் ஹைதராபாத் திரும்பினார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மொபீன் (30), மசூத் அகமது (29)

இதேவேளை, நாகராஜையும் அஷ்ரீனையும் அவர்களுக்கே தெரியாமல் மொபீன் பின்தொடர்ந்து வந்துள்ளதாக போலீசார் கூறினர்.சம்பவ நாளன்றி, நாகராஜின் பைக்கை சம்பவ இடத்தில் நிறுத்தி கண்மூடித்தனமாக அவரை தாக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாயின.

அஷ்ரீன் தனது அண்ணன் மற்றும் அண்ணி பாதிமலேவுடன் இருக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கதறி அழும் காட்சிகள் இருந்தன.

மொபீன் தனது கையில் வைத்திருக்கும் கம்பியால் நாகராஜின் தலையில் தாக்கியபோது, ​​மசூத் அகமது நாகராஜை வாளால் வெட்டும் காட்சியை காணொளியில் பார்க்க முடிகிறது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அந்த பக்கத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரும் திரண்டனர்.

ஆனால், குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை எவரும் தடுக்கவில்லை. வேறு சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், போலீசார் வருவதற்குள் நாகராஜ் இறந்து கிடந்தார்.

மொபீன் அகமது ஒரு பழ வியாபாரி. அவருடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் மசூத் அகமது ஒரு கார் மெக்கானிக்.நாகராஜ் கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்ததும், அவரது பெற்றோர் ஹைதராபாத் வந்தனர்.

தங்களின் மகனைக் கொன்றவர்களைக் கடுமையாகத் தண்டித்து, தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.”என் மகன் இடைநிலைக்கல்வி வரை மட்டுமே படித்தவன்.

ஹைதராபாதில் வேலை செய்து கொண்டிருந்தான். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தான். எனது மகன் காதல் திருமணம் செய்து கொண்டது தெரியாது. எங்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டான். எனது உறவினர்கள் சரூர் நகரில் வசிக்கின்றனர்.

திருமணம் முடிந்து எனது மகன் சரூர் நகரில் அடக்கம் செய்யப்பட்டார். எனது மகனைக் கொன்றவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்,” என்றார் நாகராஜின் தந்தை.

 

பாஜக, விஹெச்பி தலைவர்கள் தலையீடு

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தலையிட்டுள்ளனர்.

“பட்டப்பகலில் ஒரு இந்து இளைஞரை கொடூரமாக கொலை செய்துள்ள செயல் கண்டிக்கத்தக்கது மற்றும் “இந்து ஆண்களை திருமணம் செய்வதிலிருந்து முஸ்லிம் பெண்களைத் தடுக்கும் மத கொலை இது” என்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் மற்றும் கரீம் நகர் எம்.பியுமான பண்டி சஞ்சய் குமார் தெரிவித்தார்.

“இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ள மத ரீதியிலான சக்திகள் மற்றும் அமைப்புகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் மதச்சார்பற்ற கட்சிகள், அறிவுஜீவிகள் மற்றும் தாராளவாத ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

“மிரியாலகுடா ஆணவ கொலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முற்போக்குக் குரல்கள் இப்போது மௌனம் சாதிப்பது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

2018ஆம் ஆண்டில், உயர் சாதி பெண்ணைத் திருமணம் செய்ததற்காக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

தெலங்கானா கொலை

இந்த நிலையில், நாகராஜ் கொலை வழக்கில் மத ரீதியிலான பின்னணி ஏதும் உள்ளதா என இப்போதே கூற முடியாது என்று நகர காவல்துறையின் துண ஆணையாளர் சன்ப்ரீத் சிங் தெரிவித்தார்.

குற்றவாளிகள் எந்த நோக்கத்துக்காக நாகராஜை கொலை செய்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

இதேவேளை, சம்பவத்தில் தொடர்புடையதாக இரண்டு பேரை கைது செய்துள்ளோம். நாகராஜின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சிலரிடம் விசாரணை நடத்துவோம் என்று நகர காவல்துறை உதவி ஆணையாளர் பி. ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார்.

நாகராஜை தாக்கியவர்களில் தனது சகோதரனை மட்டுமே அடையாளம் தெரியும் என்றும், மற்றவர்களை தனக்குத் தெரியாது என்றும் அஷ்ரீன் தெரிவித்துள்ளார்.

சம்பவ நாளில் தமது கணவரை வெட்டிச் சாய்த்தபோது அவரை காப்பாற்றுமாறு அங்கு வேடிக்கை பார்த்தவர்களிடம் அஷ்ரீன் கெஞ்சியுள்ளார். ஆனால் அவரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்று அஷ்ரீன் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

திருமணமான சில மாதங்களிலேயே காதல் கணவரை பறிகொடுத்த சம்பவத்தில் அஷ்ரின் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

இந்த சம்பவத்தில் இருந்து அவர் மீள்வதற்கு மேலும் சில காலம் ஆகலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

Exit mobile version