சிசிடிவியில் பதிவான கடத்தல்: இளம்பெண்ணை ஸ்கார்பியோ கார், ஆயுதங்களுடன் வீடு புகுந்து கடத்திய இளைஞர்

மயிலாடுதுறையில் தன்னிடம் பழகுவதை நிறுத்திய பெண்ணை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக அப்பெண்ணை கடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பெண்ணை மீட்டுள்ள போலீசார், தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (34). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அதன்பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசார் இருதரப்பினரையும் அழைத்துப்பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இதுகுறித்தும் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 15க்கும் மேற்பட்டோர், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களை தேடி வந்தனர்.

அப்பெண்ணை முன்பு கடத்த முயற்சித்த சிசிடிவி காட்சி

இந்நிலையில், கடத்திச் சென்ற விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று பேரை விக்கிரவாண்டி போலீசார் டோல்கேட் அருகே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அப்பெண்ணையும் மீட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version